Tuesday, January 6, 2009

ஈழக்கதவுகள் - நூல் அறிமுகம்

கண்ணீர்த்துளி

“குண்டு துளைக்காத ஒரு சுவரும்
காயம் படாத வீடும்
சாவு விழாத ஒரு குடும்பமும்
எங்கும் இல்லை”
- இதுதான் மொத்த ஈழமாக இருந்தது.

பா. செயப்பிரகாசம், கரிசல் பூமிக்காரர். அந்த மண்ணின் மணம் மாறாத சிறுகதைகளைத் தமிழுக்குத் தந்தவர். சூரியதீபன் என்ற பெயரில் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதிவருபவர். நான்காண்டுகளுக்கு முன்பு ‘மானுடத்தின் தமிழ்க்கூடல்' என்ற ஐந்து நாள் மாநாட்டுக்காக யாழ்ப்பாணம் சென்று திரும்பிய அனுபவத்தை ‘ஈழக் கதவுகள்' என்ற நூலாக வெளியிட்டிருக்கிறார். இவருடன் ஓவியர் மருது, கவிஞர் இன்குலாப், தொல் திருமாவளவன், திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் ஆகியோரும் யாழ்ப்பாணம் போய் வந்திருக்கிறார்கள்.

படிக்கப் படிக்க, உயிரை உலுக்கியெடுத்துவிடுகிறது ‘ஈழக் கதவுகள்'. வெறும் பயணக்கட்டுரையாக இல்லாமல் ஈழத்தின் பிரச்னைகளை மிக நுட்பமாக விவரிக்கிறார் பா.செயப்பிரகாசம். சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ விதிக்கப்பட்ட தமிழர்களின் ரத்தம் தோய்ந்த வரலாற்றையும் போராட்டத்தையும் உருக்கமாக, எளிய வார்த்தைகளில் சொல்லிவிடுகிறார். அவரை நேரில் சந்தித்து உரையாடினோம்.

“ஊடகங்களும் அரசியல் இயக்கங்களும் ஈழம் பற்றி நமக்குக் கொடுத்திருந்த சித்திரம், அங்கு போனவுடன் கிழிந்து போய்விட்டது. அது முற்றிலும் வேறொரு உலகம். அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் நாங்கள் அங்கு போயிருந்தோம். அப்போது யுத்தம் இல்லை. யுத்தம் நடந்துகொண்டிருந்த காலமாக இருந்திருந்தால், எங்களால் உள்ளே நுழைந்திருக்கவே முடியாது.” என்று ஆரம்பித்து இலங்கை குறித்தப் பல விஷயங்களைப் பேசுகிறார் பா. செயப்பிரகாசம்.

“1948-ல் இலங்கை, பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்றது. உண்மையில் அது விடுதலை அல்ல. அரசியல் அதிகாரம் கைமாற்றிக் கொடுக்கப்பட்டது. அவ்வளவுதான். அப்போது இலங்கை மக்கள் தொகையில் சிங்களவர்கள் 60 சதவிகிதம் பேரும், தமிழர்கள் 40 சதவிகிதம் பேரும் இருந்தார்கள். பிரிட்டிஷாருக்குப் பிறகு வந்த, சிங்களப்பேரினவாத ஆட்சியில் தமிழர்களின் உரிமை பறிக்கப்பட்டது. எல்லாவற்றிலும் பாரபட்சம் நிலவியது. சிங்கள மொழிதான் ஆட்சி மொழி. பௌத்தம் மட்டுமே மதம். இலங்கை காவல்துறை, ராணுவம் ஆகிய துறைகளில் தமிழர்கள் சுத்தமாக இல்லை. அரசுப் பதவிகளில் கொஞ்சம் பேர் இருந்தார்கள். ‘தராதரப்படுத்துதல்' என்று சட்டமே கொண்டு வந்தார்கள். அதில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள்தான். உதாரணமாக, ஒரு பள்ளியில் பயிலும் சிங்கள மாணவன் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவன் தேர்ச்சி பெற்றுவிடுவான். அதே சமயம், ஒரு தமிழ் மாணவன் அதிகமான மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி பெற முடியும்.”

மாநாட்டுக்காகப் போயிருந்தாலும், விடுதலைப் புலிகளின் முகாம்கள், அவர்கள் வாழ்ந்த இடங்கள் என எல்லாவற்றையும் சுற்றிப் பார்க்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

“விடுதலைப் புலிகளைத் தவிர, உலகின் வேறு எந்தப் போராட்டத்திலும் பெண்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதில்லை. சோவியத் புரட்சியில்கூட பெண்கள் நேரடியாகப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. கியூபா, வியட்நாம் போர்களில் பெண்கள் மிகக்குறைந்த அளவில்தான் பங்கேற்றார்கள். விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவுக்கு ‘கடற்புலி' என்று பெயர். நாங்கள் போன பகுதியில் இருந்த கடற்புலிகளில் பெரும்பாலானவர்கள் பெண்களாக இருந்தார்கள். விடுதலைப் புலிகளின் பண்பாடு வியக்கத்தக்கதாக இருக்கிறது. ‘கைப்பிடி அரிசி' என்று அவர்களுக்கு இடையில் ஒரு வழக்கம் இருக்கிறது. அதன்படி, ஒவ்வொரு தமிழர் வீட்டிலும், ஒவ்வொரு முறை சோற்றுக்கு உலை வைக்கும்போதும், ஒரு கைப்பிடி அரிசியை எடுத்துத் தனியாக வைத்துவிடுகிறார்கள். இந்த அரிசி, போரில் இறந்து போன வீரர்களின் குடும்பத்துக்கும், அனாதைக் குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.”

“அதே போல, போராளிகள் மத்தியில், சாதீய உணர்வு இல்லவே இல்லை. அவர்களிடையே ‘அகமண முறை' கிடையாது. அதாவது ஒரு போராளி தன் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடியாது. அப்படியே திருமணம் செய்து கொள்ள விரும்பினால், போரில் இறந்த ஒரு போராளியின் விதவை மனைவியைத்தான் திருமணம் செய்து கொள்ள முடியும்.” இப்படி எண்ணற்ற தகவல்களைச் சொல்லிக்கொண்டே போகிறார் இந்த எழுத்தாளர்.

இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் ‘உங்கள் காலடியில் மிதிவெடிகள் எச்சரிக்கை' என்று கண்ணிவெடி அறிவிப்பைப் பார்த்து அதிர்ந்து போனது, மாலை ஐந்து மணிக்கு மேல் தங்கள் எல்லைக்குள் வெளிநாட்டுப் பயணிகள் என்றாலும் உள்ளே அனுமதிக்காத சிங்கள ராணுவத்தினரின் கடுமையான அணுகுமுறை, ஒரு காலத்தில் ரயில் பாதையாக இருந்த பகுதி மண்மேடாகிப் போன அவலம்... என்று பல தகவல்களைச் சொன்னவர், இன்றைய தமிழ் இலக்கியச் சூழலைப் பற்றியும் ஆர்வத்தோடு பேசினார்.

“இன்றைக்கு தமிழ் இலக்கியச் சூழல் ஆரோக்கியமாக இருக்கிறது. ஈழத்தில் இருப்பது போர்க்குண இலக்கியம். மக்கள் வாழ்வே அங்கு போராட்டமாக இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தலித்தியம், பெண்ணியம் இரண்டையும் போர்க்குணம் மிக்க இலக்கியங்களாகச் சொல்லலாம். தமிழில் புதிய தலைமுறை எழுத்தாளர்களை வரவேற்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். புதிய தலைமுறை எழுத்தாளர்களின் எழுத்துகள் எந்தக் கட்டுக்கும் அடங்கியதாக இல்லை. முன்பெல்லாம் ஒரு பொது உத்தி, பொது நடை, பொதுப் பார்வை எல்லாம் எழுத்தில் இருக்கும். இப்போது அவரவர்க்கான தனித்தனி வடிவங்களை எழுத்தில் கையாள்கிறார்கள். புதியன படைக்க வேண்டும், புதிய சாதனை செய்யவேண்டும் என்ற ஆர்வம் இளம் எழுத்தாளர்களிடம் இருக்கிறது. ஆனால், பல எழுத்தாளர்களால் வாழ்க்கையில் காலூன்ற முடியவில்லை. அதுவே அவர்களுடைய எழுத்துக்குப் பெரிய தடையாக ஆகிவிடுகிறது.

‘கஷ்டப்படுகிறவர்களால்தான் சிறந்த இலக்கியங்களைத் தரமுடியும்' என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால், அதற்காக புதிய தலைமுறை எழுத்தாளர்களின் வாழ்க்கை, பாரதி, புதுமைப்பித்தன், சதத் ஹசன் மாண்ட்டோ போன்ற எழுத்தாளர்களைப் போல சீக்கிரமே முடிந்துபோய்விடக்கூடிய சாத்தியம் இருக்கிறது. தமிழிலக்கிய உலகில் சிறுகதை, நாவல் போன்ற படைப்பிலக்கிய வகைகள் குறைந்து வருகின்றன. கட்டுரைப் பாங்கான போக்கு மேலோங்கி வருகிறது. இப்போது வணிக இதழ்களில் ஒரு சிறுகதையைப் பார்ப்பதே அரிதாகிவருகிறது. வெளியீட்டுத் துறை வளர்ந்து வருகிறது.”

அவருடன் பேசிவிட்டு வெளியே வந்து, ‘ஈழக் கதவுகள்' நூலை மறுபடி ஒருமுறை புரட்டிப் பார்த்தபோது, பளிச்சென ஒரு வரி கண்ணில் பட்டது.

“20 லட்சம் ஈழத்தமிழர்களும், 18 லட்சம் தோட்டத் தொழிலாளித் தமிழர்களும் வாழ்கிற நாற்புறமும் கடல் சூழ்ந்த ஈழத்தமிழர்களின் வாழ்வு ஒரு கண்ணீர்க் கல்லறையாகி விட்டது. உலக வரைப்படத்தில் அது பெரிய கண்ணீர்த்துளி.”

0

2 comments:

கானா பிரபா said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே

லூசன் said...

நல்ல அறிமுகம். நன்றி. இப்படி பல நூல்கள் அறிமுக இன்றி இருக்கின்றது. முடிந்தால் கொண்டு வாருங்கள்.