Monday, December 8, 2008

இறுதி ஆட்டம்

நகரத் தெருக்களில்
விளையாடுவது
அத்தனை சுலபமாயில்லை
சிறுவர்களுக்கு.

பெற்றவர்களின் அடிவயிறை
கதிகலங்கச் செய்தபடிதான்
வீதியில் இறங்குகிறார்கள்.

பிரேக்கை மறந்துவிட்ட
வாகனங்களின் உறுமல் சத்தம்
போதும் அவர்களுக்கு
ஒதுங்கி நிற்க.

கடந்துபோகும் பாதசாரிகளின்
வசைச் சொற்களை
மென்று விழுங்குகின்றன
அவர்களுடைய நமட்டுச் சிரிப்பும்
சகிக்கப் பழகிய மௌனமும்.

மனிதர்கள் மீதும்
காம்பவுண்டுச் சுவர் தாண்டியும்
சாக்கடைக் கழிவிலும்
பந்துவிழும் கணங்களில்தான்
பதறிப் போகிறார்கள்.

மொட்டைமாடியில்
பட்டம்விடும் காற்றுக்காலம் தவிர
நிரந்தர மைதானம் ஆகிப்போனது தெரு.

நகரில் இருக்கும் விளையாட்டு மைதானங்கள்
சில சிறுவர்களுக்கு வெகுதூரத்தில் இருக்கின்றன.
பல சிறுவர்களுக்குப் பூட்டியே கிடக்கின்றன.

தெருவில் விளையாடும்
நகரச் சிறுவர்கள்
பரிதாபத்துக்குரியவர்கள்
அவர்களைப் பழிக்காதீர்கள்!

அவர்களிடம் மீதமிருக்கும்
விளையாட்டு
‘கிரிக்கெட்’ மட்டும்தான்.

1 comment:

முத்தன் said...

சின்ன கவிதையில் என்னை சிதறடித்து விட்டீர்கள்.