Monday, December 26, 2011

அறியப்படவேண்டிய நடிகர் - 2


‘சினிமாவை முழுக்க தெரிஞ்சவங்க யாரும் இல்ல!’
- நடிகர் மூணார் ரமேஷ்



‘புதுப்பேட்டை’ படத்தில் தனுஷுக்கு அப்பாவாக நடித்தபோது, யார் இந்த வில்லன் என்று அத்தனைபேரின் புருவத்தையும் உயர வைத்தவர் மூணார் ரமேஷ். இயற்பெயர் ரமேஷ் பாபு. சொந்த ஊரின் பெயரைச் சேர்த்து ‘மூணார் ரமேஷ்.’ சிறு சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்து, கிட்டத்தட்ட நாற்பது படங்களில் நடித்துவிட்டார். ‘தோழா!’ படத்தில் பிரதான வில்லன். தற்போது, ‘வேட்டைக்காரன்’, ‘ஆடுகளம்’, இயக்குநர் செல்வராகவன், விக்ரமை வைத்து இயக்கும் படத்தில் முக்கிய பாத்திரம் என்று மனிதர் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். அவருடன் ஒரு நேர்காணல்...

நீங்க நடிச்ச முதல் படம் எது?

இயக்குநர் ஏ.பி. முகன் ‘தீண்ட... தீண்ட...’ன்னு ஒரு படம் எடுத்துக்கிட்டு இருந்தார். அந்தப் படத்துல புரொடக்ஷன் சைடுல வேலை பார்த்தேன். நாங்க எல்லாருமே ஒரு டீமா அதுல வேலை பார்த்தோம். பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி வந்துச்சு. அப்போதான் முகன், ‘நீங்க ஒரு ரோல்ல நடிங்களேன்’னு சொன்னார். என்னோட நண்பர்களும் என்னை நடிக்கச் சொல்லி வற்புறுத்தினாங்க. எனக்கு நடிப்புல முன் அனுபவம் எதுவும் இல்ல. இருந்தாலும் நடிச்சு பாப்போமேன்னு தோணிச்சு. அதுல நடிச்சேன். ஆனா, அப்போகூட பெரிய நடிகனாகணும்னு எந்த எண்ணமும் எனக்கு இல்ல. அதுக்கப்புறம் என்னோட இன்னொரு நண்பர் சுரேஷ் ‘அது ஒரு கனா காலம்’ படத்துல ஒரு சின்ன ரோல்ல நடிக்க கூப்பிட்டார். அது பாலுமகேந்திரா சார் படம். சுரேஷ், அதுல அசோசியேட் டைரக்டர். அந்தப் படத்துல ஒரே ஒரு சீன்ல நடிச்சேன். அந்தப் படம்தான் முதல்ல ரிலீஸ் ஆச்சு. என்னோட நண்பர்கள் எல்லாருமே என்னை தொடர்ந்து நடிக்கச் சொல்லி, ஊக்கம் குடுத்துக்கிட்டே இருந்தாங்க. ஆனாலும் நான் எந்த ஆர்வமும் இல்லாமதான் இருந்தேன்.

ஒரு நாள், நண்பர்கள் எல்லாரும் உக்காந்து பேசிக்கிட்டு இருந்தோம். அப்போ ஒரு சினிமா கோ ஆர்டினேட்டர் வந்தார். ‘புதுப்பேட்டை’ன்னு ஒரு படத்துல முக்கியமான ஒரு ரோல் இருக்கு. அதுக்கு பொருத்தமான நடிகரைத் தேடிக்கிட்டு இருக்காங்க. எத்தனையோ பேர் வந்துட்டுப் போயிட்டாங்க. இயக்குநர் செல்வராகவன் திருப்தி ஆக மாட்டேங்கறாரு. நீங்க ஒரு ஃபோட்டோ எடுத்துகிட்டு போய் பாத்துட்டு வாங்களேன்’னு சொன்னார். நான் அதுக்கு முன்னாடி, என்னோட ஃபோட்டோவை எடுத்துக்கிட்டு எந்த சினிமா கம்பெனிக்கும் சான்ஸ் கேட்டு போனது கிடையாது. நண்பர்கள் வற்புறுத்தினதால, ரொம்ப கூச்சப்பட்டுக்கிட்டே ஒரு ஃபோட்டோவை எடுத்துட்டு போனேன். பொதுவா, ஒரு நடிகர், ஒரு கம்பெனியில புகைப்படத்தைக் குடுக்குறார்னா, அதுக்குப் பின்னாடி, ஃபோன் நம்பர், அட்ரஸ் எல்லாத்தையும் எழுதிக் குடுப்பார். அந்த அடிப்படைகூட எனக்குத் தெரியாது. ஃபோட்டோவை ஆபீஸ்ல குடுத்தேன். வந்துட்டேன்.

ஒரு வாரம் கழிச்சு, செல்வராகவன் சார் கூப்பிட்டுவிட்டார். எப்பிடியோ, என் அட்ரஸைக் கண்டுபிடிச்சு அவரோட ஆபீஸ்ல இருந்து வந்துட்டாங்க. செல்வராகவன் சார் என்னோட நடிப்பு எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் கேட்டார். நான் ஏதோ பெரிய கேரக்டரா இருக்குமோன்னு பயந்துட்டேன். அதனால பட்டும் படாமலும்தான் பதில் சொன்னேன். நான் நடிச்ச முதல் ரெண்டு படத்துலயும் என்னோட நண்பர்கள் இருந்தாங்க. அதனால பிரச்னை இல்ல. ஆனா, இது அப்பிடி இல்ல. அவர் பெரிய டைரக்டர். அந்த பயம் எனக்குள்ள இருந்துச்சு. எனக்கு காஸ்ட்யூம் போட்டு, செக் பண்ணினாங்க. போகச் சொன்னாங்க. நான் குழப்பத்தோடயே வெளியில வந்தேன். ஒரு மாசம் கழிச்சு என்னை கூப்பிட்டு விட்டாங்க. ஹைதராபாத்ல ராமோஜிராவ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல வச்சு அக்ரீமெண்ட் எல்லாம் போட்டாங்க. அப்போதான் எனக்கு நடிப்போட சீரியஸ்னெஸ் உறைச்சுது. அந்தப் படத்துல நடிச்சேன். டைரக்டர் சொன்ன மாதிரியெல்லாம் செஞ்சேன். ஆனா, அந்த கேரக்டர் எந்த மாதிரி வரும்னு எனக்குத் தெரியல. படம் ரிலீஸ் ஆச்சு. செகண்ட் ஷோவுக்கு ஒரு நண்பரோட போயிருந்தேன். இடைவேளை விட்டு வெளியில வந்தா, ஆடியன்ஸ் எல்லாரும் என்னை சுத்தி நின்னுக்கிட்டாங்க. ‘நல்லா நடிச்சிருக்கே’ன்னு பாராட்டி தள்ளிட்டாங்க. அது எனக்கு பெரிய அனுபவமா இருந்துச்சு. அந்த ஒரே படத்துல, எங்க வெளியில போனாலும் என்னை எல்லாருக்கும் அடையாளம் தெரிய ஆரம்பிச்சிடுச்சு. ‘புதுப்பேட்டை’ படத்தோட மேனேஜர் பால கோபி என்னை இயக்குநர் சுராஜ்கிட்ட அறிமுகப்படுத்தி வச்சார். நான் ‘தலைநகரம்’ படத்துல நடிச்சேன். அதுக்கப்புறம் நானா வாய்ப்புத் தேடி போக ஆரம்பிச்சுட்டேன்.




சென்னைக்கு எப்போ வந்தீங்க? ஏன் வந்தீங்க?

நான் மதுரை வக்ஃபோர்டு காலேஜ்ல பி.ஏ. படிச்சிக்கிட்டு இருந்தேன். கொஞ்சம் சேட்டை ஜாஸ்தி. டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. அப்புறம் மூணார்லயே ஒரு டிரான்ஸ்போர்ட் நடத்தினேன். நஷ்டமாயிடுச்சு. அதுக்கப்புறம் உள்ளூர்ல இருக்க முடியல. அப்ப கல்யாணம் வேற ஆயிடுச்சு. லவ் மேரேஜ். கோயம்பத்தூருக்கு வந்தேன். நமக்கு தெரிஞ்ச தொழில் என்னன்னா வண்டி ஓட்டறது. சின்னதா டிராவல்ஸ் நடத்திப் பாத்தேன். அதுலயும் நஷ்டம். சரி. டிரைவரா வேலை பாக்கலாம்னு முடிவு பண்ணி நானும் பல கம்பெனிகளுக்கு ஏறி, இறங்கினேன். என் உருவத்தைப் பாத்து யாருமே வேலை தர மாட்டேன்னுட்டாங்க. ஒரு டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சொன்னார்: ‘உங்களுக்கு வேலை குடுக்குறோம்னு வைங்க. எந்த கஸ்டமராவது பெட்டியை எடுத்து டிக்கில வைங்கன்னு உங்களைப் பாத்து சொல்லுவாங்களா? இவ்வளவு ஏன்? வண்டியில ஏறக்கூட மாட்டங்க.’ அதுக்கப்புறம்தான் ஒரு ஃபைனான்ஸ் கம்பெனியில கலெக்ஷன் ஏஜெண்ட்டா வேலைக்கு சேந்தேன். அதாவது வண்டியை ஃபைனான்ஸுக்கு வாங்கிட்டு தவணை கட்டாம இருப்பாங்கல்ல? அந்த வண்டியை சீஸ் பண்ணி எடுத்துக்கிட்டு வர்ற வேலை. கிட்டத்தட்ட கட்டப் பஞ்சாயத்து மாதிரி. அப்புறம் இயக்குநர் முகன் சென்னையில ‘தீண்ட... தீண்ட...’ படம் ஆரம்பிச்சப்போ சென்னைக்கு வந்தேன்.

வில்லனா நடிக்கறதுல ஒரு சிக்கல் இருக்கு. பொதுவா, ஆடியன்ஸ் யாருக்கும் நல்ல அபிப்ராயமே வராது. உங்க அனுபவம் எப்படி?

எனக்கும் அப்படித்தான். முதல்ல கிட்ட வர்றதுக்கே யோசிப்பாங்க. நாமளா போய் என்னன்னு கேட்டதும் பேச ஆரம்பிச்சுடுவாங்க. நெருங்கிட்டா, நாம நடிகன், சினிமா வேற, உண்மையில வேறன்னு புரிய ஆரம்பிச்சுடும்.

வாழ்நாள்ல, தனியா தெரியற மாதிரி ஒரு கதாபாத்திரத்துல நடிக்கணும் அப்படின்னு ஆசை ஏதாவது உங்களுக்கு இருக்கா?

அப்படி எல்லாம் இல்ல. நான் நல்ல கேரக்டர் ஆர்டிஸ்டா வரணும். அவ்வளவுதான். ஒரு நடிகனா என்னிக்கி வாழ்க்கையை ஆரம்பிச்சேனோ, அப்பவே எல்லாத்தையும் நல்லா உள்வாங்க ஆரம்பிச்சுட்டேன். லைட்டிங்லருந்து, புரொடக்ஷன் வேலைலருந்து, இயக்குநர் எப்படி சொல்லித் தர்றாருங்கறது வரைக்கும் அப்சர்வ் பண்றேன். எந்த கேரக்டர்ல நடிச்சாலும் ‘இது நல்ல பேரை வாங்கித் தரும்’னு நினைச்சுத்தான் நடிக்கிறேன். ‘பந்தயக் கோழி’ன்னு ஒரு மலையாளப் படம். மூணே சீன்லதான் நடிச்சேன். ஆனா, முக்கியமான பாத்திரம். என்ன காரணமோ அந்தப் படம் ஹிட் ஆகலை. அதனால, மலையாளத்துல நான் யாருன்னு தெரியாம போச்சு. ‘தோழா!’ன்னு ஒரு படம். அதுல முழுக்க முழுக்க நாந்தான் வில்லன். சில சமயங்கள்ல இந்த மாதிரியும் அமைஞ்சு போயிடுது. அதே மாதிரி கடமைக்கு ஷூட்டிங்குக்குப் போய்ட்டு வர்ற சோலி நம்மகிட்ட கிடையாது. சினிமாவை முழுக்க தெரிஞ்சவங்க யாரும் இல்ல. அதே மாதிரி நமக்கு எதுவுமே தெரியாதுன்னும் சொல்ல முடியாதும். எவ்வளவு முடியுமோ, அவ்வளவு உழைக்கிறேன். அவ்வளவுதான்.

சினிமாவுல போராட்டம் ஜாஸ்தி. எத்தனையோ பெரிய நடிகர்கள்கூட காணாமல் போயிருக்காங்க. நடிப்புத் தொழிலை எப்படி தேர்ந்தெடுத்தீங்க? உங்களுக்கும் அது மாதிரியான போராட்டம் இருக்கா?

வாழுறதுக்கு ஒரு தொழில் வேணும். வண்டி வச்சிருந்தா வாடகைக்கு விட்டு சம்பாதிக்கலாம். பணம் வச்சிருந்தா வட்டிக்கு விடலாம். கூலி வேலைக்குப் போகலாம். ஆனா, நடிப்பு அப்படி இல்ல. இதுல மூலதனமே நம்மதான். மாசம் 1-ம் தேதி ஆனா வாடகை குடுக்கணும். திடீர்னு ஆஸ்பத்திரி செலவு வரும். பொதுவா, எந்தக் குடும்பத்துலயும் சினிமாவுல நடிக்கிறேன்னா, ஆதரவு குடுக்க மாட்டாங்க. வேணும்னா, கடை வச்சுத் தர்றேன். பொழைச்சுக்கோன்னு சொல்லுவாங்க. என் விஷயத்துலயும் அதுதான் நடந்துச்சு. இப்ப நான் நடிகனா நிக்கறதுக்குக் காரணம், நம்பிக்கை, மனைவி, நண்பர்கள். இவங்க இல்லைன்னா, என்னால வாழ முடியாது. இப்போ நானும் ஃபெப்சியில உறுப்பினர். ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாவும் இருக்கேன். ‘படிக்காதவன்’ படத்துல நடிகர் ஷாயாஜி ஷிண்டேவுக்கு நான் தான் டப்பிங் பேசினேன். தெலுங்குல ஒரு படத்துக்கு டப்பிங் பேசினேன். ஒண்ணுமே இல்லைன்னாலும், டப்பிங் பேசியாவது ஓட்டிடலாம்னு நம்பிக்கை இருக்கு. அதுக்காக எனக்கு குறைஞ்ச பட்ச நம்பிக்கைன்னு நினைச்சிடாதீங்க. பெரிய நம்பிக்கை.



நீங்க முன்மாதிரியா யாரையாவது நினைக்கிறீங்களா?



யாரையுமே நினைக்கலை. எனக்கு கமர்ஷியல் கனவுகள் கிடையாது. நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே வாழ்க்கையில எதையெல்லாம் அனுபவிக்கணுமோ, அதையெல்லாம் அனுபவிச்சு வாழ்ந்துட்டேன். நல்ல கேரக்டர் ஆர்டிஸ்டுன்னு பேர் வாங்கணும். முடிஞ்ச வரைக்கும் எந்த பாத்திரத்துல நடிச்சாலும் நல்லா பண்ணணும். அவ்வளவுதான்.

நீங்க நடிச்சதுலயே ரொம்ப கஷ்டமான காட்சின்னு ஏதாவது இருக்கா? அந்த அனுபவத்தைச் சொல்லுங்களேன்.

‘புதுப்பேட்டை’ படத்துல என்னை உயிரோட புதைக்கிற மாதிரி ஒரு சீன். நான் கேமராவைப் பாத்து பேசிக்கிட்டு இருப்பேன். பின்னாடி இருந்து என்னை உதைச்சு குழியில தள்ளுவாங்க. எல்லாத்தையும் கவனமா ஃபாலோ பண்ணி நடிக்கணும். அந்தக் காட்சி சரியா வரலை. செல்வராகவன் சார் ரொம்ப அன்பா பேசிப் பார்த்தார். அப்புறம் கோபமா பேசினார். மறுபடியும் அன்பா... ஒரு கட்டத்துல, ‘என்னடா பொழப்பு இது! திருப்பிப் பாக்காம ஓடிப் போயிடலாமான்னு கூட நினைச்சேன். ஆனா, அந்த சீனை எடுத்து முடிச்சதுக்கு அப்புறம் சரியாயிட்டேன். அந்தப் படம் வெளியில வந்ததுக்கு அப்புறம் என் வாழ்க்கையே மாறிப் போச்சு. என்னைப் பாக்குறவங்க எல்லாருமே நான் தனுஷைக் கூப்பிடுற மாதிரி ‘குமாரு...’ன்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க.

0

(ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் “விளம்பரம்” பத்திரிகைக்காக நான் செய்த நேர்காணல்)

Thursday, December 15, 2011

தூர்தர்ஷன் நினைவுகள்






அப்போது நாங்கள் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் இருந்தோம். இன்றைக்கும் நாங்கள் குடியிருந்த வேலாயுத பாண்டியன் தெரு இருக்கிறது, பெயர் மாறாமல், பழைய வாசனை மாறாமல். வட சென்னைக்கே பிடித்த சாபம் போல, எத்தனையோ பகுதிகள் இன்றைக்கும் அச்சு அசலாக அப்படியே இருக்கின்றன. பவழக்காரத் தெருவில் நான் படித்த சாரதா நடுநிலைப் பள்ளியின் பெயர் மட்டும்தான் மாறியிருக்கிறது. தர்மாம்பாள் நடுநிலைப் பள்ளி என்று. மற்றபடி அதே புழுதி, மாடுகள், சாணி, தெருவை அடைத்த லாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், குப்பை, இத்யாதி.

நாங்கள் இருந்தது ஒரு காம்பவுண்டு வீட்டில். எதிரெதிராக இருபது குடியிருப்புகள். அத்தனைக் குடியிருப்புகளுக்கும் பொதுவாக, மூன்று பொதுக் கழிப்பறைகளும் மூன்று குளியலறைகளும் இருந்தன.

வீட்டுக்கார அம்மாளுக்கு நல்ல பாரியான தேகம். வாசலை ஒட்டிய வராந்தாவில் மதியத்துக்குப் பிறகு கால் நீட்டிப் படுத்திருப்பார். விடுமுறை நாள்களில் என் வயதுப் பையன்கள் யாரும் மதியம் அவர் இருக்கும் திசைப் பக்கம்கூட எட்டிப் பார்க்க மாட்டோம். மாட்டினால் அவ்வளவுதான். ‘கொஞ்ச நேரம் காலை மிதிடா கண்ணு’ என்பார். கொஞ்ச நேரம் என்பது அவர் பாஷையில் அரை மணி நேரம்.

‘யக்கா! அம்மா கூப்பிடும். ஹோம் வொர்க் செய்யணும்’ என்று என்ன காரணம் சொன்னாலும் கேட்க மாட்டார். ‘இன்னும் கொஞ்ச நேரம்டா’ என்று கெஞ்சுவார். மறுக்க முடியாது. அப்படிப்பட்ட ஆளுமை அந்த அம்மாளின் குரலுக்கு இருந்தது. அரை மணி என்பது முக்கால் மணி நேரம், ஒரு மணி நேரம் என்று நீண்ட அனுபவமும் உண்டு.

எங்கள் காம்பவுண்டில் இருபது வீடுகள் இருந்தாலும், யார் வீட்டிலும் டி.வி. இல்லை. அந்தக் குடியிருப்பில் இருந்த எல்லோருமே மத்திய தர வர்க்கத்துக்கும் கீழான வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். மீன் பிடிப்பவர்கள், கொத்து வேலை பார்ப்பவர்கள், சிறு வியாபாரிகள் (பூ கட்டி விற்பதெல்லாம் சிறு வியாபாரம்தானே!), போஸ்டர் ஒட்டுபவர், எலெக்ட்ரீஷியன்...என பல தரப்பட்ட மக்கள். டி.வி. என்பது அவர்களைப் பொறுத்தவரை ஆடம்பரப் பொருள். அவர்கள் என்றில்லை. அத்தனைபேரிடமும் வாடகை வசூலித்த (கொழுத்த) வீட்டுக்கார அம்மாளின் வீட்டில்கூட டி.வி. இல்லை.

சென்னையில் வேறு வீடு கிடைக்காமல் (இப்போது என்று இல்லை. 30 வருடங்களுக்கு முன்னால்கூட சென்னையில் வீடு கிடைப்பது கஷ்டம்தான் சார்!), அந்தக் காம்பவுண்டில் பக்கத்துப் பக்கத்தில் இருந்த இரண்டு போர்ஷன்களை வாடகைக்கு எடுத்திருந்தார் அப்பா. நான் சாரதா நடுநிலைப் பள்ளியில் மூன்றாவது படித்துக்கொண்டிருந்தேன்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை, பழனி கூப்பிட்டான்.

‘டேய்! இன்னிக்கி டி.வி.யில படம் பாக்கலாம்டா!.’

‘டி.வி.யா?’

‘ஆமாடா.‘

‘டி.வி. எங்க இருக்கு?’

‘அடுத்த தெருவுல. நாலணா குடுத்தா படம் பாக்கலாம்.’

அடுத்த தெருவில் இருந்த ஒரு வீட்டில் டி.வி. இருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னைத் தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பிய படத்துக்கும், வெள்ளிக் கிழமைகளில் போட்ட ‘ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சிக்கும் காசு வாங்கிக்கொண்டு, பார்க்க அனுமதித்தார்கள்.

அப்பாவிடம் நாலணா கேட்டதற்கு, ஆயிரம் தடைகள், ஆயிரம் கேள்விகள். ‘டி.வி. எல்லாம் பாக்கக் கூடாது, கெட்டுப் போயிடுவே. கண்ணுக்குக் கெடுதல்டா. என்ன படம்? நல்ல படம்தானே? சின்னப் பசங்க எல்லாம் பாக்கலாமா? எவ்வளவு காசு? நாலணாவா? அதிகமா இருக்கே! இந்தா. சின்னப் பையன்தானே! முதல்ல பதினஞ்சு காசு குடுத்துப் பாரு. கேக்கலைன்னா அப்புறம் இருவத்தஞ்சு காசைக் குடு.’

நானும் பழனியும் காசை எடுத்துக்கொண்டு ஓடினோம். எங்களுக்கு முன்னாலேயே அங்கே பெரும் கூட்டம் கூடியிருந்தது. சிறுவர்கள், சிறுமிகள், பெண்கள். எங்களையும் சேர்த்து மொத்தம் இருபத்தைந்து பேர் இருப்போம். தரையில் உட்கார்ந்தோம். வீட்டுக்காரர் எல்லோரிடமும் காசு வாங்கினார். அப்பா சொன்னது போல அவரிடம் பதினைந்து காசு கொடுப்பதற்கு எனக்குத் தயக்கமாக இருந்தது. என் முறை வந்தபோது நான் முழு நாலணாவையும் கொடுத்தேன்.

எங்களுக்கு எதிரே ஒரு மர மேசையில் அது இருந்தது. பழைய போர்வையால் மூடியிருந்தார்கள். சலசலவென்று பேசிக்கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்து வீட்டுக்காரர் திட்டினார். ‘சத்தம் போட்டா வெளியில அனுப்பிடுவேன்.’

அந்த மனிதர் மணி பார்த்தார். அந்தப் போர்வையை விலக்கினார். பெரிய மரப் பெட்டியின் இரு கதவுகளையும் திறந்தார். சுவிட்சைப் போட்டார். சிறுவர்கள் ‘ஹோ!’ வென்று சத்தம் போட்டார்கள். வீட்டுக்காரர் சிறுவர்களை அதட்டினார். டியூப் லைட்டை அணைக்கச் சொன்னார். மெல்ல டி.வி.யில் இருந்து ஒளி பரவியது. கறுப்பு வெள்ளை டி.வி. அது. புள்ளிகள், அவர் டி.வி.யில் இருந்த குமிழ்களை திருப்பித் திருப்பி ஏதேதோ செய்தார். மெல்ல படம். பிறகு தூர்தர்ஷனுக்கே உண்டான அந்த பிரத்யேக ‘டூ டுடு டூ டுடும்...’ இசை.

அன்றைக்கு சென்னைத் தொலைக் காட்சியில் ‘குழந்தையும் தெய்வமும்’ படம் போட்டார்கள். இருட்டு, புழுக்கம், கொசுக்கடி எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு எல்லோரும் டி.வி.யில் தெரிந்த பிம்பங்களுக்குள் ஆழ்ந்துபோனோம்.

செய்தி போட்ட போது, ‘வெளியில போறவங்க போயிட்டு வாங்க’ என்றார் வீட்டுக்காரர். நானும் பழனியும் வெளியே போய், தெருச் சுவற்றில் ஒண்ணுக்கடித்துவிட்டு, மூன்று பைசா கமர்கட்டை வாங்கி வாயில் போட்டுவிட்டு வந்தோம். வீட்டுக்காரர் சேரில் உட்கார்ந்து தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்தார். நாங்கள் எங்கள் இடத்தில் உட்கார்ந்துகொண்டோம்.

மறுபடியும் படம் தொடங்கியது. ‘கோழி ஒரு கூட்டிலே...’ பாட்டு பாதி ஓடிக்கொண்டிருந்தபோது, கரண்ட் போய்விட்டது. எல்லோரும் வெளியே வந்து நின்றோம். இனிமேல் கரண்ட் வந்தாலும் படம் முடிந்துவிட்டிருக்கும் என்றபோதுதான் வீட்டுக்குத் திரும்பினோம்.

0

பொதுவாக டி.வி. எளிதில் பார்க்கவியலாத ஒரு அரிய பொருளாகத்தான் இருந்தது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதுதான் அதன் வாசனை கொஞ்சம் அதிகமாகப் பட்டது. அப்போது அப்பா தேனிக்கு மாற்றலாகியிருந்தார்.

தேனிக்காரர்கள் கொஞ்சம் இளகிய மனம் படைத்தவர்கள். டி.வி. பார்க்கக் காசெல்லாம் வாங்க மாட்டார்கள். நாங்கள் இருந்த தெருவில் இரண்டுவீடுகளில் டி.வி. இருந்தது. இரண்டு வீட்டுக்காரர்களும் தூர்தர்ஷனில் ‘ராமாயணம்’, ‘மகாபாரதம்’ போட்டபோது, டி.வி.யை எடுத்து வெளியே வைத்துவிடுவார்கள். இரு வீடுகளில் ஒரு வீட்டில் கலர் டி.வி. கலர் என்றால் இப்போது இருக்கிற கலர் கிடையாது. டி.வி.யின் திரையில் மட்டும் மூன்று கலர் தெரியும். திரையில் மேலே இடது மேல் மூலையில் பச்சை நிறம், நடுப் பகுதியில் மஞ்சள் நிறம், வலது கீழ் மூலையில் சிகப்பு நிறம். கறுப்பு வெள்ளைப் படம்கூடக் கலராகத் தெரியும்.

மொழி புரிகிறதோ, இல்லையோ நாங்கள் ராமாயணம், மகாபாரதம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்த்தோம். குறிப்பாக சம்பூர்ண ராமாயணத்தில் அஞ்சலிதேவியைப் பார்த்து அலுத்துப் போன எங்களுக்கு, இந்த ராமாயணத்தில் வந்த சீதையை மிகவும் பிடித்திருந்தது.

0

கல்லூரியில் படித்த போதுதான் ‘முட்டை பாலு’ அறிமுகமானார். அவர் செய்யாத தொழில் இல்லை. ஆரம்பத்தில் முட்டை வியாபாரம் செய்ததால், அவருக்கு ‘முட்டை பாலு’ என்று பெயர் வந்துவிட்டது. ஓவியம் வரைவார், போர்டுகளில் சித்திரம் போல அழகழகான எழுத்துகளை எழுதுவார். சுவரில் ‘செய்யது பீடி’, ‘ஐந்து பூ மார்க் பீடி’ என்று பெரிய எழுத்துகளை பெயிண்டால் எழுதுவார். இலக்கியம் பேசுவார். அரசியல் சொல்லித் தருவார்.

இரவில் பெரும்பாலான நேரங்களை அவரோடு செலவழிப்பதில் எனக்கும் என் நண்பர்களுக்கும் அவ்வளவு ஆர்வம் இருந்தது. வேலை பார்த்துக்கொண்டே, உலக நாடுகளைப் பற்றிப் பேசுவார். படித்த கதைகளில் பிடித்ததைச் சொல்லுவார். நாங்கள் டீயும் தம்மும் போட்டபடி அவருக்கு பெயிண்ட் எடுத்துக் கொடுத்து, அவர் சொல்வதை பதில் பேசாமல் கேட்போம்.

பாலு அண்ணன் வீட்டில் ஒரு டி.வி. இருந்தது. அப்போது நான் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தேன். சத்யஜித்ரேயின் படங்களை வாரா வாரம் இரவு பதினோரு மணிக்கு தூர்தர்ஷனில் ஒளிபரப்புவதாக செய்தி வெளியாகியிருந்தது. எல்லாப் படங்களையும் எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்று எனக்கு வெறி. ஆனால், இரவு பதினோரு மணிக்கு யார் வீட்டில் போய்ப் படம் பார்ப்பது?

பாலு அண்ணன் அரண்மனைப் புதூரில் இருந்தார். தேனியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது அரண்மனைப் புதூர். அன்று மாலை அவரை பங்களா மேட்டில் வைத்துப் பார்த்தபோது கேட்டேன்.

‘அண்ணே! சத்யஜித்ரே படம் போடறாங்களாம். உங்க வீட்டுக்கு வரலாமா?’

‘இதென்னப்பா கேள்வி. தாராளமா வா.’

என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அதுதான் பாலு.

அவர் வீட்டில் அவரும் அவருடைய அம்மாவும்தான். அதுவுமில்லாமல் அன்பான மனிதர். அவர் இருக்கும்போது நமக்கென்ன! சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். வீடு அடைத்துக் கிடந்தது. ரொம்ப நேரம் தட்டியபிறகுதான் கதவு திறந்தது. அவருடைய அம்மா கதவைத் திறந்தார்.

‘நீயா! வா! வா!’ என்றார் சுரத்தில்லாமல். நான் வருவதை ஏற்கெனவே அம்மாவிடம் பாலு சொல்லியிருக்க வேண்டும்.

‘அண்ணன் இல்லியாம்மா?’

‘இப்ப வந்துடுவான்.’

அந்த அம்மாள் டி.வி.யைப் போட்டுவிட்டு, உள் அறைக்குள் போய் சுருண்டுகொண்டார். அன்றைக்கு ‘பதேர் பாஞ்சாலி’ போட்டார்கள். என்னால் படத்தில் ஒன்றவே முடியவில்லை. அறிமுகமில்லாத ஒரு வீட்டில் அராஜகம் செய்வதுபோல இருந்தது. படம் முடிகிற வரைக்கும் பாலு அண்ணன் வரவே இல்லை. டி.வி.யை அணைக்கச் சொல்லி அந்த அம்மாளிடம் சொல்லிவிட்டு, வெளியே வந்து, இருட்டில் குரைக்கும் நாய்களுக்கு ‘சூ’ சொல்லியபடி சைக்கிளில் வீடு வந்து சேர்ந்தேன்.

பாலு, ‘அடுத்த வாரம் ‘அபராஜிதா’. நான் பார்க்காத படம். கண்டிப்பாக வீட்டில் இருப்பேன்’ என்றார். தயக்கமாக இருந்தாலும் சத்யஜித்ரே என்னை இழுத்தார். பாதிப் படம் போய்க் கொண்டிருந்தபோது, அந்த அம்மாள் பாலுவைக் கூப்பிட்டார்.

‘என்னடா இது! வாரா வாரம் அவன் வருவானா? நாம எல்லாம் தூங்க வேணாமா?’ என்று அவர் மெதுவான குரலில் சொன்னாலும் எனக்குக் கேட்டுவிட்டது. பாதியில் ‘வயிறு வலிக்குதுண்ணே!’எழுந்து வீடு திரும்பினேன். அதற்குப் பிறகு நான் அவர் வீட்டுக்கு டி.வி. பார்க்கப் போகவில்லை.

0

பாஸ்கர் சக்தி வடபுதுப் பட்டியில் இருந்தார். தேனியில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் வடபுதுபட்டி இருந்தது. நானும் ரமேஷ்வைத்யாவும் ஹரிகுமாரும் அடிக்கடி அவர் வீட்டுக்குப் போவோம். சாப்பிடுவோம். அவர் வீட்டில் இருந்த புத்தகங்களை அராஜகமாக அள்ளி வருவோம்.

வடபுதுபட்டி கிராமத்துக்கு சொந்தமான கட்டடத்தில் ஒரு டி.வி. பெட்டி இருந்தது. மாலை வேளைகளில் போடுவார்கள். பத்துப் பதினைந்து பேர், தெரு மண்ணில் அமர்ந்து படம் பார்ப்பார்கள்.

வருடம் நினைவில் இல்லை. ஆனால், அப்போது ஒரு கிரிக்கெட் போட்டி நடந்துகொண்டிருந்தது. ஒரு நாள் காலை அவர் வீட்டுக்குப் போனபோது, அந்தக் கட்டடத்தில் கூட்டமான கூட்டம். வயலுக்குப் போகிறவர்களும் கூலித் தொழிலாளர்களும் கூட டி.வி.யைச் சுற்றி கூட்டமாக நின்றிருந்தார்கள். என்னால் ஆச்சரியத்தை அடக்கவே முடியவில்லை. இவரெல்லாம் கிரிக்கெட் பார்ப்பாரா என்று நம்பவே முடியாத ஒரு நாற்பதைக் கடந்த தொழிலாளி ‘பாரு! அடுத்து இவன் ஃபோர் அடிப்பான்’ என்று கத்திக் கொண்டிருந்தார்.

0



வீட்டில் டி.வி. வாங்கியபோது ‘கேபிள் டி.வி. காலம்’ வந்துவிட்டது. சொல்லப் போனால், தூர்தர்ஷன் என்கிற சேனல் மீது வெறுப்பு என்றுகூடச் சொல்லலாம். திரும்ப வாழ்க்கை சென்னைக்கே துரத்தியது. ஒரு நாள் தூர்தர்ஷனுக்குக் கூட்டிக் கொண்டுபோனார் நண்பர் சுரேஷ். (இப்போது அவர் பெரிய இயக்குநர். தெலுங்கில் ‘கலவர் கிங்’ என்ற படத்தையும், தமிழில் விமலை வைத்து ‘எத்தன்’ படத்தையும் இயக்கியவர்.)

இருவரும் ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பாளரைப் பார்த்தோம். ஒரு சிறுகதையை ஸ்கிரிப்ட் பண்ணிக் கொடுக்கச் சொன்னார்கள். ஆளுக்கொரு கதை. ஷூட்டிங்போது கூடவே இருக்கவேண்டும் என்றார்கள். இருந்தோம்.

ஸ்டுடியோவிலேயே ஷூட்டிங். பிரம்மாண்டமான ஸ்டுடியோ. நிகழ்ச்சித் தயாரிப்பாளர், மேலே ஒரு கண்ணாடி அறைக்குள் இருந்தபடி மைக்கில் டைரக்ட் செய்து கொண்டிருந்தார். மூன்று கேமராவைக் கொண்டு ஷூட் செய்தார்கள். ஆனால், கதைக்குப் பொருந்தாத சொதப்பலான செட்டிங். சொதப்பலான நடிப்பு. உண்மையில் அந்த ஷூட்டிங் எனக்கு பயத்தை வரவழைத்தது. சிறுகதையை எழுதியவர், இப்படி மட்டமாக எடுத்ததற்காக தெருவில் வைத்து அடிப்பார் என்று தோன்றியது.

தூர்தர்ஷனில் எல்லாம் இருக்கிறது. பணம், அசத்தலான உபகரணங்கள், ஆள்பலம்...எல்லாம். ஆனால், அது அரசு நிறுவனம். ஆத்மார்த்தமாக ஒரு படைப்பைக் கொண்டுவரவேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை. மற்ற அரசு உத்யோகத்தைப் போல, 10 டூ 5 உத்யோகம்தான் அதுவும். அந்த சிறுகதையை (அரை மணிநேரக் குறும்படம்) இரண்டுமணி நேரத்தில் எடுத்துவிட்டார்கள். அது எப்படியோ போகட்டும். வெளியே வரும்போது, ஸ்கிரிப்டுக்காக சொளையாக 6000 ரூபாய் கொடுத்தார்கள்.

0

திருமணமான புதிதில், நானும் என் மனைவியும் எது தவறினாலும் ஞாயிற்றுக் கிழமை நாலு மணிக்கு டிடி பார்ப்போம். ஞாயிற்றுக் கிழமை படம் போடுவதற்கு முன்பாக, விதவிதமான, ஒழுங்கான, நல்ல சமையல் வகைகளை செய்து காண்பிப்பார்கள். உண்மையிலேயே உபயோகமான நிகழ்ச்சியாக அது இருந்தது. குழந்தை பிறந்தபிறகு, அந்தப் பழக்கம் எப்படியோ படிப்படியாக நின்று போனது. அந்த நிகழ்ச்சியை வேறு வேறொரு நேரத்துக்கு மாற்றிவிட்டார்கள்.

இப்போதும் வீட்டில் டி.வி. இருக்கிறது. தூர்தர்ஷன், சென்னைத் தொலைக்காட்சியின் பொதிகை எல்லாம் தெரிகிறது. ஆனால், ஐந்து நிமிடம்கூடப் பொறுமையோடு யாராலும் பார்க்க முடிவதில்லை. அவளுக்கு சன் டி.வி.யில் தொடர்கள், குழந்தைக்கு சுட்டி டி.வி., எனக்கு ஹெச்.பி.ஓ.

0

(சில மாதங்களுக்கு முன்னால் ‘அம்ருதா’ கலை இலக்கிய மாத இதழில் வெளியான என் கட்டுரை)

Friday, October 28, 2011

ஆசுவாசம்!

சுசீலாவால் நம்பவே முடியவில்லை. ஆச்சரியத்தோடும் கொஞ்சம் பரவசத்தோடும் அவள் குரல் ஒலிப்பதை செல்போனில் பேசும்போதே என்னால் உணர முடிந்தது.

‘நெஜமாவேதான் சொல்றீங்களா? கௌம்பி ரெடியாயிருக்கட்டுமா? சீக்கிரம் வந்துடுவீங்களா?’

‘ஆமா சுசீ! நாலு மணிக்கெல்லாம் வந்துடுறேன். பார்க்குக்குப் போயிட்டு, வெளியில எங்கயாவது ஓட்டல்ல சாப்பிடலாம். நைட்டுக்கு டிபன் எதுவும் செஞ்சுடாதே!’

இடையில், பேசுவதை நிறுத்திவிட்டு அவள் கிருஷ்ணாவிடம் பேசுவதும், அவன் ஏதோ சொல்வதும் கேட்டது. கிருஷ்ணா அவளிடமிருந்து செல்போனை வாங்கி என்னிடம் பேசினான்.

‘அப்பா!... ம்... அப்பா... பீச்சுக்கு... பீச்சுக்கு போலாம்ப்பா.’

‘போலாண்டா செல்லம்!’

‘ம்... ம்... அப்புறம் எனக்கு... எனக்கு... தோசை!’

‘வாங்கித் தர்றேண்டா கண்ணு!’

கிருஷ்ணாவுக்கு இன்னும் பார்க்குக்கும் பீச்சுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. பூங்கா, அவனுக்குக் கடற்கரையாகத் தெரிகிறது. அலைகள் கரையில் மோதாத, ‘ஜிலு ஜிலு’ காற்று வீசாத, கால்களில் மண் ‘நறநற’க்காத கடற்கரை.

‘அதுக்கு பேரு பீச் இல்லடா, பார்க்கு...’ என்று சொன்னால் அப்போதைக்கு ‘பா...க்கு’ என்பான். ஆனால், திரும்பவும் வெளியே போகவேண்டும் என்று சொல்லும்போது ‘பீச்’ என்கிற சொல்லைத்தான் பயன்படுத்துவான். ஆனால், ப்ரியாவுக்கு நன்கு விவரம் தெரிந்திருந்தது. அவள் கிருஷ்ணாவைவிட நான்கு வயது பெரியவள்.

காலையில் ஆபீஸுக்குக் கிளம்புகிற நேரத்தில், ‘எங்கேயாவது வெளியில கூட்டிட்டுப் போங்கப்பா. நாம எல்லாரும் பார்க்குக்குப் போய்கூட ரொம்ப நாளாச்சுப்பா!’ என்று ப்ரியா சொன்னபோது, அவள் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை.

‘போலாண்டா பட்டு!’ என்று அவள் கன்னங்களைச் செல்லமாகத் தட்டிவிட்டுக் கிளம்பினேன். ஆபீசுக்குப் போவதற்கே அலுப்பாக இருந்தது. ‘என்னடா வாழ்க்கை!’ என்று வெறுப்பாக வந்தது.

நகர வாழ்க்கையில் குடும்பத்தோடு கழிப்பதற்கான நேரம் என்பது நம் கையில் இல்லை. அலுவலகமும், அங்கே போய் வருவதற்கான பயண நேரமும், போக்குவரத்து நெரிசலும் தின்று எறிந்த சக்கைதான் மீதம் இருப்பது. அகாலத்தில் வீடு புகுந்ததும் படுக்கையில் விழத்தான் மனம் வேட்கை கொள்கிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டுக்கு உதவ, ஓய்வெடுக்க என்று பொழுது ஓடி விடுகிறது. ‘அடடா! குடும்பத்தோட வெளில போய் ரொம்ப நாளாச்சே!’ என்று தோன்றுகிற கணங்களில் குற்ற உணர்ச்சி ஒரு சைத்தானைப் போல மென்னியைப் பிடிக்கிறது.

அவகாசம் இருந்தாலும் என்னைப் போன்றவர்களுக்கு பல விஷயங்கள் கட்டுபடியாவதில்லை. நகருக்கு வெளியே இருக்கும் தீம் பார்க்குகளுக்கு ஒரு முறை குடும்பத்தோடு போய்வரும் செலவு என்பது மாத சம்பளத்தில் பாதியை விழுங்குகிற சமாசாரம். நல்ல தியேட்டரில் சினிமா பார்க்கலாம் என்றால், நான்குபேருக்கு ஆயிரம் ரூபாயையாவது தனியாக எடுத்து வைக்கவேண்டும். ‘நவீனம்’ என்கிற பெயரில் தியேட்டர்களெல்லாம் பெரிய பெரிய ‘மால்’களாக ஆகிக்கொண்டிருக்கின்றன. சினிமா பார்த்தோம், வந்தோம் என்பது இயலாத காரியம். ரெஸ்டாரண்ட், விளையாட்டு, வினோத அரங்கங்களையும், பலவிதமான விளையாட்டுப் பொருட்களை விற்கிற கடைகளையும் கடந்துதான் தியேட்டருக்குச் செல்லவேண்டியிருக்கிறது. குழந்தைகளின் கண்களையும் வாயையும் என்ன செய்வது?

சில காலம் சுசீலாவே வியந்துபோகும்படிக்கு அவளை கோயில் கோயிலாக அழைத்துச் சென்றேன். கோலவிழியம்மன், முப்பாத்தம்மன், துலுக்கானத்தம்மன், முண்டகக்கன்னியம்மன்... என்று சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் அத்தனை அம்மன்களுக்கும் சுசீலா நன்கு பரிச்சயம் ஆகிவிட்டாள். மற்ற செலவினங்களோடு ஒப்பிடுகையில் நடுத்தர வர்க்கவாசிகளுக்கு கோயில்கள் வரப்பிரசாதம். போக்குவரத்து, சாமிக்கு பூ, தட்டில் போட கொஞ்சம் சில்லறை... அவ்வளவுதான். ‘குடும்பத்தோட நாங்களும் வெளிய போய்ட்டு வருவம்ல?’ என்று காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளலாம்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை சட்டை, பேண்ட் போட்டுக்கொண்டு கிளம்பியபோது, சுசீலா தயங்கித் தயங்கி சொன்னாள். ‘ஏங்க! கோயிலுக்கு மட்டும் வேணாங்க... ‘இந்த வாரம் எந்தக் கோயிலு, என்ன பிரசாதம்?’னு பக்கத்து வீட்டு மாலதி கிண்டல் பண்றாங்க...’

எனக்குக் கோபம் வந்தது. நான் பத்திரிகைக்காரன். தமிழின் மிக முன்னணி நாளிதழில் நிருபர். யாருக்காகவும், எதற்காகவும் என்னை மாற்றிக்கொள்ளத் தேவையில்லைதான். ஆனால், சுசீலாவுக்கு இதையெல்லாம் புரிய வைக்க முடியாது. கொஞ்சம் குரல் உயர்த்திப் பேசினால்கூட அழுதுவிடுகிற ரகம். அவளும் என்னதான் செய்வாள்? ஒண்டுக் குடித்தனத்தின் இறுக்கத்தையும் பிசுபிசுப்பையும் தவிர்க்க மாதம் ஒரு முறையாவது எங்கேயாவது வெளியே போகத்தான் வேண்டியிருக்கிறது.

கோயில்களுக்கு அடுத்தபடியாக நகரத்தில் என் போன்றவர்களுக்கு பூங்காக்களும் கடற்கரையும் கொஞ்சம் ஆசுவாசம் தருபவையாக இருக்கின்றன. குறிப்பாக பூங்காவில் குழந்தைகள் துள்ளிக் குதித்து விளையாட இடம் இருக்கிறது. அந்தக் கணங்களில் அவர்கள் வீடு, பள்ளி சிறைகளை மறந்து போகிறார்கள்.

அதன் பின், மாதத்துக்கு ஒரு முறையாவது நாங்கள் பூங்காவுக்குப் போவது வழக்கமானது. குடும்ப விஷயங்களை பேசிக்கொள்ள, குழந்தைகளைக் கொஞ்ச நேரம் உற்சாகமாக வைத்துக்கொள்ள, எதிர்காலம் குறித்துப் பேசிக் கவலைப்பட... அது எங்களுக்கு கற்பக விருட்சமாக இருந்தது.

கடந்த மூன்று மாதங்களாக நாங்கள் வெளியே போக முடியாதபடிக்கு விடுமுறை தினங்கள் அமைந்து போயின. நண்பருடைய தந்தையின் மரணம், சுசீலாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனது, அலுவலகத்தில் வேலைப் பளு... என்று என்னென்னவோ காரணங்கள்.

அன்று சனிக் கிழமை. அலுவலகத்தில் வந்து உட்கார்ந்ததுமே எடிட்டர் அழைத்தார்.

‘வேணு! அடுத்த வாரம் சப்ளிமெண்ட்டரி ஒண்ணு போடப் போறோம். ‘பெண்கள் சிறப்பிதழ்.’ ஒரு திருநங்கையோட பேட்டி இருந்தா நல்லா இருக்கும்...’ அவரே ஒரு செல்போன் எண்ணைக் கொடுத்து பேசச் சொன்னார். பேசினேன்.

அவர் பெயர் சௌமியா. ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, ஒரு தொண்டு நிறுவனத்தில் பணியாற்றியபடியே, பிரபல நாடகக் குழு ஒன்றில் நடித்துக்கொண்டிருந்தார். அன்று மாலையே பேட்டிதர ஒப்புக்கொண்டார்.

‘என் வீட்ல வேணாங்க. ஹவுஸ் ஓனர் என்னை பொண்ணுன்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. யாராவது பாக்க வந்தா சந்தேகப்படுவாங்க. உங்க வீட்டு அட்ரஸ் சொல்லுங்க. நான் அங்க வந்துர்றேன். இல்லன்னா, பொதுவா ஏதாவது ஒரு இடம் சொல்லுங்க. மீட் பண்ணலாம்.’

எனக்கு ப்ரியா காலையில் சொன்னது நினைவுக்கு வந்தது.

‘ஏதாவது பார்க்ல மீட் பண்ணலாமா?’

சௌமியா ஒப்புக்கொண்டார். இருவரும் கே. கே. நகரில் இருக்கும் ஒரு பூங்காவில் மாலை ஐந்து மணிக்கு சந்திப்பதாக முடிவு. நான் உடனே சுசீலாவுக்கு போன் செய்து நாலரை மணிக்கு பூங்காவுக்குப் போகலாம் என்று தகவல் சொன்னேன். நான்கு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிட்டேன். ப்ரியாவும் கிருஷ்ணாவும் தயாராக இருந்தார்கள். ஓடி வந்து கட்டிக்கொண்டார்கள். கிளம்பும்போது, நான் சுசீலாவிடம் ‘வாய்ஸ் ரெக்கார்டரை’ எடுத்து வைக்கச் சொன்னேன். அவள் கேள்விக்குறியுடன் பார்த்தாள்.

‘இல்லம்மா. ஒருத்தங்களை இண்டர்வியூ பண்ண வேண்டியிருக்கு. அரை மணி நேரம்தான். அப்புறம் நாம நம்ம வேலையைப் பாக்கலாம்.’

‘அப்போ ஆபீஸ் வேலைக்காகத்தான் எங்களைக் கூப்பிடுறீங்களா?’

நான் சுசீலாவிடம் நிலைமையை விளக்கிச் சொல்லவேண்டியிருந்தது. பைக்கில் வருகிறபோது ப்ரியா, ‘அப்பா! பில்லர்கிட்ட மாடியில ஒரு ரெஸ்டாரண்ட் இருக்குல்ல... அங்க போகலாம்ப்பா. எனக்கு சப்பாத்தி...’

‘எனக்கு தோசை...’ என்றான் கிருஷ்ணா. நடுத்தர வர்க்கத்துக் குழந்தைகளுக்கு தோசையையும் சப்பாத்தியையும் தாண்டி யோசிக்க முடிவதில்லை.

நாங்கள் பூங்காவுக்குள் நுழைந்த பத்து நிமிடத்தில் சௌமியா வந்துவிட்டார். அதிகம் போனால் இருபத்தைந்து வயது இருக்கும். படிய வாரிய தலைமுடி. ஜீன்ஸ், டீ சர்ட் போட்டிருந்தார். சிரித்த, குழந்தை போன்ற முகம். நான் சுசீலாவையும் குழந்தைகளையும் அறிமுகப்படுத்தினேன். சுசீலாவை குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு, நானும் சௌமியாவும் புல் தரையில் அமர்ந்தோம்.

நான் உரையாடலை எங்கிருந்து தொடங்கலாம் என்ற யோசனையோடு, வாய்ஸ் ரெக்கார்டரை ஆன் செய்தேன். சற்று தூரத்தில் அமர்ந்தபடி சுசீலா எங்களையே பார்த்துக்கொண்டிருந்தாள். நான் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

‘ம்... உங்களைப் பத்தி சொல்லுங்க... உங்க சொந்த ஊரு, உங்க அப்பா அம்மா, உங்க இளமைக் காலம்...’

சௌமியா பேச ஆரம்பித்து சிறிது நேரம்தான் ஆகியிருக்கும். திடீரென்று ப்ரியா ஓடி வந்து, ‘அப்பா! கிருஷ்ணா சருக்குல ஏறணும்னு அடம் பிடிக்கிறாம்ப்பா...’ என்றாள். அதற்குள் சுசீலா வந்து அவளை இழுத்தாள். ‘அப்பாவை தொல்லை பண்ணக்கூடாது. வா!’ குழந்தைகள் விளையாட, சுசீலா தனியாக அமர்ந்திருக்க நான் அடிக்கடி அவர்களையே திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘என்ன சார்! ரொம்ப அன் ஈசியா இருக்கா? வேணும்னா அவங்களையும் இங்க வந்து உட்காரச் சொல்லுங்களேன். எனக்கு ஒரு பிரச்னையும் இல்ல...’

நான் நன்றியோடு சௌமியாவைப் பார்த்துவிட்டு, சுசீலாவை கை காட்டி அழைத்தேன். என் பக்கத்தில் அமரச் சொன்னேன். சங்கடத்தோடுதான் அமர்ந்தாள். ‘அக்கா! இதுல தனியா பேசுறதுக்கு ஒண்ணும் இல்ல. நான் பேசுறதெல்லாம் பத்திரிகையில வரப் போகுது. ஊரே படிக்கப் போகுது. அப்புறம் என்ன...? கூச்சப்படாம உக்காருங்க...’ என்று சௌமியா, சுசீலாவின் கையைப் பிடித்து உரிமையோடு அழுத்தினார். அதற்குப் பிறகு குழந்தைகள் அடிக்கடி எங்களருகே ஓடி வருவதும், கூச்சல் போடுவதும், என்னையும் சுசீலாவையும் பிடித்து இழுப்பதும்கூட அந்த நேர்காணலுக்குப் பெரிய தொந்தரவாக இல்லை.

சௌமியா, கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொன்னார். அவருக்குள் இளமைப் பருவத்தில் நிகழ்ந்த மாற்றங்கள், விஷயம் தெரிந்து வெளியே துரத்தப்பட்டு வீடு அன்னியமாகிப் போனது, தெருவில் இளைஞர்கள் கேலி செய்து அடித்து விரட்டியது, மும்பைக்கு ஓடிப் போய் ரயிலில் பிச்சை எடுத்தது, அறுவை சிகிச்சை செய்துகொண்டது, ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாமல் திரிந்தது... என்று அவர் பேசப் பேச கலங்கிப் போய் கேட்டுக்கொண்டிருந்தாள் சுசீலா. ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசினார் சௌமியா.

நேர்காணல் முடிந்ததும் நான் ஒரு ஆட்டோ பிடித்து வந்தேன். சௌமியா ஆட்டோவில் ஏறுவதற்கு முன்னால் சுசீலா, அவர் கையைப் பிடித்துக்கொண்டாள். ‘கண்டிப்பா ஒரு நாள் எங்க வீட்டுக்கு வரணும்...’ சௌமியா சிரித்துத் தலை அசைத்து, கிருஷ்ணாவின் கன்னத்தில் செல்லமாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டுப் போனார்.

நானும் சுசீலாவும் பூங்காவில் இருந்த பெஞ்ச் ஒன்றில் பேசுவதற்கு விஷயம் இல்லாதது போல கொஞ்ச நேரம் எங்கேயோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தோம். சுசீலாதான் மௌனத்தை உடைத்தாள். ‘கிளம்பலாமா?’ என்றாள். விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை அழைத்தாள்.

நான் பைக்கைக் கிளப்பினேன்.

‘சாப்பிடுறதுக்கு எங்க போலாம் சுசீ?’

‘ஓட்டலுக்கெல்லாம் வேணாங்க. வீட்டுக்கே போயிடலாம். ஃபிரிட்ஜுல மாவு இருக்கு. தோசை ஊத்திக்கலாம்.’

(கல்கி 30.10.2011 இதழில் வெளியான சிறுகதை)

*

Monday, September 19, 2011

அறியப்படவேண்டிய நடிகர்-1



‘எந்த கேரக்டரா இருந்தாலும் சிறப்பா பண்ணனும்!’

- நடிகர் நரேன்


நரேன். இயக்குநர் பாலுமகேந்திரா கண்டுபிடித்த அருமையான நடிகர். ‘பாலுமகேந்திரா கதைநேரம்’, ‘கிருஷ்ணதாசி’, ‘கனாக்காணும் காலங்கள்’ உள்பட நிறைய தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருப்பவர். இயக்குநர் மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே!’ திரைப்படத்தில் மகளைக் கடத்தல்காரர்களிடம் பறிகொடுத்த தந்தையாக நடித்து, ‘அப்புக்குட்டி!’ என்று கதறியழுத காட்சியில், தமிழ் சினிமா ரசிகர்களை ‘இவர் யார்?’ என்று திரும்பிப் பார்க்க வைத்தவர். ‘யுத்தம் செய்’ படத்தில் காவல்துறை அதிகாரி. ‘பொல்லாதவன்’ திரைப்படத்தை இயக்கிய வெற்றிமாறனின் அடுத்த படைப்பான ‘ஆடுகளம்’ திரைப்படத்தில் மிக முக்கிய பாத்திரத்தில் நடித்தவர். கதையின் திருப்புமுனையே அவருடைய சேவலோடு தனுஷின் சேவல் மோதும் சண்டைக் காட்சிதான். அவரை சந்தித்து உரையாடினோம்.

கேள்வி: நீங்க எப்போ சினிமாவுக்கு வந்தீங்க, ஏன் வந்தீங்க, எத்தனை வருஷமா இந்த ஃபீல்டுல இருக்கீங்க?

நரேன்: எனக்கு சினிமா ரொம்ப ரொம்பப் பிடிக்கும். நடிகராகவோ, இயக்குநராகவோ, ஒரு தயாரிப்பாளராகவோ... ஏதோ ஒண்ணு, சினிமாவுல நாம இருக்கணும்ங்கற எண்ணம் எனக்கு சின்ன வயசுலருந்தே உண்டு. நானும் டிகிரி முடிச்சுட்டு, நிறையா வேலைக்குப் போனேன். பிஸினெஸெல்லாம் பண்ணினேன். ஆனா, எதுலயும் என்னால செட்டில் ஆக முடியல. கடைசியில நமக்கு சினிமாதான் சரின்னு ஒரு நாள் முடிவு பண்ணினேன். பாத்துக்கிட்டு இருந்த எல்லா வேலைகளையும் உதறிட்டு அஸிஸ்டெண்ட் டைரக்டர் ஆகலாம்னு வந்தேன். அப்பிடி முடிவு செஞ்சுட்டேனே தவிர, அதுக்காக பல போராட்டங்கள் நடத்த வேண்டி இருந்துச்சு. எந்த டைரக்டர்கிட்டயும் அஸிஸ்டெண்ட்டா சேரவே முடியல. அந்தத் தேடல்லயே சில வருஷங்கள் ஓடிப் போயிடுச்சு. அப்பதான் வேற என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். எனக்கு நடிக்கணுங்கற ஆசையும் இருந்துச்சு. அப்பதான் ஒரு நண்பர், ‘நடிகர் சங்கத்துல போய் சேருங்க! ஏதாவது தொடர்பு கிடைக்கும்’னு சொன்னார். நானும் நடிகர் சங்கத்துல போய் சேர்ந்தேன். அங்க நடக்குற டான்ஸ் கிளாஸ்ல கலந்துக்கிட்டேன். அங்க, எந்தெந்த இடத்துல படம் எடுக்குறாங்கன்னு தகவல் கிடைக்கும். நானும் எல்லா புது நடிகர்களையும் போல என்னை ஃபோட்டோ எடுத்து வச்சுக்கிட்டு, டைரக்டர்களைப் பாத்து குடுக்க ஆரம்பிச்சேன். அப்பிடிக் குடுக்குறப்போதான் யோசிச்சேன். ‘எனக்கு நடிப்புல என்ன தெரியும்?’ முதல்ல என்னை நான் வளத்துக்கனும்னு முடிவு பண்ணினேன். ஷூட்டிங்ல போய் என்ன செய்யப் போறோம், எப்பிடி நடிக்கப் போறோம்ங்கற பயத்துலயே இருந்துக்கிட்டு, அதே சமயம் நடிக்க வாய்ப்புக் கேக்கறதும் எனக்கு சரியாப் படலை.

அந்த சமயத்துல டான்ஸ் மாஸ்டர் கலா அவர்கள் ஒரு நடிப்புக் கல்லூரி ஆரம்பிச்சிருந்தாங்க. அங்க போய் சேர்ந்தேன். அங்க மதன் கேப்ரியல் அவர்கள்தான் சீஃபா இருந்தார். அவர் அடையாறு திரைப்படக் கல்லூரியில நடிப்புத் துறைத் தலைவரா இருந்தவர். அவருக்கு அசிஸ்டெண்ட்டா இருந்தவர் திரு. வேல் முருகதாஸ். இவங்க ரெண்டுபேரும்தான் எனக்கு ஆசிரியர்கள். முதல் நாள் இன்ஸ்டிடியூட்டுக்குப் போனேன். மொத்தம் பதினெட்டு மாணவர்கள் என் வகுப்புல இருந்தாங்க. அதுல நடிப்பே தெரியாத ஒரே மாணவன் நான் தான். ஆனா, கோர்ஸ் முடியும்போது எனக்கு அங்கே நல்ல நண்பர்கள் கிடைச்சாங்க. எனக்கு நல்ல எக்ஸ்போஷர் கிடைச்சுது. என்னாலயும் நடிக்க முடியும்னு ஒரு நம்பிக்கையும் வந்துச்சு. இந்தப் பெருமையெல்லாம் என் ஆசிரியர்களைத்தான் சேரும். அப்போ டான்ஸ் மாஸ்டர் கலா அவர்கள் எல்லாம் ரொம்ப உதவியா இருந்தாங்க.

அந்த கோர்ஸ் முடிஞ்சதுக்கு அப்புறம்தான் நான் நடிப்புல எந்த இடத்துல இருக்கேங்கறதே எனக்குத் தெரிஞ்சுது. அந்தப் புரிதல் வந்ததுக்கு அப்புறம்தான் இன்னும் நிறையா கத்துக்கணும், இன்னும் நிறையா பிராக்டீஸ் பண்ணணும்ங்கற எண்ணம் வந்துச்சு. அப்போ எனக்கு நான் படிச்ச நடிப்புக் கல்லூரியிலேயே, மதன் கேப்ரியல் மூலமா ஆசிரியரா சேர்றதுக்கு ஒரு வாய்ப்புக் கிடைச்சுது. சில வகுப்புகளை எடுத்தேன். அந்த வகுப்புகள்கூட எனக்கான பயிற்சியாத்தான் இருந்தது.

அப்போதான் பாலுமகேந்திரா சாரை வந்து ஒரு தடவை பார்த்தேன். வேற யார்கிட்டயும் போய் வாய்ப்புக் கேக்கலை. எனக்கு என்ன நடிக்கத் தெரியும்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் யார்கிட்டயும் போய் வாய்ப்பே கேக்கலை. பாலுமகேந்திரா சார் அப்போ இந்திப் படம் எடுத்துக்கிட்டு இருந்தார். ‘இந்தி தெரியுமா?’ன்னு கேட்டார். ‘தெரியாது’ன்னு சொன்னேன். ‘நான் தமிழ்ப்படம் எடுக்குறப்போ அறிவிப்பு வரும். அப்போ நேரா என்னை வந்து பாருங்க!’ன்னு சொன்னார் பாலுமகேந்திரா சார். ஆனா, அறிவிப்பு வரலை. அவரே என் ஃபோன் நம்பருக்குப் பேசிக் கூப்பிட்டார். போனேன். ‘ராமன் அப்துல்லா’ங்கற அவரோட படத்துல எனக்கு ஒரு சின்ன கேரக்டர் குடுத்தார். அதுக்கு முன்னாடி நான் நடிப்புக் கல்லூரியில ஆசிரியரா இருந்தப்பவே, ‘ஓம் சரவணபவா!’ன்னு ஒரு படம் எடுத்தாங்க. என். கிருஷ்ணசாமின்னு ஒரு தயாரிப்பாளர். ‘படிக்காத மேதை’ பட்ம் எடுத்தவர். அந்த ‘ஓம் சரவணபவா’வுல நான் சிவனா நடிச்சிருக்கேன். அதுதான் என்னோட முதல் படம். அதுக்கப்புறம்தான் ‘ராமன் அப்துல்லா’வுல சின்ன கேரக்டர்ல நடிக்க வாய்ப்புக் கிடைச்சுது. பாலுமகேந்திரா சார், ‘நல்லா வந்திருக்கு. நல்லா நடிக்கிறீங்க. அடுத்து நான் படம் பண்ணும்போது என்னை வந்து பாருங்க! நடுவுல நடுவுல வந்து என்னைப் பாத்து வாய்ப்புக் கேக்க வேண்டிய அவசியம் இல்லை’ன்னு சொன்னார். அவர் அப்பிடி சொன்னது எனக்கு ரொம்ப உத்வேகம் குடுத்த மாதிரி இருந்தது. இந்த மாதிரி ஒரு பெரிய டைரக்டர், ‘ஓ.கே.’ன்னு சொன்னதைத்தான் நடிப்புல என்னோட முதல் படியா நான் நினைச்சிருக்கேன்.

கேள்வி: பாலுமகேந்திரா சார் அதுக்கப்புறம் ‘கதை நேரம்’ ஆரம்பிச்சப்போ உங்களைக் கூப்பிட்டு விட்டாரா?

நரேன்: இல்ல. அது ஒளிபரப்பாகி ஒரு வாரம் கழிச்சுத்தான் எனக்குத் தெரியும். அதுக்கப்புறம்தான் நான் அவரைப் போய்ப் பார்த்தேன். அவர், ‘யோவ்! எங்கய்யா போயிருந்தீங்க? நம்பரெல்லாம் மாறிப் போச்சு. உங்களுக்காக ரெண்டு, மூணு கேரக்டர் எல்லாம் போட்டு வச்சிருந்தேன்’ன்னார். அப்புறம் ‘உங்களுக்காக ரெண்டு, மூணு கதையெல்லாம் வச்சிருக்கேன்’ன்னாரு. அதுக்கப்புறம் ‘கதைநேரம்’ல நடிக்க ஆரம்பிச்சேன். ‘கதைநேரம்’ பண்ணும்போதுதான் நான் நடிப்புல எவ்வளவு பின் தங்கியிருந்தேன்னு எனக்குத் தெரிஞ்சுது. நடிப்புல இன்னும் எவ்வளவு விஷயம் இருக்கு, இன்னும் எவ்வளவு என்னை வளத்துக்கணும் அப்படிங்கறதெல்லாம் தெரிஞ்சுது. ஸ்கூல்ல படிச்சது, பிராக்டீஸ் பண்ணினது இதையெல்லாம் தாண்டி பிராக்டிக்கலா எவ்வளவு விஷயம் இருக்குன்னு எனக்குத் தெரிஞ்சுது. நான் பாலுமகேந்திரா சார்கிட்டதான் நடிப்பைக் கத்துக்கிட்டேன். அவர்தான் என்னோட முதல் குரு. அவர்கிட்ட ஒரு வருஷம் தொடர்ந்து நடிச்சேன். வேற எந்த வேலையும் செய்யாம, அவர் எப்போ கூப்பிட்டாலும் நடிக்கறதுக்குத் தயாரா இருந்தேன். பாலுமகேந்திரா சார் யூனிட்ல எனக்கு நிறையா நண்பர்கள் கிடைச்சாங்க. வெற்றிமாறன், விக்ரம் சுகுமாரன், சுரேஷ்... இப்பிடி. அங்க போய்த்தான் நிறையா படிக்க ஆரம்பிச்சேன். நான் வெகுஜனப் பத்திரிகை, எழுத்தைத்தான் அதுவரைக்கும் நிறையா படிச்சுக்கிட்டு இருந்தேன். பாலுமகேந்திரா சார்தான் நிறையா எழுத்தாளர்களையும் நல்ல இலக்கியத்தையும் அறிமுகம் செஞ்சு வச்சார். எனக்கு ரொம்ப இலக்கியம் தெரியாதுன்னாலும், ‘இதைப் படிக்கலாம், இது வேணாம்’னு பிரிச்சுப் பாக்க அதுக்கப்புறம் முடிஞ்சுது. ‘கதைநேரம்’ முடிஞ்சதுக்கு அப்புறம் நிறைய தொலைக்காட்சித் தொடர்கள்ல நடிக்க வாய்புக் கிடைச்சுது.

கேள்வி: எத்தனை சீரியல்ல நடிச்சிருப்பீங்க?

நரேன்: எப்பிடியும் இருபதுக்கு மேல இருக்கும். முதல்ல ‘கதைநேரம்’, அப்புறம் ‘கிருஷ்ணதாசி’ல முக்கியமான ரோல். சின்னதும் பெருசுமா நிறையா பண்ணிட்டேன். கடைசியா, நான் விஜய் டி.வி.ல ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ பெரிய ஹிட். அதுக்கப்புறம் விஜய் டி.வி.லயே நிறையா சீரியல்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன்.

கேள்வி: ‘அஞ்சாதே!’ல நடிக்கிற வாய்ப்பு எப்பிடி வந்தது?

நரேன்: இயக்குநர் மிஷ்கின்கிட்டருந்து அழைப்பு வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. ‘அஞ்சாதே!’ வெளியானதுக்கு அப்புறம் எல்லாருமே நீங்க ரொம்ப நல்லா நடிச்சிருக்கீங்கன்னு சொன்னாங்க. அதுக்கான எல்லா பெருமையும் இயக்குநர் மிஷ்கினுக்குத்தான் போய்ச் சேரணும். அதுல என்னோட பங்களிப்பு ரொம்ப கம்மின்னுதான் நான் சொல்ல முடியும்.

கேள்வி: அதுல நடந்த ஒரு சின்ன சம்பவத்தைச் சொல்லுங்களேன்!

நரேன்: அதுல கதைப்படி என் பொண்ணு ரோட்ல விழுந்து கிடப்பா. நான் அவளைப் பாத்து கதறிக்கிட்டே நடந்து வரணும்னு மிஷ்கின் சொன்னார். எனக்கு என்ன தோணிச்சுன்னா, என் பொண்ணைப் பாத்ததும், எனக்கு என்ன வயசா இருந்தாலும் ஓடிப் போய்ப் பாக்கணும்னுதான் தோணிச்சு. ஏன்னா, என் மகளை ஒரு லுங்கியோட சுத்தி ரோட்ல போட்டிருக்கான். அவ டிரெஸ் இல்லாம ரோட்ல கிடக்கா. அந்த நிலைமையில என்னால ஓடத்தான் முடியும். நின்னு நிதானமா நடக்க முடியாது. இதை நான் மிஷ்கின்கிட்ட சொன்னேன். அவரு ‘இல்ல, நீங்க நின்னு நிதானமா நடங்க. இதை நான் ஹைஸ்பீட்லதான் எடுக்கப் போறேன்’னு சொன்னார். நான் திரும்பச் சொன்னேன். ‘இல்ல சார், என்னால நடக்க முடியல. அந்த வேகத்துல ஓடத்தான் வருது’ன்னு சொன்னேன். ‘நடக்கணும்னா நடக்கலாம். ஆனா, அது எக்ஸர்சைஸ் மாதிரி இருக்கும். உணர்ச்சி பூர்வமா செய்ய முடியல’ன்னேன். உடனே மிஷ்கின் சூட்டிங்கை நிப்பாட்டிட்டார். நான் நடந்து வர்ற அந்தக் காட்சிக்கு ஏற்கெனவே ஒரு பின்னணி இசையை தயார் பண்ணி வச்சிருந்தார். அதை அசிஸ்டெண்ட் டைரக்டரை தேடி எடுக்கச் சொன்னார். தன்னோட வாக்மேன்ல போட்டுக் காமிச்சார். அது வரைக்கும் ஷூட்டிங் நிக்குது. அதைக் கேட்டப்போதான் எனக்கு அதுக்கான ஃபீலிங் வந்துச்சு. ‘அய்யய்யோ என் பொண்ணு!’ன்னு ஓடுறதைவிட, ‘அய்யய்யோ என் பொண்ணைக் காப்பாத்த கையாலாகாதவனா ஆயிட்டேனே! எப்பிடி என் பொண்ணைப் பாக்கப் போறேன்?’ங்கற உணர்வு வந்துச்சு. அதுக்கு மிஷ்கின் சொன்ன காரணம் என்னன்னா, ‘நீ யாரா வேணா, எப்பிடி வேணா இரு. லாஜிக் எப்பிடி வேணா இருக்கட்டும். எனக்கு நீங்க நடந்து வரும்போது, படம் பாக்குறப்போ, ஒவ்வொரு பெண்ணைப் பெத்த தகப்பனும் அழணும். அப்பிடி அழுதாதான், கடைசியில அப்பிடி செஞ்சவனை ஒரு ஜந்துவை சுடுற மாதிரி சுட முடியும். ஒரு உயிரில்லாத ஜடப் பொருளை சுடப் போற மாதிரிதான் இதுல காட்சி இருக்கு. அதுக்கு நீங்க இந்த இடத்துல நடந்து வர்றதுதான் ரொம்ப முக்கியம். ஒரு தகப்பனோட கையாலாகாத்தனம்தான் எனக்கு வேணும்’ அப்பிடின்னு சொல்லி அவர் எனக்குப் புரிய வச்சார். அதுக்கப்புறம்தான் என்னால பண்ண முடிஞ்சுது. இன்னிக்கும் அந்தக் காட்சியை ரொம்பப் பெருசாத்தான் எல்லாரும் பேசிக்கிட்டு இருக்காங்க. மிஷ்கின் சார் எனக்கு வாய்ப்பும் குடுத்து, நான் கேக்கற கேள்விக்கு பொறுமையா உக்காந்து பதிலும் சொன்னார். பொதுவா எந்த இயக்குநரும் இப்பிடியெல்லாம் சொல்லவே மாட்டாங்க. ‘யோவ்! மெல்லமா நடய்யா!’ன்னுட்டு போயிடுவாங்க. அந்தப் படம் வெளிய வந்ததுக்கப்புறம் என்னைப் பாக்கறவங்கள்லாம் ‘என்னால அதைப் பாக்க முடியல!’ன்னு சொல்லியிருக்காங்க. ஒரு ஆண்பிள்ளையை மட்டும் பெத்த தகப்பன்கூட என்கிட்ட வந்து சொல்லியிருக்கார். அதுக்கு முக்கியக் காரணம் மிஷ்கின் சார்தான்.

கேள்வி: நடிக்கறதுதான் உங்க கேரியர்னு நீங்க முடிவு பண்ணிட்டீங்க. அதுக்கப்புறம் ஹீரோவா நடிக்கணும், வில்லனா நடிக்கணும்னு ஏதாவது ஒரு புள்ளியைத் தேடிப் போனீங்களா?

நரேன்: அப்பிடியெல்லாம் இல்ல. எனக்கு சினிமாவுல ஏதாவது ஒரு பங்களிப்பை செலுத்தணும், அவ்வளவுதான். சினிமாவுல எந்த வேலையா இருந்தாலும் செய்யறதுக்குத் தயாரா இருக்கறவன் நான். நடிக்கணும்னு வரும்போது அந்த கேரக்டராத்தான் நடிக்கணும்னு தோணும். எனக்கு சின்ன வயசுலயே நிறைய கேள்விகள் தோணும். ‘ஏன் இவர் இவ்வளவு ஃபிரெஷ்ஷா இருக்காரு? ஆனா சோகமா இருக்காரு? நடிக்கிறாரா?’ன்னு தோணும். இன்ஸ்டிடியூட்ல போய் படிக்கும்போதுதான் அதுக்கெல்லாம் அர்த்தம் தெரிஞ்சுது. ஒரு குணச்சித்திர நடிகரா வரணுங்கறதுதான் என்னோட விருப்பமா இருந்துச்சு. குறிப்பா சொல்லணும்னா, திரு நாசர் அவர்களைப் போல வரணும்னு. எனக்கு எல்லா நடிகர்களையும் பிடிக்கும். ஒரு கேரக்டரை உள்வாங்கி, அதாவே மாறுவது எப்பிடின்னு தெரிஞ்சதுக்கப்புறம் நான் அவர் மாதிரி வரணும்னு நினைச்சேன். நான் டைரக்டரோட நடிகனா இருக்கணும்னுதான் விரும்பறேன். எனக்குன்னு ஒரு பாணியோ, ஸ்டைலோ இல்லாம டைரக்டர்கள் என்ன சொல்றாங்களோ அதை உள்வாங்கி, அதை அப்பிடியே நடிப்பாக்கணுங்கறதுதான் என்னோட பாணியா இருக்க முடியும். அதுதான் ஒரு நடிகனோட கடமையா இருக்க முடியும்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்.



கேள்வி: சினிமாவையும் நடிப்பையும் நம்பி இந்தக் காலத்துல வாழறது சாத்தியமா?

நரேன்: ரொம்பக் கஷ்டம். சிலபேருக்கு அது ஈசியா அமைஞ்சிடுது. சிலபேர் ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு, கடைசிவரைக்கும் அப்பிடியே இருந்துடுறாங்க. நானே ‘நான் இது இதுலதான் நடிப்பேன், எனக்கு இவ்வளவு சம்பளம் குடுத்தாத்தான் நடிப்பேன்’னு நிறைய வாய்ப்புகளை மறுத்துடுறேன். காரணம் என்னான்னா, என்னோட மனைவியும், குடும்பமும் எனக்கு சப்போர்ட் பண்றாங்க. அதனால பொருளாதாரரீதியா என்னால சமாளிக்க முடியுது. இது நிறையாபேருக்கு நடக்காது. நான் பதினஞ்சு வருஷமா போராடிக்கிட்டு இருக்கேன். என் மனைவி குடும்பத்தையும் எல்லா பொறுப்புகளையும் எடுத்துக்கிட்டு செய்யறதால, என்னால என் லட்சியத்தை நோக்கிப் போக முடியுது. ‘அஞ்சாதே!’ வந்ததுக்கு அப்புறமும் எனக்கு பெரிய கேரக்டர் வரலை. அதுக்காக காத்திருந்து நான் முயற்சி பண்றேன்னா அதுக்குக் காரணம் என்னோட குடும்பப் பின்னணிதான். இது எல்லாருக்கும் சாத்தியமில்ல. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒவ்வொரு மாதிரியா வாழ்க்கை அமையுது. அதை பொதுப்படையா சொல்ல முடியல. சொல்றது கஷ்டம். சினிமாவைப் பொறுத்தவரை அவங்கவங்களா அமைச்சுக்கறது, அமையறது... இப்பிடித்தான். ஒரு ஐ.டி. கம்பெனியில வேலை பாக்கணும்னா இஞ்ஜினியரிங் முடிச்சிருக்கணும், ஒரு டிகிரி முடிச்சிருக்கணும்னு என்னென்னவோ அளவுகோல்கள் இருக்கு. வழிமுறைகள் இருக்கு. சினிமாவுல இல்ல.

கேள்வி: ஒரு படத்தைப் பாக்கும்போது ‘இந்த ரோல்ல நாம பண்ணியிருக்கலாமே’ன்னு ஏதாவது ஒரு நடிகரோ, ஒரு பாத்திரமோ உங்களை பாதிச்சிருக்கா?

நரேன்: இல்ல. பொதுவா சினிமாவுல வர்ற எல்லா பாத்திரங்களையும் பண்ணணும்னு ஆசை இருக்கத்தான் செய்யும். நடைமுறையில சாத்தியம் இல்லல்ல? அந்த மாதிரி எதுவும் இல்ல. பாக்கும்போது பிரமிப்புத்தான் கூடுதே தவிர, நாம பண்ணியிருப்போமான்னு ஒரு சந்தேகம்கூட அடிப்படையிலகூட வருது. (சிரிப்பு).

கேள்வி: ‘ஆடுகளம்’ படத்தில் நடிச்ச அனுபவம் பத்தி சொல்லுங்களேன்!

நரேன்: இயக்குநர் வெற்றிமாறனோட ஒர்க் பண்றதுங்கறது ரொம்ப இண்டரெஸ்டிங்கான விஷயம். டென்ஷனே இல்லாம எல்லாத்தையும் சொல்லிக் குடுப்பார். இந்தப் படத்துல மதுரை பாஷைல பேசணும். நாம டயலாக் பேசறப்போ, அந்த மொழி சரியா வரலைன்னா, பதட்டமே படமாட்டாரு. ‘சரி. பரவால்ல இன்னொருதடவை எடுத்துக்கலாம்’னு சொல்லுவாரு. அந்த அளவுக்கு ரொம்ப சப்போர்ட்டிவா இருப்பாரு. அவரை எனக்கு பத்தாண்டுகளாத் தெரியும். அவரோட என்னால ரொம்ப சுலபமா ஒன்றி வேலை பார்க்க முடியுது. ரொம்ப ஃபிரீயா இருந்தது.

‘ஆடுகளம்’ பட அனுபவத்துல ஒண்ணே ஒண்ணை நான் சொல்லணும். வெற்றிமாறன் ‘நீங்க மதுரை மொழிதான் பேசணும்’னு எங்களுக்கு சொல்லிக் குடுத்தாருன்னா, அதுக்குக் காரணம் இருக்கு. அவரு அதுக்கு முன்னாடி மதுரைக்குப் போய்த் தங்கி, கிட்டத்தட்ட ஒருவருஷம் மதுரைத் தமிழைக் கத்துக்கிட்டாரு. இது எனக்கு ரொம்பப் புதுசா இருந்தது, ஆச்சரியமா இருந்தது. அவரு கத்துக்கிட்டு எங்களுக்குக் கத்துக் குடுக்கறாரு. இன்னும் அவர் அந்த மதுரைத் தமிழை சரியா பேசிக்கிட்டு இருக்காரு. டப்பிங்ல நாங்க பேசறதை சரி பண்ணினார்.

கேள்வி: வெற்றிமாறன், பாலுமகேந்திராவின் சீடர். இருவரிடமும் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது? ஏதாவது வித்தியாசம் உண்டா?

நரேன்: பாலுமகேந்திரா சார்கிட்ட சில சீரியல் நடிகர்கள் எல்லாம்கூட நடிச்சிருக்காங்க. அவர்கிட்ட அவங்க சொல்லுவாங்க, ‘சார்! என்ன பண்ணணும்னு சொல்லுங்க. அப்பிடியே பண்றோம்’னு சொல்லுவாங்க. நான் அவர்கிட்ட ஆர்வக்கோளாறோட போய், ‘சார், நானே புதுசா ஏதாவது பண்றேன்’னு சொல்லி எதையாவது செய்வேன். அதுல அவருக்கு திருப்தியே வராது. கடைசியில ‘எப்பிடி பண்ணினா நல்லா இருக்கும் சார், எனக்குப் புரியல சார்!’னு அவர்கிட்டேயே கேப்பேன். அவர் சின்னதா ஏதாவது பண்ணிக் காமிப்பார். அப்போதான், ‘அய்யய்யோ! இது நமக்குத் தோணலியே!’ன்னு நினைப்பேன். அவர்கிட்ட நிறையா கத்துக்கிட்டேன். அவர் எல்லாத்துக்கும் காரணம் சொல்லுவாரு. அவருடைய பாணி ஒண்ணு இருக்கும். பேசுற தொனி, அங்க அசைவுகள் எல்லாம் இருக்கும். வெற்றிமாறன் எல்லாத்தையும் நேச்சுரலாத்தான் வேணும்னு சொல்லுவாரு. அவர்கிட்ட அந்த கேரக்டரா நடந்து காட்டணும். கொஞ்சம் ஜாஸ்தியாவோ, குறைச்சலாவோ பண்ணிடக்கூடாது. ரொம்ப யதார்த்தமா அந்தப் பாத்திரமாவே வாழணும். ஆனா, வெற்றி சார்கிட்ட ரொம்ப ஜாலியா ஒர்க் பண்ணலாம். எல்லாத்தையும் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம். பொதுவா, இந்த இரண்டு இயக்குநர்கள்கிட்டயுமே எதையும் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம். நம்ம சந்தேகத்தை அவங்க கிளியர் பண்ணி புரிய வச்சிடுவாங்க. ஸ்டைல் மட்டும் வேற, வேற.

கேள்வி: நடிப்புல உங்களோட குறிக்கோள் எதுவா இருக்கு?

நரேன்: நான் ஒரு கேரக்டர் பண்ணி, படம் வெளியாயிடுச்சு. அந்த கேரக்டர்ல நான் பண்ணினது ரொம்ப சரியா இருக்கணும். யாராவது, ‘இவருக்கு பதிலா வேற யாராவது பண்ணியிருக்கலாமே!’ன்னு சொல்லிடக்கூடாது. நான் எந்த பாத்திரத்துல நடிச்சாலும் அது பொருத்தமா, சரியா இருக்கணும். இதை வேற யாராலயும் பண்ண முடியாதுன்னு சொல்ல வரலை. ‘அய்யய்யோ! இதை நல்லாப் பண்ணியிருக்கலாமே!’ன்னு ஒரு அவப்பெயர் வந்துடக்கூடாது. எந்த பாத்திரமா இருந்தாலும் சிறப்பா பண்ணணுங்கறதுதான் என் லட்சியமே.

0

(கனடாவில் இருந்து வெளிவரும் ‘விளம்பரம்’ பத்திரிகைக்காக நான் நடிகர் நரேனுடன் செய்த நேர்காணல்)

Monday, September 5, 2011

தவிக்க வைக்கும் தனியார் பேருந்துக் கட்டணம்!


வெளியூருக்குப் போக சென்னைவாசிகள் பெரிதும் நம்பியிருப்பது ரயில்களையும் அரசுப் பேருந்துகளையும் அடுத்துத் தனியார் பேருந்துகளைத்தான். டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், முழுக்கக் குளிர்சாதன வசதி செய்யப்பட்டது, வால்வோ.. என்று விதவிதமான தனியார் பேருந்துகள். சென்னை கோயம்பேட்டில் இருந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள முக்கிய ஊர்களுக்கும், பெங்களூர், திருப்பதி, ஹைதராபாத், திருவனந்தபுரம் போன்ற வேற்று மாநிலங்களில் உள்ள ஊர்களுக்கும் செல்ல பேருந்துகள் கிடைக்கின்றன.

இப்போது தனியார் பேருந்துகளில் படுக்கை வசதிகூட வந்துவிட்டது. கொஞ்சமும் அலுங்காமல், குலுங்காமல் விமானத்தில் பயணம் செய்வது போன்ற சொகுசான அனுபவத்தைத் தரும் அதி நவீன பேருந்துகள் எல்லாம் வந்துவிட்டன. ஆனாலும் இப்படிப்பட்ட தனியார் பேருந்துகள், நடுத்தர மற்றும் சாதாரண மக்களுக்கு ஏற்றவை அல்ல என்பதுதான் பல பேருடைய கருத்தாக இருக்கிறது. முதல் காரணம், இந்தத் தனியார் பேருந்துகளில் வசூலிக்கப்படும் பயணச்சீட்டுக் கட்டணம். அரசுப் பேருந்துகளைவிட இரு மடங்குக்கும் மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சென்னையிலிருந்து கும்பகோணத்துக்குப் போக அரசுப் பேருந்தில் 130 ரூபாய் கட்டணம் என்றால், குளிர்சாதன வசதி இல்லாத தனியார் பேருந்தில் 300 ரூபாய் வரைக்கும் கட்டணம் வசூலிக்கிறார்கள். அதுவே குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து என்றால் 450 ரூபாய் வரைக்கும்கூட வசூல் செய்கிறார்கள்.

இந்தக் கட்டணங்கள்கூட அதிகம் கூட்டம் சேராத சாதாரண தினங்களில்தான். விழாக்காலம், பள்ளிவிடுமுறை நாட்கள், பண்டிகை தினங்களில் ஒரு வரைமுறை இல்லாமல் பயணச்சீட்டுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து மதுரைக்குப் போக 300 ரூபாய் என்றால் 600 ரூபாய்கூட வசூல் செய்வார்கள். அவசர வேலையாகப் போகிறவர்கள், முன் பதிவு செய்யாமல் திடீர்ப் பயணம் செய்யவேண்டி இருப்பவர்களுக்கு வேறு வழியில்லை. அதிகக் கட்டணம் கொடுத்துப் பயணம் செய்யவேண்டிய கட்டாயம் நேர்ந்துவிடுகிறது.

சாதாரண தினங்களில், இன்னொரு பிரச்னையும் இந்தத் தனியார் பேருந்தில் நடக்கும். ஒருவர் திருச்சி போவதற்காக கோயம்பேடு வருவார். ‘இப்போ கிளம்பிடும். ஏறுங்க!’ என்று தனியார் பேருந்தில் ஏறச் சொல்வார்கள். உள்ளே ஏறியவர் இருக்கைகள் காலியாக இருப்பதைப் பார்ப்பார். ஏறிய பிறகு இறங்கவும் மனம் இருக்காது. தனியார் பேருந்து நடத்துனர், இருக்கைகள் நிரம்பும்வரை பஸ்ஸை எடுக்காமல், ஆள் சேர்ப்பதிலேயே குறியாக இருப்பார். ஏறியவர் காத்திருப்பார். சில சமயங்களில் பேருந்து பஸ் ஸ்டாண்டில் இருந்து கிளம்ப இரண்டு மணி நேரத்துக்கும் மேல் கூட ஆகிவிடுவதுண்டு.

அதோடு ஊருக்குப் போகிற வழியில் நினைத்த இடத்தில் பேருந்துகளை நிறுத்திவிடுவார்கள். பஞ்சர், பிரேக் டவுன்.. போல பேருந்துக்கு ஏதாவது பிரச்னை என்றால், அரசுப் பேருந்துகளைப் போல், மாற்று ஏற்பாடு வசதி இல்லை.. என்று பல குறைகளை பயணிகள் சொல்கிறார்கள்.

இந்த பிரச்னைகளை எல்லாம் சொல்லி, சென்னை கோயம்பேட்டில் உள்ள சில தனியார் பேருந்து உரிமையாளர்களிடமும், நடத்துனர், ஓட்டுனர்களிடம் விசாரித்தோம்.

‘எல்லா தனியார் பேருந்து உரிமையாளர்களும் இஷ்டத்துக்கு டிக்கெட் காசு வசூலிக்கறது இல்லீங்க. ஒரு தடவை இவ்வளவுதான்னு டிக்கெட் விலையை நிர்ணயம் செஞ்சுட்டாங்கன்னா அதுக்கு மேல ஒரு பைசாகூட வசூல் செய்யாத எத்தனையோ நல்ல பேருந்து நிறுவனங்கள் எல்லாம் வந்துடுச்சு. இப்போல்லாம் இண்டர்னெட்லயே டிக்கெட் புக் பண்ணலாம். அதோட எட்டு மணிக்கு ஒரு பஸ் கிளம்பணும்னா, யாருக்காகவும் காத்திருக்காம, டயத்துக்குக் கிளம்பிடுற எத்தனையோ நல்ல பஸ்கள் இருக்கு.’ என்கிறார் ஒரு தனியார் பேருந்து ஓட்டுனர்.

இன்னொரு தனியார் பேருந்து உரிமையாளரோ வேறு விதமாக பதில் சொல்கிறார். ‘தனியார் பேருந்துகளுக்கு இருக்கை வரின்னு ஒண்ணு இருக்கு. அதுவே பஸ்ஸோட வருமானத்துல பெரும்பாலான தொகையை முழுங்கிடும். ஒரு பஸ் ஓடுதோ, இல்லையோ மூணு மாசத்துக்கு ஒரு தடவை ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபா இருக்கை வரி கட்டியாகணும். அதாவது முப்பத்தி ஆறு சீட்டுகள் கொண்ட ஒரு பஸ்ஸுன்னு வச்சுக்குவோம். ஒரு சீட்டுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 60 ரூபா இருக்கை வரி கட்டணும். எங்களுக்கு அரசு பேருந்துகளைப் போல மானியமோ, இலவச டீசலோ, வேற எந்தச் சலுகையோ கிடைக்கறதில்ல. வேற வழி இல்லாமத்தான் டிக்கெட் விலையை ஏத்தவேண்டியதா இருக்கு.’

வழியில் எல்லாம் நிறுத்தி, நிறுத்தி டிக்கெட் போடுவதுகூட ஒரே ஒரு பஸ்ஸை மட்டும் வைத்துக்கொண்டு, அலுவலகம்கூட இல்லாமல் இருக்கும் சிறு பேருந்து உரிமையாளர்கள்தான் என்கிறார் ஒரு நடத்துனர்.

உண்மையில், ஒரு தனியார் பேருந்து நடத்துவது என்பது இன்றைக்கு அசாத்தியமான காரியம். இருக்கைவரி போக, டீசல் செலவு, ஊழியர்களுக்குக் கட்டணம், பராமரிப்புச் செலவு என்று என்னென்னவோ இருக்கின்றன. சென்னையில் இருந்து திருவனந்தபுரம் வரைக்கும் போய் வருகிற ஒரு தனியார் பேருந்து, தனியார் டோல்கேட்டுகளில் கட்டும் கட்டணம் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரத்தி இருநூறு ரூபாய் ஆகிறது என்கிறார் ஒரு பேருந்து உரிமையாளர். ஆனால், அரசுப் பேருந்துகளுக்கு இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

சென்னை கோயம்பேட்டில் தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் அலுவலகம் வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். பத்துக்குப் பத்து சதுர அடி கொண்ட அந்த இடத்துக்கு அவர் வாடகையாகக் கொடுக்கவேண்டிய தொகை மாதம் ஒன்றுக்கு 18,000 ரூபாய். இந்தக் கட்டணமும் வருடா வருடம் ஏறிக்கொண்டே போகிறது. விபத்துகள் நடக்கும்போது பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள் தனியார் பேருந்து உரிமையாளர்கள்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகையால், ஏற்கெனவே வெளியூர் போக்குவரத்துக்குப் போதிய வாகன வசதி இல்லாமல் தவிக்கிறது சென்னை. இந்தச் சூழ்நிலையில், தனியார் பேருந்துகளை ஒரு வரைமுறைக்கு உட்படுத்தி, அவர்களுக்கான வசதிகளையும், சில சலுகைகளையும் செய்துதர அரசு முன் வந்தால், டிக்கெட் கட்டணம் குறையும். பொது மக்களும் பயன் அடைவார்கள்.

(ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலியில் ‘நகர்வலம்’ பகுதியில் வாசிக்கப்பட்ட என் கட்டுரை)

Monday, June 27, 2011

நிழல்கள் கவிதைத் தொகுப்பு : ஒரு பார்வை




நான் விமர்சகன் அல்ல. ஆனால், எப்போதாவது, நான் வாசித்து, ரசித்த எந்தப் புத்தகத்தையாவது அறிமுகப்படுத்திவிடவேண்டும், அதை ஓரிருவராவது வாசித்துவிடவேண்டும் என்கிற மெனக்கிடல் எனக்கும் உண்டு. அந்த வகையில் அவ்வப்போது “பெண்ணே நீ” பத்திரிகையிலும், ‘அம்ருதா’ இதழிலும், “புத்தகம் பேசுது” மாத இதழிலும், என் ப்ளாக்கிலும் சில புத்தகங்களை அறிமுகம் செய்து வந்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு நூல்தான் “நிழல்கள்” என்கிற கவிதைப் புத்தகம். எழுதியவர் ஹரன் பிரசன்னா.

அவர் என் சக தோழர். என் அலுவலகத்தில் பணி புரிபவர். இதெல்லாம் இந்த நூலைக் குறித்த அறிமுகத்தை எழுதுவதற்குக் காரணமாகிவிடவில்லை. அவருடைய கவிதைகளை நானாகத்தான் கேட்டு வாங்கினேன். வாசித்துப் பார்த்தேன். நவீன கவிதைப் பரப்பில், மிகவும் கவனத்துக்குரிய ஒன்றாகவே அவர் கவிதைகள் எனக்குப்பட்டன. அதன் பொருட்டே இதை எழுத வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது.

இந்த இடத்தில் சில அரசியல்களையும் பேசவேண்டியதாக இருக்கிறது. எனக்கு மிகவும் அன்னி(ந்நி)யோன்யமான சில பத்திரிகை ஆசிரியர்களிடமும் உதவி ஆசிரியர்களிடமும் பொறுப்பாசிரியர்களிடமும் ஒரு கவிதைத் தொகுப்புக் குறித்தான விமர்சனத்தை நீங்கள் பிரசுரிப்பீர்களா என்று கேட்டபோது, அவர்கள் சொன்ன பதில் கவலைக்குரியது. ”ஜாலியா, அப்டேட்டா, பிரச்னை பீதியைக் கிளப்புற மாதிரி ஏதாவது எழுதுங்களேன். இது வேண்டாம், ப்ளீஸ்” என்றார்கள். நான் சிபாரிசு செய்து, ஓர் இலக்கியப் பத்திரிகையில் குப்பை கொட்டிக்கொண்டிருக்கும் மகாத்மா வாயே திறக்கவில்லை என்பது என் கஷ்ட காலம்.

ஆனால், அவை இங்கே முக்கியம் அல்ல. “நிழல்கள்” தொகுப்பில் நம்மைப் பரவசப்படுத்துகிற, யோசிக்க வைக்கிற, நெகிழச் செய்கிற, நம்மோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய பல அம்சங்கள் கவிதைகளாக விரிந்திருக்கின்றன.

”யாரோ ஒருவனின் சவ ஊர்வலம்” என்கிற கவிதை இப்படி ஆரம்பிக்கிறது.

யாரோ ஒருவனின் சவ ஊர்வலம்
நான்கைந்து பேர்களுடன்
மெல்ல நகர்கிறது
அந்த நிமிடத்தைப் போல.


அந்த யாரோவுக்குத் தூவப்படும் மலர்களுள் சில
என் மீது விழ எனது ஆசாரம் விழித்துக்கொள்கிறது,
எவ்வளவு விலகிக்கொண்டும்
விலகவில்லை மலர்களின் வாச
னை

இன்னும் கவிதை மேலே மேலே போனாலும், அதைத் தாண்டி என்னால் போக முடியவில்லை. இதுதான் கவிதை. இந்த அனுபவம்தான் கவிதை. சவ ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் அந்த அனுபவம் இருக்கும். எனக்கும் இருக்கிறது. அனுபவங்கள் கவிதையாகிறபோது எப்போதுமே அதனுள் இருக்கும் நிஜம் நம்மை ஈர்க்கும். அந்த வகையில் இந்தக் கவிதை என்னை மிகவும் பாதித்துவிட்டது.

ஹரன் பிரசன்னா மிகச் சாதாரணமான ஆள் இல்லை. பழகிப் பார்த்தவர்களுக்கு அது தெரியும். எந்தப் பிரச்னையாக இருந்தாலும், எந்தக் கேள்வியாக இருந்தாலும் அதற்கு அவரிடம் ஒரு பதில் இருக்கும். குறிப்பாக, இலக்கியம், சினிமா, அரசியல். இவற்றையும் தாண்டி பேசுவதற்கு வேறு முக்கிய விஷயங்கள் இருக்கிறதா என்ன? அவரைப் பொறுத்தவரை எதுவும் பேசு(பாடு)பொருளுக்கு அப்பாற்பட்டதல்ல. விவாதப் பொருள் எதுவாக இருந்தாலும், ஒரு வலுவான வாதத்தை முன் வைக்கிற போது அமர்ந்த குரலில் சொல்லுவார். அவர் சொன்னால் யாராலும் மறுக்க முடியாது. கட்டைக் குரலில், அவர் பாடுகிற பழைய பாடலைக் கூட பார்வையாளனை பதில் பேசாமல் கேட்க வைக்கிற மாதிரியான திறமை அவருக்கு இருக்கிறது. அவர் பாடுகிறபோது, அந்தப் பாடலின் வரிகள் நம்மை அந்தப் பாடலுக்குள் இழுத்துப் போட்டுவிடும். இவையெல்லாம் பிரசன்னாவின் தனிப்பட்ட ஆளுமைகள். ஆனால், கவிதை அப்படி கிடையாது. முன் பின் முகம் அறியாத ஒரு வாசகன் வாசிக்கிறபோது, அதில் ஈர்ப்பிருந்தால் ஒழிய அதில் அவனால் ஒன்ற முடியாது. கன்னியாகுமரியில் இருந்து கடல் கடந்த தேசம் வரைக்கும் தமிழ் படிக்கிறவர்கள் யாராக இருந்தாலும், “ஹலோ! ஒரு நிமிடம்! இதை வாசித்துவிட்டு நகருங்கள்!” என்று உரிமையோடும் அதே சமயம் அதற்கான அத்தனை தகுதிகளோடும் “நிழல்கள்” தொகுப்பு மூலமாக அறைகூவல் விடுகிறார் பிரசன்னா.

கவிதை என்பது அனுபவம், மொழி ஆளுமை, ஒரு சங்கதி, ஓர் உணர்ச்சி, ரசனை... இப்படி ஏதோ ஒன்றை வாசகனுக்கு நுட்பமாக உணர்த்த முயல்கிற சங்கதி. இந்த இலக்கணம் மட்டுமே கவிதை என்று நான் சொல்லவில்லை. இவை நல்ல கவிதையின் சில முக்கியக் கூறுகள். கவிதை என்பது கவிஞனுக்கும் வாசகனுக்கும் இடையில் நடக்கிற ஓர் உரையாடல். அது ஒரு சங்கமம். அந்த வகையில் கவிஞர் எழுதிய கவிதையில் வாசகனுக்கும் பங்கு உண்டு. அது அப்படித்தான். கவிதையின் முழுமை இப்படித்தான் இருக்கும் என்று உணர்தலும், ஒரு கவிதையின் பூரணத்துவம் இது போலத்தான் அமையும் என்று முடிவு செய்தலும்... ஒரு தீவிர, சரியான வாசகனால் மட்டுமே முடிகிற காரியம். அப்படிப்பட்ட ஒரு தேர்ந்த வாசகர், தன் கவிதையில் இனம் கண்டுகொள்ளும் சரியான இடங்களை கவிஞரும் தெரிந்துவைத்திருப்பார். அதைச் சரியாகச் சுட்டிக் காட்டவும் செய்திருப்பார். அப்படிப் பார்க்கையில், இத் தொகுப்பில் இருக்கும் கவிதைகளில் பெரும்பாலானவை நம்மை நமக்கே அடையாளம் காட்டுபவை. அந்த வகையில் சிறப்புப் பெறுபவை.

எனக்கு முன்பு எழுந்துவிடுகிறது என் கடிகாரம்

ஓர் உண்மையைக்கூட கவிதையாகச் சொல்வதில் அர்த்தமிருக்கிறது என்பதை உணர்ந்திருப்பவர் ஹரன் பிரசன்னா.

‘சுயசரிதை எழுதுதல்’ என்னும் கவிதை.

நான் நினைத்தது போல்
எளிதாக எழுத இயலாமல் போன
அடித்து அடித்து
எழுதப்பட்ட
சுயசரிதைக்குள்
நான் அடைந்துகொண்டேன்
கடைசியில் ஒரு குறிப்புடன்,
இது வளைந்து நெளிந்து செல்லும்
நேரான பாதை.


இந்தக் கவிதையைப் படிக்கும்போது, சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நான் படித்த காந்தியிலிருந்து மார்ட்டின் லூதர்கிங் வரைக்குமான மனிதர்களின் சுய சரிதை என் கண்ணுக்குள் வந்து வந்து போகிறது. சுய சரிதை குறித்தான என் பழைய மதிப்பீடுகள் முறிந்து போகின்றன.

கவிதை என்பது ஏதோ ஒன்றை உணர வைத்தல். அது, நாம் ஏற்கெனவே அறிந்த ஒன்றாக இருப்பின் அந்தக் கவிதை உயிர்ப்புடன் இருப்பதற்கான அர்த்தம் புரிந்துவிடும்.

மேடைக் கவிதைகளுக்கும் மனத்துக்குள் வாசித்து அதனோடு பயணம் செய்கிற கவிதைகளுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் அறிந்திருப்போம். மேடையில் வாசிக்கப்படும் கவிதைகள் கவிதைகளே அல்ல, அவை அந்தக் கணத்துக்கான எக்ஸ்டஸியை கேட்கிறவர்களுக்கு உண்டாக்குபவை; ஒரு பட்டி மன்ற பேச்சாளனுக்கும் மேடையில் கவிதை முழங்குகிறவனுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்று சொல்கிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பிரசன்னாவின் கவிதைகள் மனத்தில் அசைபோட்டுப் போட்டு, நமக்குள் ஆழ்ந்து போகச் செய்பவை. உரத்த குரலில் வாசிக்கும்போது அவருடைய கவிதைகள் அவற்றுக்கான அர்த்தத்தை இழந்துபோகக்கூடிய அபாயமும் உண்டு.

உதாரணமாக, “உயிர்த்தெழும் மரம்” என்கிற கவிதை:

காலையில் கண்விழிக்கிறது மரம்
இரவின் மௌனத்திற்குப் பின்
பறவைகளின் கனவுக்குப் பின்
பூமியிறங்கும் பனியுடன்
அன்றைய நாளின் பலனறியாமல்

மரம் இசைக்கும் மௌனமான சங்கீதம்
பறவைகளின் சத்தத்தில் அமிழ்ந்துவிடுகிறது
பெருங்காற்றில் அசையும்போது
விலகும் தாளம், சுருதி பேதத்தை
அதிகாலையில் மீட்டெடுக்கும் மரம்
வாகனங்களின் சத்தத்தில் மீண்டும் தவறவிடுகிறது
முன்பனியில்
அல்லது பின்னோர் மழைநாளில்
உயிர்த்தெழுகிறது
குழந்தைக்கான உத்வேகத்துடன்
இத்தனையின் போதும்
எப்போதும் ஓய்வதில்லை
மரத்தினூடாக நிகழ்ந்துகொண்டேயிருக்கும்
அதன் பேரமைதிக் கச்சேரி.


இந்தக் கவிதையை மேடையில் வாசித்தால், பார்வையாளனுக்கு என்ன உணர்வு ஏற்படும்? ஒருவேளை, அதீத கவன் ஈர்ப்புடன் கேட்டால்கூட, மௌனமாக வாசிக்கும்போது கிடைக்கிற பரவசத்தில் மிகக் குறைந்த சதவிகிதத்தைக்கூட இக்கவிதை ஒரு வாசகனுக்கு ஏற்படுத்தாது என்பது என் யூகம்.

இத்தொகுப்பில், பிரசன்னா எழுதிய கவிதைகள், மெல்ல மெல்ல ஒரு முழுமையையும் முதிர்ச்சியையும் அடைவதையும் காண முடிகிறது. ஆரம்ப எழுத்தில் இருந்து அவர் எந்த அளவுக்கு வளர்ந்துகொண்டே இருக்கிறார் என்பது புரிகிறது.

நிலையம் சேர்ந்தபின்
தேர்வந்த பாதையில்
சிதறிக் கிடக்கின்றன
தொலைந்த செருப்புகள்


என்கிற பிரசன்னாவின் கவிதை வரிகளைத் தாண்டி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

இது, நூலுக்கான விமர்சனம் இல்லை. நான் ரசித்த, மிகவும் ரசித்த, மனத்தில் பதிந்து போன பிரசன்னாவின் அத்தனை கவிதைகளையும் இங்கே கொட்டி விடுவது அத்தொகுப்புக்கு நான் செய்யும் நேர்மை அல்ல. எல்லோரும் வாசிக்க வேண்டிய ஒரு கவிதைத் தொகுப்பு “நிழல்கள்.” அதுவும் ஹரன் பிரசன்னாவின் நிழலைப் போலவே அவரைத் தொடர்ந்து வருகின்றன அவருடைய கவிதைகள். “நிழல்களை” வாசிப்பது பிரன்னாவை வாசிப்பது போல என்று உறுதியாகச் சொல்லலாம்.

நூல்: நிழல்கள்
ஆசிரியர்: ஹரன் பிரசன்னா
வெளியீடு: தடம் வெளியீடு,
4/31 D, மூன்றாவது மெயின் ரோடு,
ராயலா நகர்,
ராமாபுரம்,
சென்னை - 89.
தொலைபேசி: 98842 79211.

Friday, March 11, 2011

கண்ணாடி இலை

மூன்று மணிக்கு எழுந்து
மடி ஆசாரத்துக்கு மாசில்லாமல்
மாமனார் திவசத்துக்காக
உயிர் கரைய வேலை.

என்ன கோபமோ
மாமனார் காகமாக
வந்து பிண்டத்தைக்
கொத்தித் தின்ன
அதிக நேரம் எடுத்துக்கொண்டார்.

‘சமையல் பிரமாதம்!’
சம்பாவணை வாங்கிய பிராமணர்
வெற்றிலைச் சிவப்புத் தெறிக்க
வாய்நிறையச் சொன்னார்.

பிராமணாளுக்குப் பிறகு
ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் போஜனம்.
பரிமாறும்போது இடுப்பில் பிடித்துக்கொள்ள
பல்லைக் கடித்து சமாளிப்பு.

சாப்பிட்ட இடத்தை
நீர் தெளித்து மெழுகி
மதியம் மூன்றரை மணிக்கு
கடைசியாகச் சாப்பிட அமர்ந்தால்
உணவைப் பார்த்தாலே உமட்டல்.

காலையிலிருந்து காபிகூட
பல்லில் படாதது நினைவுக்கு வர
கொஞ்சமாக உணவு கொறிப்பு.

சாப்பிட்ட இலைகளை
கூடையில் போட்டு
அடுத்த தெரு
பசுமாட்டுக்குக் கொடுக்கும்போது
மாமி கேட்டாள்:
‘கோமதி! யாருக்கு திவசம்?’

‘எனக்குத்தான்.’

(இந்த வார கல்கியில் வெளியான என் கவிதை)