Monday, June 29, 2009

முப்பதாயிரத்தில் ஒரு குறும்படம்


முதல் தலைமுறை


‘சாமி! புள்ளையாரப்பா! எப்பிடியாவது என்னை கணக்குலயும் இங்கிலீஷ்லயும் மட்டும் பாஸ் பண்ண வச்சுடு. அப்பிடியே கந்தசாமி வாத்தியாரை மட்டும் வேற ஸ்கூலுக்கு மாத்திடு!’ இப்படி அரசமரத்தடி பிள்ளையாரிடம் வேண்டிக் கொள்கிற கிராமத்துச் சிறுவர்களை நிச்சயம் பார்த்திருப்போம். அப்படி ஒரு சிறுவனை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் குறும்படம்தான் ‘முதல் தலைமுறை.’

இந்தப் படத்தை இயக்கியிருக்கும் விஜயன் சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் பர்மா பஜாரில், இசைக் கருவிகளை விற்கும் ஒரு கடையை நடத்தி வரும் சாதாரண தெருக்கடை வியாபாரி. வடசென்னை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாராக இருக்கிறார்.

“ஆறு மாசத்துக்கு முன்னாடி ‘பதிமூணில் ஒண்ணு’ன்னு ஒரு சிறுகதையைப் படிச்சேன். எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அந்தச் சிறுகதையை எழுதியிருந்தார். அதைப் படிச்சவுடனேயே அதை எப்பிடியாவது படமா எடுத்துடணும்னு தோணிச்சு. தோழர்களோட உதவியோட குறும்படமா எடுத்துட்டேன். மொத்தம் ஏழு நாள் ஷூட்டிங் நடந்தது. ஆவடி பக்கத்துல இருக்குற பாண்டேஸ்வரம், சென்னையிலருந்து இருபத்தஞ்சு கிலோ மீட்டர் தூரத்துல இருக்குற ஞாயிறு கிராமம்னு பல இடங்களுக்குப் போய் படமெடுத்தோம். அந்த கிராமத்துல இருக்குற மக்களுக்கு குறும்படம்ங்கறதே புதுசான ஒண்ணா இருக்குது. அது நல்ல அனுபவம்” என்கிறார் இயக்குநர் விஜயன்.

சரி. ‘முதல் தலைமுறை’ குறும்படத்தின் கதை என்ன?

நடராஜன். ஒன்பதாவது முடித்துவிட்டு பத்தாம் வகுப்புக்குப் போகும் கிராமத்துச் சிறுவன். அவனுடைய அப்பாவுக்கு ஆடு மேய்ப்பதுதான் பரம்பரைத் தொழில். ‘படித்தது போதும். ஆடு மேய்க்கப் போ!’ என்கிறார் அப்பா. அவனுடைய மாமா பட்டாளத்தில் இருந்தவர். படிப்பின் அருமை தெரிந்தவர். அவர் படிப்பு முக்கியம் என்று அவன் அப்பாவிடம் வலியுறுத்துகிறார். படிக்கப் போகிறான் நடராஜன்.

தமிழ்நாட்டு கிராமத்து மாணவர்களுக்கே உரித்தான சாபம் கணிதமும் ஆங்கிலமும். அது நடராஜனையும் விட்டுவைக்கவில்லை. குறைந்த மார்க் வாங்கியதற்காக வறுத்தெடுக்கிறார் கணக்கு வாத்தியார். கணக்கில் பாஸாகவேண்டும் என்பதற்காகவே குலசாமியான சுடலை மாடசாமியில் இருந்து மாறி, மேட்டுத் தெருப் பையன்கள் கும்பிடும் பிள்ளையாரைக் கும்பிடுகிறான் நடராஜன். பிறகு, அந்தக் கணக்கு வாத்தியாரிடமே ட்யூஷன் சேருகிறான். கணக்கில் பாஸாகிறான்.

அடுத்து ஆங்கிலத்தில் பாஸாகவேண்டும் என்பதற்காக அடுத்த ஊரில் இருக்கும் சர்ச்சுக்கு நடந்தே போய் வேண்டிக்கொள்கிறான். பிறகுதான் தெரிகிறது, இயேசுநாதருக்கே ஆங்கிலம் தெரியாது, அவருடைய தாய் மொழி ஹீப்ரு என்பது. அந்தச் சமயத்தில் அவனுடைய பள்ளிக்குப் புதிதாக வருகிறார் ஒரு ஹெட்மாஸ்டர். கருணை அடிப்படையில் இதுவரை பாஸாகிவந்த பதிமூன்று மாணவர்களின் பெற்றோர்களை அழைக்கிறார். ‘இதோ பாருங்க! நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட். இனிமே நான் இந்த ஸ்கூலுக்கு நல்ல ரிசல்ட் காண்பிக்கணும். உங்க பசங்களை வேற ஏதாவது ஸ்கூல்ல சேத்துவிட்டுடுங்க’ என்று ஒரே போடாகப் போடுகிறார். அந்தப் பதிமூன்று மாணவர்களில் நடராஜனும் ஒருவன். இந்தப் பள்ளியைவிட்டால் நடராஜன் வேறு எங்கே போவான்? அவனுடைய தலைமுறையிலேயே முதன்முதலாக படிக்கவந்தவன் அவன். எப்படியாவது அவனைத் திரும்ப பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டி, நடராஜனும் அவனுடைய மாமாவும் திரும்பத் திரும்ப ஹெட்மாஸ்டரைப் பார்க்கப் படையெடுக்கிறார்கள். அத்தோடு முடிகிறது படம்.

“இந்தப் படத்தை சென்னை புத்தகக் கண்காட்சியிலயும் சேலத்துலயும் திரையிட்டோம். சேலத்துல ஒரு தலைமையாசிரியர் ‘இது ஆசிரியர்களுக்கு எதிரா இருக்கு’ன்னு சொன்னார். ‘ஒரு படைப்புன்னா சில குறைகளை சுட்டிக்காட்டத்தான் செய்யும்’னு இதுக்கு தமிழ்ச்செல்வனே பதில் சொன்னார்”என்கிறார் விஜயன்.

நடராஜனாக நடித்திருக்கும் நிஜந்தனும் மாமாவாக நடித்திருக்கும் இசையரசனும் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். முரளிதரனின் உறுத்தாத இசையில் நா.வே. அருளின் இரண்டு பாடல்களும் இனிமை. கரிசல் காட்டு கிராமத்துக்கே நம்மை அழைத்துப் போய்விடுகிறது புதுயுகம் நடராஜனின் கேமரா.

ஒரு பக்கம், முப்பது கோடி, முந்நூறு கோடி என்று படா பட்ஜெட்டுகளில் திரைப்படங்கள் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கின்றன. எளிமையான, நல்ல சேதியைச் சொல்லும் இந்தக் குறும்படத்தின் மொத்தச் செலவு எவ்வளவு தெரியுமா? முப்பதாயிரம் ரூபாய்.

நாட்டின் ஜீவனாக இருப்பது கிராமங்களா? ஆம். நிச்சயமாக. அப்படியானால் அரசுப் பள்ளிகளில் மட்டும் கல்வித்தரம் கொஞ்சமும் உயராமல் இருப்பது ஏன்? இந்தக் கேள்வி குறும்படம் பார்த்து முடிந்ததும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

Friday, June 19, 2009

பகத்சிங் நூல் விமர்சனம்


பகத்சிங் - செவிகளைச் சாய்த்த குரலொலி

இந்நூலின் முதல் அத்தியாயத்தின் தலைப்பு ‘முற்றும்'. இதிலிருந்தே பகத் சிங் என்கிற போராளியின் வாழ்க்கை அவரோடு முடிந்துவிடவில்லை என்பதை சூசகமாக உணர்த்திவிடுகிறார் நூலாசிரியர் முத்துராமன்.

‘இந்திய விடுதலைப் போராட்டம்' என்கிற மாபெரும் கடலில் ஒரு அலைதான் பகத் சிங். சாதாரண அலை அல்ல. ஆழிப் பேரலை. ஆங்கில ஏகாதிபத்தியத்தை புரட்டிப்போட வந்த மாபெரும் அலை. ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ‘இன்குலாப் ஜிந்தாபாத்' என்று ஓங்கி ஒலித்த பகத் சிங்கின் முழக்கத்தைப் போல ஒரு குரலை அதற்கு முன்பு அந்த நாடாளுமன்றம் கேட்டிருக்கவில்லை.

ஆட்கள் நடமாட்டமில்லாத இடமாகப் பார்த்து அவர் வீசிய வெடி குண்டால் யாருக்கும் சிறு காயம்கூட ஏற்படவில்லை. ஆனால், இங்கிலாந்தில் இருந்துகொண்டு, இந்தியாவை காலனி நாடாக ஆண்டுகொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரவர்க்கத்தின் செவிகள் புண்ணாகிப் போயின. அதிர்ந்துபோனது வெள்ளை அரசு. பகத் சிங்கின் முழக்கத்துக்குத் தண்டனை கொடுத்தது. தூக்குக் கயிறு.

இன்றைக்கும் இந்தியாவில், எத்தனையோ இளைஞர்களுக்கு, சமூகச் சீர்கேடுகளைக் களையப் போராடும் இளைஞர்களுக்கு பகத் சிங்தான் ரோல் மாடல். இந்நூலில் பகத் சிங்கின் சரித்திரம் அழுத்தம் திருத்தமாகச் சொல்லப்படுகிறது.

ஒரு போராளியின் வாழ்க்கை என்பது வெறும் சரித்திரம் மட்டுமல்ல. அது ஒரு பாடம். ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். கற்றுக்கொண்டு அதன்வழி நடக்கவேண்டிய ஒரு பாடம். நூலைப் படித்து முடித்ததும் இப்படித்தான் தோன்றுகிறது.

பகத் சிங், சுகதேவ், ராஜகுரு மூவரையும் தூக்கிலேற்றுகிறார்கள் போலீஸ்காரர்கள். சிறைச்சாலையின் பின்வாசல் வழியாக அவர்களுடைய உடல்களைக் கொண்டுவந்து ஒரு டிரக்கில் ஏற்றுகிறார்கள். டிரக் சிறைச்சாலையிலிருந்து கிளம்பி ஒரு நதிக்கரையில் வந்து நிற்கிறது. அது சட்லெஜ் நதியிலிருந்து பிரிந்து ஓடும் ஒரு சிறிய நதி. அந்த நதிக்கரையில் மூவரின் உடல்களும் அரைகுறையாக எரிக்கப்பட்டு, நதியில் வீசப்படுகிறது. இந்தத் தகவல்களை உள்ளடக்கித் தொடங்குகிறது முதல் அத்தியாயம். அதற்குப் பிறகு அவருடைய குடும்பப் பின்னணி, அவருடைய பிறப்பு, இளமைப் பருவம், போராட்டம் என விரிகிறது.

மிகுந்த கவனத்துடன், கொஞ்சம்கூட உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் பகத் சிங்கின் வரலாற்றைச் சொல்கிறார் எழுத்தாளர் முத்துராமன். வரலாற்றை எந்தப் பக்கமும் சாயாமல் நேர்மையாகச் சொல்லவேண்டும் என்கிற தெளிவும் எழுத்தில் தெரிகிறது. ஆனால், நூலைப் படிக்கும்போது நம்மால் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியவில்லை.

பகத் சிங் சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் அவருடைய போராட்டம் ஓயவில்லை. ‘சிறையில் அரசியல் கைதிகளாக நடத்தப்படவேண்டும்', ‘அடிப்படை வசதிகள் வேண்டும்' போன்ற ஏழு கோரிக்கைகளை உள்ளடக்கி போராட்டம் நடத்துகிறார்கள் பகத் சிங்கும் அவருடைய தோழர்களும். சிறையில் அறுபத்து மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்த ஜதீந்திரநாத் தாஸ் இறந்துபோகிறார்.

“நமது கருணை நிறைந்த சர்க்கார் நீரோ மன்னனை மிஞ்சிவிட்டது. அந்த வாலிபர்களின் மரணப்படுக்கையில் உட்கார்ந்துகொண்டு வயலின் வாசிக்கிறது. தியாகமும் கடமை உணர்வும் கொண்ட இளைஞர்கள் உயிரை விடுவார்களே தவிர, உண்ணாவிரதத்தை இடையில் நிறுத்த மாட்டார்கள்” என்று சொல்லி, அடுத்த நாள் மத்திய சட்டமன்றத்தை ஒத்தி வைக்கிறார் மோதிலால் நேரு.

இப்படிச் சின்னச் சின்னத் தகவல்களையும் பொருத்தமான இடத்தில் குறிப்பிட்டிருக்கிறார் நூலாசிரியர். அந்தத் தகவல்கள் பகத் சிங்கின் வரலாற்றைச் சரியாகப் புரிந்துகொள்ள வழிவகுக்கின்றன. மிக எளிமையான நடை, நூலோடு ஒன்றிப் போகச்செய்துவிடுகிறது. உண்மைச் செய்திகளை மட்டுமே எழுத்தில் கொண்டுவரவேண்டும் என்கிற நூலாசிரியரின் தீர்மானம் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறது. இதற்கு உதாரணம், பகவதி சரணின் மனைவி துர்காவுடன் ரயிலில் ஏறி பகத் சிங் லக்னோவுக்குத் தப்பிச் சென்ற நிகழ்வில் நூலாசிரியர் இப்படி எழுதுகிறார்: “இந்தச் சம்பவம் வரலாற்றில் அவரவர் விருப்பம்போல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.”

மேலும், பகத் சிங், சுகதேவுக்கு எழுதிய கடிதம், நாடாளுமன்றத்தில் பகத் சிங் வீசிய துண்டுப் பிரசுரத்தின் முழு உள்ளடக்கம், லாகூர் சிறை அதிகாரிக்கு பகத் சிங் எழுதிய கடிதம், பட்டுகேஷ்வர தத்துக்கு எழுதிய கடிதம், பகத் சிங்கின் கடைசிக் கடிதம் ஆகியவை முழுமையாக இடம்பெற்றிருக்கின்றன. பகத் சிங்கை, அவருடைய வாழ்க்கையை, அவருடைய லட்சியத்தைப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் நிச்சயம் உதவும்.

நாடாளுமன்றத்தில் பகத் சிங் வீசிய, ‘ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் ஆர்மி'-யின் துண்டுப் பிரசுரம் இப்படிச் சொல்கிறது:

“மனித வாழ்வின் புனிதத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. மனிதனின் வளமான எதிர்காலத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. அத்தகைய எதிர்காலம் குறித்து நாங்கள் கனவு கண்டுகொண்டிருக்கிறோம். உண்மைதான். ஆனால், இப்போது நாங்கள் ரத்தம் சிந்தும்படி நிர்பந்திக்கப்படுகிறோம். அதற்காக வருத்தப்படுகிறோம்.”

0

நூல்: துப்பாக்கிவிடு தூது
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018.
விலை: ரூ. 70/-

புத்தகத்தை வாங்க.

Wednesday, June 17, 2009

அசோகமித்திரன் நேர்காணல்


‘அச்சுக் கோப்பவர்கள்தான் என் ஆசான்கள்’

-அசோகமித்திரன்



தமிழின் முக்கியமான நாவல்களாக கருதப்படும் ‘தண்ணீர்’, ‘இன்று’, ‘18வது அட்சக்கோடு’, ‘மானசரோவர்’ ஆகியவற்றை எழுதிய அசோகமித்திரன், 1931-ம் ஆண்டு, செப்டெம்பர் 22-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள சிகந்தராபாத்தில் பிறந்தவர். இயற்பெயர் ஜ. தியாகராஜன். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழில் எழுதி வருபவர்.

இவரது பல படைப்புகள் பிற இந்திய மொழிகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட அயல் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 1996-ம் ஆண்டு, இவருடைய ‘அப்பாவின் சிநேகிதர்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார்.

ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் சில காலம் பணியாற்றியவர். அவருடைய படைப்புகளைப் போலவே நாம் கேட்கும் கேள்விகளுக்கான பதில்களும் கூர்மையாக இருக்கின்றன. இனி அவருடன் நேர்காணல்...

கேள்வி:உங்கள் கதைகளுக்கான மொழியை எப்படி உருவாக்கிக்கொண்டீர்கள்? அதுவரை தமிழில் பயன்பாட்டில் இல்லாத மொழி உங்களுடையது. மிகவும் அப்ஜெக்ட்டிவ்வாக, செய்தி சொல்லும் தொனி அதில் இருக்கிறது. இதை எப்படி உருவாக்கிக்கொண்டீர்கள்?

அசோகமித்திரன்: நானாகத் திட்டமிட்டு என் நடையை உருவாக்கிக்கொள்ளவில்லை. உ.வே. சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’ படைப்பை ஆனந்த விகடனில் தொடராக வந்தபோது என் எட்டாவது வயதில் படித்தேன். கல்கியின் ‘தியாக பூமி’யையும் அதே காலத்தில் படித்தேன். உண்மையில் என் நடையை அப்படைப்புகள்தான் உருவாக்கியிருக்க வேண்டும்.

கேள்வி: தமிழ்க் கதைகளுக்குள் ஆசிரியரின் குரல் உரத்து ஒலிப்பது என்பது ஒரு பாணி. நீங்கள் அதை முற்றிலும் தவிர்த்துவிட்டீர்கள். முப்பது முப்பத்தைந்து ஆண்டுகள் கழித்து இன்று அது ஓர் முக்கிய எழுத்துப் பாணியாகவே வளர்ந்திருக்கிறது. இதை எப்படி செய்தீர்கள்?

அசோகமித்திரன்: ஆசிரியரின் குரல் ஒரேயடியாக இல்லை என்று கூறமுடியாது. ஒரு குரல் இருக்கிறது. ஆனால், உங்களை வற்புறுத்தும் குரல் அல்ல. ஓர் நண்பனுக்கு யோசனை கூறுவது போல அக்குரல் உள்ளது.

எழுத்துப்பணியும் ஓரளவு அதுவாக அமைந்ததுதான். அந்த நாளில் 35 வயதில் வேலை கிடைப்பது மிகவும் கடினம். ஓர் வேலைக்காக நான் கார் ஓட்டும் உரிமம்கூடப் பெற்றேன். எனக்கு வேலை தேடிக்கொள்ளத் தெரியவில்லை என்றுதான் கூறவேண்டும். எழுதும் எதையும் திருத்தமாகச் செய்யவேண்டும் என்று என் பள்ளி நாட்களிலிருந்தே தீர்மானமாக இருந்தேன்.

கேள்வி: 70களில் மாற்று அரசியல், மாற்று கலை இலக்கிய முயற்சிகள் நிறைய நடந்தன. தமிழில் முக்கிய எழுத்தாளர்கள் பலர் இக்காலகட்டத்தில் உருவாயினர். கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் அப்படியொரு உற்சாகம் இல்லை. உங்கள் பார்வையில், இந்தத் தேக்கத்துக்குக் காரணம் என்ன?

அசோகமித்திரன்: நான் தேக்கம் என்று கூற மாட்டேன். புது எழுத்தாளர்கள் வந்திருக்கிறார்கள். சூர்யராஜன், வா.மு. கோமு, ஜாகிர் ராஜா போன்றோர் நன்றாகவே எழுதுகிறார்கள். மதிப்பீடுகள் விஷயத்தில் சற்றுத் தயக்கமே. ஆனால், அவர்கள் நல்ல எழுத்தாளர்களாக உருவாக வாய்ப்பு உண்டு.

கேள்வி:
குறுநாவல் வடிவத்தைச் செம்மைப்படுத்தியவர் நீங்கள். அதற்கான இலக்கணத்தை தமிழில் பிரபலப்படுத்தியவரும் நீங்களே. நாவல் எழுதுவதைவிட, குறுநாவலில் உள்ள சௌகரியங்கள் என்னென்ன? ஒரு கரு, நாவலுக்குள்ளதா, குறுநாவலுக்கானதா என்று எப்படி முடிவு செய்வீர்கள்?

அசோகமித்திரன்: குறுநாவல் ‘தீபம்’ என்ற பத்திரிகைக்காகத் திட்டமிடப்பட்டது. உண்மையில் இது ஒரு பத்திரிகைத் தேவைக்காக முயற்சி செய்தது. ‘தீபம்’ எனக்கு நல்ல பயிற்சிக் களமாக இருந்தது. பல கட்டுரைகளும் எழுதினேன்.

நாவல் எழுதும்போது ஒரு கட்டத்தில் சோர்வு வந்துவிடுகிறது. உண்மையில் அது ஒரு பெரிய தடங்கல்தான். ஆனால் அதையும் மீறித்தான் நாவல் எழுதவேண்டியிருக்கிறது. இப்போது நான் எழுதிவரும் நாவலின் ஆரம்பம் எனக்கு மறந்துவிட்டது. ஐந்தாம், ஆறாம் அத்தியாயங்கள் மூன்று உள்ளன.

என் கதைகள், நாவல்கள் எல்லாமே ஒரு தொடர்பு உள்ளவையே. ஆதலால் தனியாகக் கரு என்று நான் முடிவு செய்து கொள்வதில்லை. ஆனால், அப்படி எழுதுபவர்கள் இருக்கிறார்கள். Plot வைத்து எழுதியதிலும் மகத்தான எழுத்தாளர்கள் உண்டு.

கேள்வி: எண்ணற்ற எழுத்தாளர்கள் One time wonders ஆக இருந்திருக்கிறார்கள். ஒரு நாவல், ஒரு குறுநாவல், ஒரு கதை என்று சிறப்பாக எழுதிவிட்டுக் காணாமல் போயிருக்கிறார்கள். நீங்கள் கன்சிஸ்டெண்ட்டாக, தொடர்ந்து, பெரிய வருவாய் தரவில்லை எனினும் தமிழில் கதைகள் எழுதுவதைச் செய்துவந்திருக்கிறீர்கள். இதற்கான மனத் தயாரிப்பு என்ன? தேவைப்படும் மனோபலம் என்ன?

அசோகமித்திரன்: இது நம் வாழ்க்கைப் பார்வையைச் சார்ந்தது. நமக்குத் திட்டவட்டமாக பார்வை இருந்து, நம் மனதிற்கிணங்க எழுதினால் அதில் நிச்சயம் ஒரு சீரான தன்மை இருக்கும்.

கேள்வி: நீங்கள் கணையாழி ஆசிரியப் பொறுப்பு வகித்திருக்கிறீர்கள். அப்போது நிறைய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். அந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்.

அசோகமித்திரன்: இதுவும் நான் நாடிச் சென்றதல்ல. முதல் இதழ் தயாரானபோது அதன் பொறுப்பாளர் ‘சற்றுப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு டில்லிக்குப் போய்விட்டார். எவ்வளவு பெரிய பொறுப்பு என்று அன்று எனக்குத் தெரியாது. அது அச்சான இடத்தில், ஒருவர் எப்படிப் பிழை திருத்துவது என்று ஓரிரண்டு குறிப்புகள் தந்தார். அப்புறம் பக்கம் அமைப்பது, படங்கள் எந்த இடத்தில் போடுவது என்றெல்லாம் பார்த்துப் பார்த்துத் தெரிந்துகொண்டேன். மிகவும் கடினமான பொறுப்பு பிரதிகளைக் கட்டு கட்டி இரயில்வே பார்சல் செய்வது, தபால் அலுவலகத்தில் சேர்ப்பது. ஏன் இதெல்லாம் செய்தேன், இதற்கு என்ன பிரதிபலன் என்றெல்லாம் யோசிக்கவில்லை.

கையெழுத்துப் பிரதி அந்த எழுத்தாளனைப் பற்றி ஒரு தோற்றம் தரும். அவனுடைய கதையிலிருந்து அவனுடைய சூழ்நிலை முதலியன ஊகிக்கலாம். எனக்கு ஒவ்வொரு கையெழுத்துப் பிரதியும் ஒரு சவாலாக இருக்கும். கதை நன்றாக இருந்தால் பிரதியைத் திருத்தித் திருப்பி எழுதிவிடுவேன். சில எழுத்தாளர்களின் கையெழுத்துப் பிரதிகளை அச்சுக் கோப்பவர்கள் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். சுஜாதா, இந்திராபார்த்தசாரதி, தி. ஜானகிராமன் போன்றோர் கையெழுத்தைப் புரிந்துகொள்வது கடினம்.

கேள்வி: ஒரு கதையை, நாவலை எத்தனை முறை திருத்திச் செம்மைப்படுத்துவீர்கள்? செம்மைப்படுத்தும்போது, என்னென்ன விஷயங்களை மனத்தில் கொண்டு திருத்துவீர்கள்?

அசோகமித்திரன்: செம்மைப்படுத்துவேன். கையெழுத்து சட்டென்று புரியாது என்றால் அந்தப் பக்கத்தை இரண்டாம் முறை எழுதிவிடுவேன். எனக்கு அச்சுக் கோப்பவர்களை சிரமப்படுத்துவது சிறிதும் பிடிக்காது. அந்த நாளில் ஈய அச்சுக்களை நால் முழுக்க நின்றுகொண்டே அச்சுக் கோப்பார்கள். பலர் மிகவும் ஏழ்மையான பெண்கள்.

எந்த எழுத்தாளனும் எழுதியதை மறுமுறை படிப்பதுதான் முறை என்று நான் நினைக்கிறேன். சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை மீண்டும் படிக்கும்போதுதான் செய்யவேண்டும்; செய்ய முடியும்.

கேள்வி: நீங்கள் செய்நேர்த்தியில் (craftmanship) சிறப்பானவர். உங்கள் கதைகள், கச்சிதமானவை. வடிவம் செம்மையானவை. இதற்கான பயிற்சி என்ன? எப்படி இதை நீங்கள் அடைந்தீர்கள்?

அசோகமித்திரன்:
அச்சுக் கோப்பவர்கள்தான் என் ஆசான்கள். உண்மையில் சிலர் மிகச் சிறந்த ஆசிரியர்கள் என்றுகூடக் கூறுவேன். எனக்கு ராஜவேல் என்பவரின் கணிப்பு மீது மிகுந்த மதிப்பு உண்டு. அவர் சொல்லி ‘விழா’ என்ற குறுநாவலில் பாரா பாராவாக வெட்டியிருக்கிறேன். அவர் இறந்துவிட்டார் என்று அறிய மிகவும் வருத்தமாக இருந்தது. அதே போல சாமி என்ற அச்சுக் கோப்பவர். அவர் நாடகங்களிலும் நடிப்பார். என்னுடைய ‘காத்திருத்தல்’ சிறுகதை நாடகமாக்கப்பட்டபோது அவர்தான் அரசியல் தொண்டன் வேடம் தரித்தார். நாடகம் மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் அதைத் தயாரித்த டாக்டர் ருத்ரன் ஒரு முறைக்கு மேல் அதை மேடையேற்றவில்லை.

கேள்வி: நீங்கள் ஒரே மூச்சில் சிறுகதை எழுதுவீர்களா? இல்லை நடுவில் இடைவெளி விடுவீர்களா? நாவல்களை, குறுநாவல்களை எப்படித் திட்டமிடுவீர்கள்? அத்தியாயங்களையும் சம்பவங்களையும் முன்னரே யோசித்துவைத்திருப்பீர்களா?

அசோகமித்திரன்: விட்டுவிட்டுத்தான் எழுதுவேன். எழுதுவதும் ஒரு கட்டத்தில் களைப்பு, சோர்வு உண்டு செய்யும். இரவில் படுக்கும்போது ஒரு திட்டம் வகுத்துக்கொண்டு அடுத்த நாள் சுமார் ஒரு மணி நேரம் எழுதுவேன். சிறுகதை, நாவல், கட்டுரை எல்லாமே இப்படித்தான் எழுதப்பட்டன.

கேள்வி: உங்கள் கதைகளில் கொண்டாட்டமான மனோபாவம் கொண்ட மனிதர்கள் வருவது கிடையாது. என்ன காரணம்?

அசோகமித்திரன்: அப்படி இல்லை என்றுதான் நினைக்கிறேன். பல கதைகளில் கதையைக் கூறுபவன் அப்படித்தான், அதாவது சட்டென்று சிரிப்பவனாக இருப்பதாகத்தான் தோன்றுகிறது.

கேள்வி: புலிக்கலைஞன் கதை நாயகன் கற்பனையா அல்லது நீங்கள் நேரில் பார்த்த ஒரு கதாபாத்திரமா?

அசோகமித்திரன்: நான் ஒரு புலிவேடக்காரர் ஒரு சினிமா வாய்ப்புக்காக வந்தபோது அவரைப் பார்த்தேன். அவருடைய தோற்றத்திலிருந்து அவருடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். நிஜமாகவே அந்த மனிதனுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. உண்மையில் சினிமாவில் கதாநாயகனே புலிவேடம் தரிப்பதுதான் பார்வையாளருக்கு மகிழ்ச்சி தரும். ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்தில் கமல்ஹாசன் மிகச் சிறப்பாகச் செய்திருப்பார். என் ‘புலிக்கலைஞன்’ நிஜ வாழ்க்கையில்தான் பரிமளிக்க முடியும். சினிமா சரியான களமல்ல.

கேள்வி: உங்களை மிகவும் பாதித்த புத்தகங்கள் என்று எவற்றைச் சொல்வீர்கள்?

அசோகமித்திரன்: புத்தகங்கள் என்று கூற வேண்டுமானால் என் பாட புத்தகங்கள், ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ ஆகியவற்றைக் கூறலாம். ஆனால் தனித்தனிக் கதைகள், கட்டுரைகள்தான் எனக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுத்தின. அதில் புதுமைப்பித்தன் எழுதிய ‘சித்தி’ என்ற சிறுகதை. நான் எழுதிய ‘இன்னும் சில நாட்கள்’ அவருக்கு என் அஞ்சலியாக நினைத்து எழுதினேன்.

கேள்வி: பாண்டி விளையாட்டு சிறுகதைபோல இளம் பிராயத்து நினைவுகள் உங்களை அலைக்கழிக்குமா? அதுபோல நீங்கள் சந்திக்க விரும்பும் நண்பர் யாராவது உண்டா?

அசோகமித்திரன்: எனக்கு சகோதரிகள் இருந்தார்கள். எங்களுக்குள் நாங்கள் பாண்டி, பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளை விளையாடியிருக்கிறோம்.

அந்தக் காலத்து நண்பர்களைப் பார்க்கும் வாய்ப்பிருக்கும் என்று தோன்றவில்லை. நான் ஊர்விட்டு ஊர் வந்தவன்.

கேள்வி: ஒப்பீட்டளவில் நான் ஃபிக்ஷன் எழுத்துக்கு இன்று வரவேற்பு அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

அசோகமித்திரன்: இல்லை. கட்டுரைகளுக்குத்தான் இன்றைய பத்திரிகைகளில் அதிக வரவேற்பு இருக்கிறது. கட்டுரைகள்தான் விவாதங்களைத் துவக்குகின்றன. ஒரு சிறுகதை அப்படி செய்ய வாய்ப்பில்லை.

கேள்வி: சிறுபத்திரிகைகள் மட்டும்தான் சிறுகதைகளை ஊக்குவிக்கின்றன. வெகுஜன இதழ்கள் ஸ்டாம்ப் அளவுக்குக் கதைகளைச் சுருக்கிவிட்டன. நல்ல கதைகளை அதிகம் காணமுடிவதில்லை. இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அசோகமித்திரன்: இக் கேள்வியே முந்தைய கேள்வியின் என்னுடைய பதிலை உறுதிப்படுத்துகிறது. காலத்தின் தேவை என்று ஒன்றிருக்கிறது. அதுதான் பூர்த்தி செய்யப்படுகிறது.

கேள்வி: மொழிபெயர்ப்புகள் தற்போது அதிகமான அளவுக்கு தமிழில் கிடைக்கின்றன. மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்காகவே தனி இதழ் ஒன்றுகூட வெளிவருகிறது. இந்தச் சூழலில் அவற்றின் தரம் எப்படி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

அசோகமித்திரன்: ஒட்டு மொத்தமாகக் கருத்துத் தெரிவிப்பது சரியல்ல. முன்பு பல வங்காள நாவல்கள் தமிழில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. இன்று அந்த நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் படிக்கும்போது நம் மொழிபெயர்ப்பு குறையுடையது என்று தெரிகிறது. மொழிபெயர்ப்பும் காலம் காலத்திற்கு மாறுபடும்.

கேள்வி: சினிமாவின் பார்வையாளராக இருந்திருக்கிறீர்கள். சினிமா தயாரிப்பு நிறுவனத்திலும் பணியாற்றி இருக்கிறீர்கள். ஆனால், நேரடியாக சினிமாவில் ஈடுபட உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டதில்லையா?

அசோகமித்திரன்: இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் எல்லாரும் அப்படி இருக்கவேண்டும் என்று நான் கூற மாட்டேன். என்னால் திரப்படங்களை ஓரளவு செம்மைப்படுத்த முடியும். ஆனால் நிறைய சமரசங்கள் செய்துகொள்ள வேண்டும். அந்தச் சக்தி இல்லை.

கேள்வி: சினிமாவுக்குள் நுழையும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கிறது. இது ஆரோக்கியமான போக்கா?

அசோகமித்திரன்: முன்பும் எழுத்தாளர் யாரோ ஒருவர்தான் ஒரு படத்துக்குக் காரணமாக இருந்தார். மனதளவிலாவது ஒரு திட்டம் இல்லாமல் எந்தத் திரைப்படமும் தயாரிக்கப்படுவதில்லை. எழுத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்குத் திரைப்படம் முழுத் திருப்தி தர முடியாது. மீண்டும் சமரசம்தான். இது ஆரோக்கியமானது, அல்ல என்பதெல்லாம் அபிப்ராயங்கள்.

கேள்வி: சமகால தமிழ்சினிமா பற்றி உங்கள் கருத்து? பருத்தி வீரன், சுப்ரமணியபுரம் போன்ற சமீபத்திய படங்களைப் பார்த்தீர்களா?

அசோகமித்திரன்: திரைப்படக் கொட்டகையில் பார்த்ததில்லை. இந்தப் படங்களிலும் வன்முறைப் போக்கு, பெண்களைக் கன்னத்தில் அறைவது போன்றவை உள்ளன. நிஜ வாழ்க்கையில் இதைவிட மோசமான அனுபவங்கள் இருக்கலாம். திரைப்படத்தில் காண்பிப்பது எனக்குச் சம்மதமல்ல. பெரும் தீமை, கயமை கூட நாம் கோடிட்டுக் காட்டலாம். அவ்வளவுதான்.

கேள்வி: பதிப்பகங்கள் பெருகியிருக்கின்றன. எழுத்தாளர்கள் வளமாக இருக்கிறார்களா? உங்கள் அனுபவம்?

அசோகமித்திரன்: சிலர் இருக்கிறார்கள். பெரும்பாலான எழுத்தாளர்கள் எழுத்தால் வரும் ஊதியத்தை மட்டும் நம்பியில்லை. மீண்டும் இதெல்லாம் பொதுப்படையான கேள்விகள். உலகம் கெட்டுவிட்டதே என்று சொல்வது போல.

கேள்வி: புகழ், புத்தகங்களின் அதிக விற்பனை, ராயல்டி இதைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட்டதுண்டா?

அசோகமித்திரன்: நாம் கவலைப்பட்டாலும் கவலைப்படாமல் இருந்தாலும் புத்தகம் விற்றால் பணம் தானாகவே வரும். பதிப்பகங்கள் கடன் வாங்கித்தான் நூல்களை வெளியிடுகின்றன. பல சமரசங்கள் செய்து கொண்டுதான் நூலக உத்தரவு பெறுகின்றன. இதையெல்லாம் எழுத்தாளன் கணகில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கேள்வி: எழுத்தை மட்டுமே நம்பி வாழ்வது இன்றும்கூட அசாத்தியமானதாகவே உள்ளது. ஏன்?

அசோகமித்திரன்: எப்படியோ காலம் தள்ளிவிட்டேன். ஆனால் இன்னொரு முறை முடியாது. நான் சிறிது ஆங்கிலத்திலும் எழுதியதால் சமாளிக்க முடிந்தது. என்னுடைய பல ஆங்கிலக் கதைகள், கட்டுரைகள் மிகவும் பாராட்டப்பட்டன. சன்மானமும் கிடைத்தது. தமிழில் பல படைப்புகள் இனாம்தான். ஒரு முழு நூல் என் முன்னுரைகள் கொண்டது. முன்னுரைக்கு எப்படி, எவ்வளவு சன்மானம் தருவது? இந்த முன்னுரை எழுதுவதே இழிவுபடுத்தும் அனுபவம் என்று நினைக்கிறேன்.

கேள்வி: சமகால எழுத்தை, எழுத்தாளர்களை நீங்கள் எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள்? இலக்கியச் சண்டைகள் குறித்து உங்கள் கருத்து என்ன?

அசோகமித்திரன்:
அபிப்ராயங்கள், சண்டை எதில் இல்லை? ஒரு குடும்பத்திலேயே சண்டை இல்லையா?

கேள்வி: இண்டர்நெட் பற்றி உங்கள் கருத்து? இணையத்தளத்தில் உங்களைப் பற்றி எழுதுவதைப் படித்திருக்கிறீர்களா? இணையம் வழியாக இன்று யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்கிற நிலை வந்திருப்பது குறித்து?

அசோகமித்திரன்: எனக்கு அதிகம் தெரியாது. எனக்குக் கண் வலிக்கிறது. அதனாலேயே அதிகம் கணினி முன் உட்காருவதில்லை.

கேள்வி: முக்கிய எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்படுகின்றன? உங்கள் எழுத்துக்கு அதுபோலொரு நிலை வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?

அசோகமித்திரன்: இறந்து, எழுத்தாளர்களின் நூல்கள் பதிப்பில் இல்லை என்றால் நாட்டுடைமை ஏற்றுக்கொள்ளக் கூடியது. வாரிசுகளுக்குப் பணம் தரவேண்டும். சகட்டு மேனிக்கு நாட்டுடைமை அறிவிப்பது சரியல்ல.

கேள்வி: தமிழக அரசு கோட்டூபுரத்தில் மிகப்பெரிய நூலகம் ஒன்றைக் கட்டி வருகிறது. அதற்கு நீங்கள் தரும் ஆலோசனை, வேண்டுகோள்கள் என்ன?

அசோகமித்திரன்: அந்தத் துறைக்கென நிபுணர்கள் இருக்கிறார்கள். நூலகத் துறை மிகப் பெரிய துறை. அதில் எழுத்தாளன் ஓர் அங்கம். அவ்வளவே.

கேள்வி: புத்தகக் கண்காட்சிக்கு சென்றீர்களா? புத்தகக் கண்காட்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அசோகமித்திரன்: திட்டமிட்டுப் போனால் கண்காட்சி பயனுள்ளது. ஆனால் பத்து சதவீதச் சலுகை என்பது போக வரச் செலவு, அனுமதிச் சீட்டு ஆகியவற்றில் போய்விடுகிறது.

கேள்வி: விடுதலைப்புலிகள் தொடர்பான புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியில் விற்கப்படக்கூடாது என்கிற அரசின் உத்தரவைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை வரவேற்கிறீர்களா?

அசோகமித்திரன்: புத்தகங்கள் வெளியிடப்பட்டால் அவற்றை என்ன செய்வது? முந்தைய நூற்றாண்டுகளில் கூட நூல்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. நல்ல நூல்கள் மீண்டு வந்துவிடுகின்றன.

கேள்வி: நோபல் பரிசு பெறும் அளவுக்குத் தகுதியுள்ள எழுத்து என்று உங்களைப் புகழாதவர்கள் இல்லை. உங்கள் நாவல்கள் ஏதாவது மொழிபெயர்க்கப்பட்டு, நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறதா?

அசோகமித்திரன்: நாம் சொல்லிவிடலாம். தேசிய அளவிலேயே கடினம். உண்மையில் நம் தமிழ் நாட்டிலேயே நிறுவன அங்கீகாரம் கிடையாது. ஆதலால், நான் இந்த மாதிரி விருது, பரிசு பற்றி மனதைச் செயல்படவிடுவதில்லை.

கேள்வி: நீங்கள் இப்போது படித்து வரும் புத்தகம் எது?

அசோகமித்திரன்: பாரதி மணி என்பவர் எழுதிய, ‘பல நேரங்களில் பல மனிதர்கள்.’ நல்ல, சுவாரசியமான நூல். உயிர்மைப் பதிப்பகம் வெளியிட்டது.

கேள்வி: உங்கள் கதைகளுக்கு வரையப்பட்ட ஓவியங்களில் மறக்கமுடியாத சிறந்த ஓவியம் எது?

அசோகமித்திரன்: ராமு என்பவர் வரைந்த படங்கள் எல்லாமே எனக்குச் சம்மதமானவை. மிகவும் அடக்கமானவர்.

கேள்வி: எழுதவேண்டும் என்று நீங்கள் நினைக்கும் கதைகள் யாவை? என்ன காரணங்களால் அவை எழுதப்படாமல் இருக்கின்றன?

அசோகமித்திரன்: இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவல் பல ஆண்டுகள் முன்பு தொடங்கப்பட்டது. மனதளவில் ஏதோ எதிர்ப்பு இருந்து கொண்டிருக்கிறது. அதை மீறித்தான் அவ்வப்போது எழுத முற்படுகிறேன். இந்த 2009-ம் ஆண்டில் அதை முடித்துவிட வேண்டும். ஆனால் என் வயது இப்போது 77. ஓராண்டு என்பதுகூட யதார்த்தமான ஆசை இல்லை.

நேர்காணல்: பாலு சத்யா

(அம்ருதா ஜூன் 2009 இதழில் வெளியான நேர்காணல்)



Tuesday, June 16, 2009

ஏழுமலை ஜமா


திருவிழாவைப் பார்க்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா? நிச்சயம் இருக்க முடியாது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திருவிழாக்கள் மக்களின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துவிட்டவை. இப்போதெல்லாம், ஆடி, சித்திரை மாதங்களில் மூலை முடுக்குகளில் இருக்கும் கோவில்களில்கூட வசூல் பண்ணி, ஒலிபெருக்கியை அலறவிட்டு, கூழ் ஊற்றி, பொங்கல் வைத்து, சமீபத்தில் வெளியான படங்களை சூட்டோடு சூடாக விசிடியில் போட்டு, அல்லது ‘ஆடலும் பாடலும்' என்ற பெயரில் ரெகார்ட் டான்ஸை ஆடவிட்டு, ஏதாவது ஒரு ஆர்கெஸ்ட்ராவை மேடையேற்றித் திருவிழாவை ஒப்பேற்றிவிடுகிறார்கள்.

ஆனால், ஒரு காலத்தில் திருவிழா என்றால் தவிர்க்க முடியாத சில அம்சங்கள் இருந்தன. நம் மண்ணின் கலைகளான தெருக்கூத்து, கரகாட்டம், தேவராட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம்...போன்றவை. நவீன கலாசாரம் என்ற சூறாவளிக் காற்றில் அடித்துப் போகப்பட்ட கலைகளில் ஒன்று தெருக்கூத்து. அந்தக் கலையை மையமாக வைத்து, இயக்குநர் எஸ். கருணா எடுத்திருக்கிற குறும்படம் ‘ஏழுமலை ஜமா.'

ஏழுமலை, அந்த சுற்றுவட்டாரத்தில் பேர்போன தெருக்கூத்துக் கலைஞர். துரியோதனன், நரசிம்மம், அர்ச்சுனன் என்று அவர் எந்த வேஷம் கட்டி ஆடினாலும், விடியவிடிய கண் அயராமல் பார்த்து ரசிக்கும் ஊர்ஜனம். ஏழுமலையை ‘வாத்தியார்' என்று மரியாதையோடுதான் ஊரே அழைக்கும். ஒரு நாள், ஏதோ ஓர் ஊரில் ‘பாஞ்சாலி சபதம்' தெருக்கூத்தைப் போட்டுவிட்டு, தன் குழுவினரை ஊருக்கு அனுப்பிவிட்டு, அவர் மட்டும் ஒரு வீட்டுக்குப் போகிறார். அந்தவீட்டில் இருக்கும் ஏழுமலையின் ரசிகை, மகிழ்ச்சியோடு வரவேற்கிறாள். வாய்க்கு ருசியாக சமைத்துப் போட்டு, கைகால் பிடித்துவிடுகிறாள். அந்தப் பெண்ணோடு இரவைக் கழித்துவிட்டு ஊருக்குத் திரும்புகிறார் ஏழுமலை.

ஏழுமலைக்குக் கூத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது. வருடா வருடம் நடக்கும் ஊர்த் திருவிழாவில் ஏழுமலையின் கூத்து கண்டிப்பாக இருக்கும். அந்த வருடம் கூத்துக்கு பதிலாக சினிமா போடுகிறார்கள். நொந்து போகிறார் ஏழுமலை. மெல்ல மெல்ல அவருடைய கூத்துக்கு மவுசு குறைந்துபோகிறது. ஏழுமலையின் ஜமாவில் இருந்தவர்கள் எல்லாம், கூத்தை விட்டுவிட்டு கல் உடைப்பது, கட்டட வேலை பார்ப்பது, ரிக்ஷா ஓட்டுவது என வேறு வேறு வேலைகளைப் பார்க்கப் போகிறார்கள். ஏழுமலையும் உள்ளூரில் இருக்கப் பிடிக்காமல், பிழைப்புக்காக பெங்களூருக்குப் போய், மார்க்கெட்டில் மூட்டை தூக்குகிறார். ‘வாத்தியார்!' என்று மரியாதையாக அழைக்கப்பட்ட ஏழுமலை, ‘டேய் ஏழுமலை!' என்று அழைக்கப்படுகிறார்.

கூத்துக் கலையின் மேல் இருந்த வெறியில், திரும்ப ஊருக்கு வருகிறார் ஏழுமலை. சக கலைஞர்கள் எல்லாம் அவரை வேறு வேலை பார்க்கச் சொல்கிறார்கள். துடித்துப் போகிறார். வெறுப்பும் வேதனையும் மனத்தில் மண்ட, குடித்துவிட்டுத் தன்னந்தனியே ஆடுகிறார். ஏதோ ஓர் இடத்தில், வேறொரு கூத்துக் குழுவினர் இரவு நேரத்தில் ரிகர்சல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு வரும் ஏழுமலை ‘இப்பிடியா ஆடுவாங்க?' என்று திட்டிவிட்டு, சுழன்று சுழன்று ஆடிக்காட்டுகிறார். அப்படியே மயங்கி, சரிந்து கீழே விழுந்துவிடுகிறார்.

இப்படிக் கேள்விக்குறியாகிப் போயிருப்பது ஏழுமலையின் வாழ்க்கை மட்டுமல்ல; எத்தனையோ கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கையும்தான். எழுத்தாளர் பவா. செல்லத்துரையின் ‘ஏழுமலை ஜமா' சிறுகதையைத்தான், குறும்படமாக எடுத்திருக்கிறார் கருணா. புரிசை துரைசாமி, கண்ணப்பதம்பிரான், பரம்பரை தெருக்கூத்து மன்றம் ஆகியோர் இணைந்து இசைத்திருக்கும் இசையும், சுரேவின் ஒளிப்பதிவும், பீ. லெனினின் எடிட்டிங்கும் இந்தப் படத்திற்கு வளம் சேர்த்திருக்கின்றன. ஒரு நல்ல படைப்புக்கான அத்தனை அம்சங்களும் ஏழுமலை ஜமாவில் இருக்கின்றன.

சினிமா குத்துப் பாடல்களில் ரசிகர்கள் ஒருபுறம் சொக்கிக் கிடக்கிறார்கள். மற்றொருபுறம் உயிரை உரசும் உண்மைகளை குறும்படங்கள் சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கின்றன. அதற்கு சமீபத்திய உதராணம் ‘ஏழுமலை ஜமா.'

Monday, June 15, 2009

ஒன்றரை நிமிடத்தில் உலகத்தரம்!



















ஒரு பெரிய வயல் வெளி. அறுவடைக்குத் தயாராக நெற்கதிர்கள் விளைந்து தலை சாய்த்து நிற்கின்றன. சட்டென்று காட்சி மாறுகிறது. வயல் வெளி மறைந்து மிக பிரம்மாண்டமான, ராட்சசக் கட்டிடம் ஒன்று இப்போது அந்த இடத்தில் முளைத்திருக்கிறது.

ஒரு வீட்டின் உள் பகுதி. நல்ல வசதியான வீடு என்பது பார்த்தாலே தெரிகிறது. மாடியில் இருந்து ஒரு பெண் படிக்கட்டுகளில் இறங்கி வருகிறாள். நடுத்தர வயது. கோட், ஷூட் என அதி நவீனமான உடை உடுத்தியிருக்கிறாள். ஹாலில் பத்து வயது மதிக்கத்தக்க ஒரு ஒரு சிறுவன் ஷோபாவில் அமர்ந்திருக்கிறான். அவனுக்கு முன்னால் இருக்கும் லேப்டாப்பில் அவன் கை அலைந்துகொண்டிருக்கிறது.

அந்தப் பெண் இறங்கிவந்து அவனுக்கு எதிரே உட்காருகிறாள். கால்களில் சாக்ஸை மாட்டியபடியே அவனிடம் கேட்கிறாள்: ‘இன்னிக்கி என்ன எக்ஸாம்?’

‘மேத்ஸ்.’

இப்போது அவன் கேட்கிறான். ‘ஆபீஸுக்கா?’

‘இல்ல. ஒரு கான்ஃபிரன்ஸ். டெல்லி போறேன்.’

அந்தப் பெண் கிளம்புகிறாள்.

‘மம்மி! எனக்கு பிரேக்ஃபாஸ்ட் எடுத்து வைக்க மறந்துட்டீங்களே!’

‘ஓ! சாரி.’ என்றவள் ஃபிரிட்ஜைத் திறக்கிறாள்.

இப்போது டைனிங் டேபிளில் ஒரு தட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணின் கை தட்டில் ஒரு மாத்திரையைப் போடுகிறது.

‘இந்த சிவப்பு கேப்ஸ்யூல் பிரேக்ஃபாஸ்டுக்கு.’

தட்டில் மேலும் இரண்டு மாத்திரைகள் வந்து விழுகின்றன.

‘இந்த வெள்ளை டேப்லெட்ஸ் லஞ்சுக்கு.’

அவ்வளவுதான். படம் முடிந்து விடுகிறது. திரையில் ‘வேளாண்மையைக் காப்போம்’ என்று பெரிதாக எழுத்தைப் போடுகிறார்கள். ‘2040-க்குப் பிறகு’ என்ற குறும்படத்தில்தான் மேலே சொன்ன காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

உண்மையில், விவசாயத்துக்கான முக்கியத்துவம் சமூகத்தில் மெல்ல மெல்லக் குறைந்து வரும் அபாயத்தை நம் தலையில் ஒரு தட்டுத் தட்டி உணர்த்திவிடுகிறது இந்தக் குறும்படம். ஐ.டி. தொழில், இஞ்சினியரிங், மருத்துவம்... உள்ளிட்ட பல துறைகளுக்குக் கொடுக்கும் முன்னுரிமையை நாம் வேளாண்மைக்குக் கொடுப்பதில்லை.

இப்படியே போனால், பசியை மந்தமாக்கும் அல்லது உணவாகவே மாத்திரையை சாப்பிடவேண்டிய கட்டாயத்துக்கு நாம் எல்லோருமே ஆளாக வேண்டியதுதான். நாளுக்கு நாள் அதிகமாகிவரும் ரியல் எஸ்டேட் வியாபாரம், விவசாயத்தின் மேல் மக்களுக்கு இருக்கும் அலட்சிய மனோபாவம், கடன் சுமையால் எலிக்கறி சாப்பிடவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படும் விவசாயி, விதர்ப்பாவில் தற்கொலை செய்துகொண்ட விவசாயக் குடும்பங்கள், எதிர்காலம்... என்று பல கேள்விகளை இந்தப் படம் நமக்குள் எழுப்பி விடுகிறது.

இந்தக் குறும்படத்தை இயக்கியிருக்கும் எம்.ஆர். செந்தில் இளைஞர். சென்னை மடிப்பாக்கத்தில் இருக்கிறார். தற்போது இயக்குநர் செல்வபாரதியின் ‘முரட்டுக்காளை’ என்ற படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

‘இப்படி ஒரு குறும்படத்தை எடுக்கணும்னு உங்களுக்கு எப்படித் தோணிச்சு?’ என்று கேட்டால் படபடவெனப் பேசுகிறார். ‘இப்போ விளைச்சல் நிலங்களை எல்லாம் பிளாட் போட்டு விக்க ஆரம்பிச்சுட்டாங்க. இப்பிடியே போனா விவசாயம் பெரிய கேள்விக்குறியா மாறிடும். அது மேல இருக்கற அக்கறையினால ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். இந்தப் படத்தை எடுத்தேன்.’

இந்தக் குறும்படத்துக்கு இருபதாயிரம் ரூபாய் செலவாகியிருக்கிறது. தன் கைக் காசைப் போட்டுத்தான் படமெடுத்திருக்கிறார் செந்தில். இதில் நடித்திருக்கும் கவிதா யாதவும், சிறுவன் பண்பரசனும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் பின்னணி இசை கிடையாது. எஃபெக்ட்ஸை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இவ்வளவு அழுத்தமான செய்தியைச் சொல்லும் ‘2040-க்குப் பிறகு’ குறும்படம் மொத்தமே ஒன்றரை நிமிடம்தான் ஓடுகிறது. ஒன்றரை நிமிடத்தில் உலகத்தரம்!

0

(கல்கியில் என்னைக் கவர்ந்த குறும்படங்களைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். வெளியான கட்டுரைகளில் இதுவும் ஒன்று)