Friday, August 21, 2009

அருணா சாய்ராம் நேர்காணல்


‘நான் இந்த அளவுக்கு உயரக் காரணமானவர்கள் ரசிகர்கள்’

- அருணா சாய்ராம்


அது பாரீஸில் இருக்கும் ‘லெ தியேட்டர் டெ ல வில்லி’ (Le Theatre De La Ville) அரங்கமோ, சென்னையில் இருக்கும் நாரத கான சபா அரங்கமோ, அருணா சாய் ராம் பாடுகிறாரா? அரங்கம் நிறைந்து விடுகிறது. கச்சேரி தொடங்கிய பின்பும்கூட எப்படியாவது ஒண்டிக் கொண்டு கேட்க ஓர் இடம் கிடைக்காதா, டிக்கெட் கிடைக்காதா என்று ரசிகர்கள் வெளியே காத்திருக்கிறார்கள். எல்லோரும் கேட்கும்படியான, ஒரு ஜனரஞ்சகமான, கணீரென்ற, அதே சமயம் குழைவு குறையாத குரலில், மனம் குளிர கர்நாடக இசையைத் தந்துகொண்டிருக்கிறார் அருணா சாய்ராம்.

பம்பாயில் பிறந்தவர். தாயார் ராஜலஷ்மி சேதுராமன் தான் இவருடைய முதல் குரு. அதற்குப் பிறகு, சங்கீத கலாநிதி டி. பிருந்தா, வீணை வித்வான் கே. எஸ். நாராயணசாமி, டைகர் வரதாச்சாரியாரின் சிஷ்யர் திரு. ஏ.எஸ். மணி, டெல்லி பல்கலைக் கழகப் பேராசிரியர் திரு. டி. ஆர். சுப்ரமணியம், திரு. எஸ். ராமச்சந்திரன், பத்மபூஷண் பால முரளி கிருஷ்ணா ஆகியோரிடம் சங்கீதம் கற்றிருக்கிறார்.

சங்கீத கலாரத்னா, சங்கீத கலாமணி... உள்ளிட்ட பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். தற்போது இவருக்குக் கிடைத்திருக்கும் ‘பத்மஸ்ரீ’ விருது இவருடைய இசைப் பணிக்குக் கிடைத்திருக்கும் மிக முக்கியமான விருது.

இனி அவருடன் நேர்காணல்...


கேள்வி: நீங்க பாடற பாணி மத்தவங்களோட பாணியிலருந்து ரொம்ப வித்தியாசமாகவும் எல்லாரும் விரும்பக்கூடியதாகவும் இருக்கிறது. அதற்கு என்ன காரணம்?

அருணா சாய்ராம்: என்னுடைய ஆரம்பப் பாடத்தை நான் என் தாயார்கிட்டதான் கத்துக்கிட்டேன். அப்போ ‘ஆலத்தூர் பிரதர்ஸ்’னு கர்நாடக இசையில பெரிய வித்வான்கள் இருந்தாங்க. அவங்களோட சிஷ்யை எங்க அம்மா. என்னோட பத்தாவது வயசு வரைக்கும் அவங்க ஓரளவுக்கு எனக்குக் கத்துக் குடுத்தாங்க. ஓரளவுக்குன்னா, ஆரம்பப் பாடங்கள், அகார சாதகங்கள், சரளி, ஜண்டை, கீதங்கள் ரொம்ப பால பாடங்கள் இருக்குல்லையா? ஏ,பி,சி,டி... மாதிரி. இதையெல்லாம் நான் என் அம்மாகிட்டதான் கத்துக்கிட்டேன்.

கேள்வி: எந்த வயசுல கத்துக்க ஆரம்பிச்சீங்க?

அருணா சாய்ராம்: மூணு, நாலு வயசுலயே ஆரம்பிச்சாச்சு. எங்க வீட்ல காலையில எந்திரிச்சதும் வேலையெல்லாம் முடிச்சுட்டு, பாடினாதான் பால், காபின்னு ஏதாவது குடுப்பாங்க. அப்பிடி ஒரு பழக்கம். அதனால, கர்நாடக இசையில ஏ,பி,சி,டி, ... கேட், ரேட், மேட்... திஸ் இஸ் எ பால், திஸ் இஸ் எ பேட்... அந்த லெவல் வரைக்கும் அம்மா சொல்லிக் குடுத்துட்டாங்க. அதுக்கு மேலயேன்னு கூடச் சொல்லலாம். நூறு வர்ணங்கள், நூறு கீர்த்தனங்கள் வரைக்கும் சொல்லிக் குடுத்துட்டாங்க. அந்தக் கட்டத்துலதான் பிருந்தாம்மா என்னோட பத்தாவது வயசுல என்னோட வீட்டுக்கு வந்தாங்க. அவங்க எங்க வீட்லயே தங்கும்படியான ஒரு சந்தர்ப்பம் நேர்ந்தது. எங்க வீட்டுக்கு அடிக்கடி பெரிய பெரிய வித்வான்கள் வருவாங்க.

கேள்வி: அப்போ நீங்க எங்க இருந்தீங்க?

அருணா சாய்ராம்: பம்பாய்ல. நான் பிறந்தது பம்பாய், வளர்ந்ததும் பம்பாய்தான். என்னோட அப்பாவுக்கு பூர்வீகம் திருவாரூர். அம்மாவுக்கு திருச்சிராப்பள்ளி. பக்கா தமிழர்கள். ஆனா, கல்யாணத்துக்கப்புறம் அப்பா பம்பாய்ல செட்டில் ஆனதால அங்கேயே இருக்க வேண்டிய சூழ்நிலை. ஆனா, வீடு முழுக்க எங்களுக்கு தமிழ்நாட்டுக் கலாசாரம்தான். காலையில எந்திரிச்சுப் பாடுறதுலருந்து சமைக்கிறது வரைக்கும் எல்லாமே தமிழ்நாட்ல எப்பிடிப் பண்ணுவோமோ அப்படித்தான் நடக்கும். தமிழ்நாட்லருந்து வர்ற எந்தப் பெரியவங்களா இருந்தாலும், அது கர்நாடக சங்கீத வித்வான்களா இருந்தாலும் சரி, நாட்டியக் கலைஞர்களா இருந்தாலும் சரி, பேச்சாளர்களா இருந்தாலும் சரி, நாடகக் கலைஞர்களா இருந்தாலும் சரி எங்க வீட்டுக்கு வந்துட்டுதான் போவாங்க. அந்த மாதிரி, என் பெற்றோர் இருந்தாங்க. அம்மா, அப்பா ரெண்டுபேருக்குமே கலைகள்ல ஆர்வம் இருந்தது. அப்போ பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம், நேர்ல அவ்வளவு ஈஸியா பார்க்க முடியாதவங்க எல்லாம் எங்க வீட்டுக்கு வருவாங்க. அரியக்குடி சார், மதுரை மணி, எம்.எஸ். அம்மா, பால சரஸ்வதி அம்மா, டி.ஆர். மகாலிங்கம், கி.வா.ஜ., இந்த மாதிரி எல்லாருமே எங்க வீட்டுக்கு வருவாங்க. கீரன் சார் வந்தார்னா எங்க வீட்லயே ஒரு பிரசங்கம் நடத்துவார். நாற்பது அம்பது பேர் உக்காந்து கேட்டுட்டுப் போவாங்க. இது ஒரு பக்கம் நடக்கும்.

இன்னொரு பக்கம் நார்த் இண்டியன் மியூசிசியன் வருவாங்க. நாங்க மிடில் கிளாஸ் ஃபேமிலிதான். அப்பா ரயில்வேலதான் வேலையா இருந்தார். ஆனா, அது என்னவோ ஒரு கலை ஆர்வம். கூடவே விருந்தோம்பல் பண்பு. யாரையுமே நாம அன்பா வீட்டுக்கு அழைச்சு, நல்லா விருந்தோம்பல் செஞ்சோம்னா அந்த அன்புக்கு யாருமே கட்டுப்படுவாங்க இல்லையா? அது. நான் இவங்க எல்லாரையும் பாத்துக்கிட்டு இருந்தேன். ஆனா, யார்கிட்டயும் கத்துக்கலை. பிருந்தாம்மா அப்போ பெரிய பெரிய ஆர்ட்டிஸ்டுகளுக்கு சொல்லித் தரத்தான் வந்திருந்தாங்க. இடைச் செருகலா நானும் அவங்ககிட்ட கத்துக்க ஆரம்பிச்சேன்.

நான் அவங்ககிட்ட கத்துக்க ஆரம்பிச்சப்போ எனக்கு பத்து, பதினோரு வயசு இருக்கும். அதுவும் வருசம்பூரா கிடையாது. வருசத்துக்கு மூணு, நாலு மாசம் கத்துப்பேன். மீதம் இருக்கற நாள் பூரா அவங்க சொல்லிக் குடுத்ததை பிராக்டீஸ் பண்ணணும். திரும்ப மெட்ராஸ் போயிடுவாங்க. திரும்ப ஏப்ரல், மே, ஜூன் இந்த மூணு மாசம் வருவாங்க. இப்பிடித்தான் நான் அவங்க கிட்ட கத்துக்கிட்டேன். இப்போ நான் அவங்க பாணியில பாடுறது இல்லன்னு சொல்றீங்க இல்லையா? முதல்ல பிருந்தாம்மா பாணி என்னன்னு பாப்போம். அவங்களோடது அழுத்தமான சங்கீதம். அதாவது அடி வயித்துலருந்து பாடறது. மொதந்துண்டு பாடறது, மேலெழுந்தவாரியாப் பாடறது இதெல்லாம் அவங்களோட பாணில கிடையாது. அழுத்திப் பிடிச்சுப் பாடறது அவங்களோட தனித் தன்மை. அவங்க எது பாடினாலும் ரொம்ப ஸ்லோவா இருக்கும். ஃபாஸ்ட்டா எல்லாம் பாட மாட்டாங்க. அதி விளம்பத்துல அகாரம் எல்லாம் வரும். அவுட் வாணம் மாதிரி. ஆனா, பேஸிக்கா வெரி ஸ்லோ மியூசிக். அது ஒரு இண்டெலக்ச்சுவல் மியூசிக். இப்போ இலக்கியத்துல ஆஸ்கர் ஒயில்ட், ஜார்ஜ் பெர்னாட்ஷாவோட ரைட்டிங்க்ஸை எல்லாம் எல்லாரும் படிக்க மாட்டாங்க. சில பேருதான் படிப்பாங்க. இதே வுட் ஹவுஸை எல்லாரும் படிப்பாங்க. பிருந்தாம்மா அது மாதிரி ஒரு லெவல்ல இருக்கறவங்க. செம்மங்குடி மாமா சொல்லுவார்: ‘பிருந்தாவா! அந்தம்மா பெரியாளாச்சே!’ன்னு. அந்த அளவுக்கு அவரே மதிப்புக் குடுக்கக்கூடிய ஒரு ஆர்ட்டிஸ்ட் பிருந்தாம்மா. அவங்ககிட்ட நான் பாடம் படிச்சது பெரிய கொடுப்பினை.

அதுக்குப் பிறகு நான் கச்சேரி செய்ய ஆரம்பிச்சிட்டேன். பல வருசங்கள் ஓடிப் போச்சு. நான் சங்கீதத்துல என்னோட வார்ப்புன்னு சில விஷயங்களைப் பண்ணியிருக்கேன். கிரியேட்டிவ் சைடுல. ஏன்னா, எந்த குருவும் தன்னோட கார்பன் காப்பியா சிஷ்யன் இருக்கணும்னு விரும்ப மாட்டாங்க. சிஷ்யன் தன்னோட மனசை தானே தேடிக்கணும்னுதான் எந்த நிஜமான குருவும் விரும்புவாங்க. அப்பிடித்தான் எங்க பிருந்தாம்மாவும். என்னை அவங்க வளத்தப்பவே அப்பிடியான ஒரு மைண்டோடதான் வளத்தாங்க. கிருதிகள் மட்டும்தான் சொல்லித் தருவாங்க. கற்பனை சங்கீதத்தை சொல்லித் தர மாட்டாங்க. ராகம் பாடறப்போ ஒரு கற்பனை வேணும். ஸ்வரத்தோட பாடறப்போ ஒரு கற்பனை வேணும். அதெல்லாம் பாடினாத்தான் அது சங்கீதம். வெறும் கிருதியை கிளிப்பிள்ளை மாதிரி ஒப்பிச்சா அது சங்கீதம் கிடையாது. பிருந்தாம்மா கிருதியை கரெக்டா சொல்லித் தருவாங்க. ராகம் பாடறப்போ சொல்லித் தர மாட்டாங்க. பக்கத்துலயே உக்காந்திருப்பாங்க. ‘பாடு!’ம்பாங்க. அந்த ராகத்தை நான் பாடும்போது ‘ம்! ம்!’னு என்னை மேல மேல பாடச் சொல்லுவாங்களே தவிர, ‘நான் பாடறேன். என் பின்னாடியே பாடு’ன்னு அந்த கற்பனை சங்கீதத்தை சொல்லித் தர மாட்டாங்க. ஏன்னா நம்ம மனசைத் தூண்டி விடணுங்கறதுக்காக. இதுதான் அவங்க சொல்லிக் குடுக்கற வழி.

அப்போ எனக்கு ஒரு own thingking வந்துடுச்சு. அதை அவங்களேதான் வளத்துவிட்டாங்க. அதோட எனக்கு மத்த influcences இருந்தது. பம்பாய்ல இருந்ததால மராட்டி சங்கீதம், ஹிந்துஸ்தானி சங்கீதம்லாம் நிறையா கேட்டேன். வெஸ்டர்ன் மியூசிக், பக்தி சங்கீதமும் நிறையா கேட்டேன். எங்க வீட்ல அப்பப்போ சம்பிரதாய பஜனை நடக்கும். ஒரு பக்கம் பிருந்தாம்மா சொல்லிக் குடுத்துக்கிட்டு இருந்தாங்க. பஜனை பாடற எல்லாரும் எங்க வீட்டுக்கு வருவாங்க. பிருந்தாம்மா ஒரு aspect. அவங்க எனக்கு குரு. ஆனா, இந்த மத்த விஷயங்கள் எல்லாமே என்னை பாதிச்சிருந்தது. பிருந்தாம்மா சொல்லிக் குடுத்த சங்கீதமும் இது எல்லாமும் சேந்து புது விதமா ஒரு சங்கீதத்தை நான் பாடறதுக்குக் காரணமா ஆச்சு.

கேள்வி: அப்போ சங்கீதத்துல நீங்க ஒரு ஸ்டைலை உருவாக்கியிருக்கீங்க?

அருணா சாய்ராம்: உருவாக்கியிருக்கேன்னா, எனக்கு வேற வழியில்ல. என் லைஃப்ல எனக்கு கிடைச்ச influcencesஐ நான் எடுத்து, அதை ஒரு வடிவமா அமைச்சுத்தானே நான் குடுக்க முடியும்? என்னால என்ன முடியறதோ, அதைத்தானே நான் செய்ய முடியும்? ஆனா, இப்போ நான் ஒரு ‘அபங்’ பாடறேன்னு வச்சுக்கோங்க. அதுக்கு ரொம்ப தம் பிடிக்கணும். அடி வயித்துலருந்து பாடணும். ஃபுல் ஃபோர்ஸ்ல பாடணும். அப்போதான் அந்த passion கேக்கறவங்களை பாதிக்கும். பிருந்தாம்மாவோட ட்ரெயினிங் இல்லைன்னா, அப்படி பாட முடியாது. அதே சமயம் அவங்களோட ஜெராக்ஸ் காப்பியாவும் நான் இருக்கக் கூடாதுங்கறது என் மனசுல இருந்தது.

இப்போ தியாகராஜ சுவாமியை எடுத்துக்கோங்க. மும்மூர்த்திகள்ல ஒருத்தர். அதுலயுமே அவரோட ரீச் ரொம்ப அதிகம். அவரை பாதிச்சது யாரு? பத்ராச்சல ராமதாஸரோட கிருதிகள், புரந்தரதாஸரோட கிருதிகள் இதையெல்லாம் கேட்டுக் கேட்டுத்தான் வளந்தார். ஆனாலும் அவர் சங்கீதத்துல வேற ஒரு ஸ்டைலைக் கொண்டு வந்தார். அவரோட சொந்த கற்பனையை சங்கீதத்துல வச்சார். அதனாலதான் அவரோட ‘ஓ! ரங்கசாயி!’ தனித்துவமா இருக்கு. ‘கிரிராஜ சுதா’ அதுவும் தனித்துவமா இருக்கு. உற்சவ சம்பிரதாய கீர்த்தனைகள் தனித்துவமா இருக்கு. ரொம்ப ரொம்ப சிம்பிளா Folk song கூடப் போடறார். அவர் பத்ராச்சல ராமதாஸர் மாதிரியே பாடணும்னு நினைச்சிருந்தா, இவ்வளவு பெரிய கிரேட் ஆளா வந்திருக்க முடியுமா? Being part of an institution is one approach. Trying to become an institution is another approach. I am going for the second. And I'm attempting. அதோட, We should exceed our limit. இல்லையா? அதைத் தாண்டிப் போகணுமே! நீங்க அதுல succeed பண்ணணும்னு அவசியம் இல்ல. அதை நீங்க ட்ரை பண்ணினாலே உங்களுக்கு மார்க்ஸ் உண்டு. முயற்சிக்கே நல்ல அங்கீகாரம் உண்டு. ‘இவங்க ஏதோ பண்ணணும்னு முயற்சி பண்றாங்க’ன்னு ரசிகர்கள் ஒப்புத்துப்பாங்க. ரசிகர்களோட ஒப்புதல் வேணுமே! அதுக்குத்தான் நான் இப்படிப் பாடறேன்.

கேள்வி: நீங்க ஏன் ‘பதம்’ பாடறதில்ல?

அருணா சாய்ராம்: பதம்ங்கறது சிருங்கார பாவம் கொண்டது. சிருங்கார ரஸம்தான் அதோட பிரதான எமோஷன். சங்கீதபூர்வமா பாக்கும்போது பதம்ங்கறது பெரிய விஷயம். சமீப காலமா பொது இடங்கள்ல பெரும்பாலானவங்க அதைப் பாடறதில்ல. ஏன்னா, அது ரொம்ப இழுத்து... வரும். அதி விளம்ப காலத்துல அப்பிடியே மூச்சு நிக்கறாப்ல இருக்கும். ஒரு வார்த்தையை சொல்லிட்டு, அடுத்த வார்த்தையை சொல்றதுக்குள்ள, நீங்க ‘போய்ட்டு வர்றேம்மா’ன்னு எழுந்து போயிடுவீங்க. அவ்வளவு ஸ்லோவான இசை. அதே சமயம் அழகான இசை. ஒண்ணு, ரொம்ப குவாலிஃபிகேஷன் இருந்தாத்தான் அதைப் பாட முடியும். இரண்டாவது, அதுல இருக்கற சிருங்கார பாவம். இடம், பொருள், ஏவல் இதைப் பொறுத்துதான் நாம எந்தக் காரியத்தையும் செய்யணும். நாம எங்க இருக்கோம்? யாருக்காக எதைப் பண்றோம்? அப்பிடிங்கறதை யோசனை பண்ணி எதையும் நாம வாழ்க்கையில செய்யணும். இப்போ நீங்களே நாலு பேரு இருக்கறப்போ ஒரு மாதிரியா பேசுவீங்க. ரெண்டு பேர் மட்டும் இருக்கறப்போ வேற மாதிரிப் பேசுவீங்க. இல்லையா? ஏன்னா, ஒரு கூட்டம் இருக்கறப்போ அதனோட வார்ப்பு வேற. ரெண்டு பேர் மட்டும் இருக்கறப்போ இருக்கற intimacy வேற. ஒரு நாள் பிருந்தாம்மாவோட நினைவு நாளுக்காக வீட்லயே பாடினேன் நான். நண்பர்கள், ஆர்வலர்களைக் கூப்பிட்டு சும்மா வீட்லயே பாடினேன். ரொம்ப நெருக்கானவங்க மட்டும்தான் இருந்தாங்க. அன்னிக்கி நான் நிறைய பதம் பாடினேன். அந்த மாதிரி ஒரு intimate crowd ல இதனோட பொருள், அர்த்தத்தை விகல்பமா எடுத்துக்காம, அந்த மியூசிக்கை அங்கீகரிக்கறவங்க மத்தியில நான் பாடலாம்.

ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்காங்க. அதுல எல்லாத் தரப்பு மக்களும் இருக்காங்க. சங்கீதம் தெரியாதவங்களும் வர்றாங்க. சங்கீதம் தெரிஞ்சவங்களும் வர்றாங்க. ‘இவங்க என்ன புதுசா கர்நாடக சங்கீதம் பாடிறப் போறாங்க?’ன்னு கேக்கறதுக்கு வர்றவங்களும் வர்றாங்க. நையாண்டி பண்றதுக்கு வர்றவங்களும் வர்றாங்க. பல தரப்பட்ட Groups அது. எல்லாரையும் நாம திருப்திபடுத்தியாகணும். விமர்சகர்களையும் திருப்திபடுத்தியாகணும். அவங்க இருக்கறதாலதான் நம்மளோட தரம் (Standard) உயர்ந்துண்டே போகுது. அவங்க இல்லன்னா, நம்ம தரம் கீழ போயிடும்.‘இதை சரியாப் பாடலை, அதை சரியாப் பாடலை. இதை இப்படிப் பாடணும்’ அப்பிடின்னு சொல்றதுக்கு நாலுபேரு வேணும். காம்போஜில சரியா அந்த இடத்தைப் பிடிக்கலைன்னு சொல்றதுக்கு நாலு பேரு வேணும். அப்பதான் நாம எந்தக் காரியத்தையும் சரியா செய்வோம். இல்லையா? அவங்களும் இருப்பாங்க. அதனால, இத்தனைபேரையும் திருப்திபடுத்தணுங்கறப்போ, சில விஷயங்களை தவிர்த்துடனும். நான் ‘பதம்’ நிறையா பாடறேன். தனி இடங்கள்ல.

கேள்வி: இப்போ நிறைய பேர் இசை விமர்சனம் பண்றாங்க. வெகுஜனப் பத்திரிகைகள்ல சங்கீத சீசன் சமயத்துல நிறைய இசை விமர்சனங்கள் வருது. அந்த இசை விமர்சகர்களோட தகுதி தெரியாம, அவங்களோட விமர்சனங்களுக்கு உடன்படறது சரியா?

அருணா சாய்ராம்: என்னோட வாழ்க்கையில நான் பிரபலமானது ரொம்ப லேட். பல வருஷங்களா நான் இருபது, முப்பது, நாப்பது பேருக்காக பாடினவ. இதை சொல்றதுக்கு நான் வெட்கப்படலை. நான் அப்படி வளந்தவதான். என் கச்சேரிக்கு ரொம்ப குறைவாத்தான் ஆட்கள் வருவாங்க. அப்பவும் எனக்கு நிறைய விமர்சனங்கள் வந்தது. விமர்சகர்கள் அப்பவும் வருவாங்க. நிறைய கமெண்ட்ஸும் எழுதியிருக்காங்க. நான் ஒவ்வொரு கமெண்ட்டையும் சீர்தூக்கிப் பாத்து, என்னை நானே ப்ரூவ் பண்ணினதாலதான் என்னால இந்த லெவலுக்கே வர முடிஞ்சது. அது வேற காலக்கட்டம்தான். இருந்தாலும், அப்போ அந்த விமர்சகர்கள் பல விஷயங்களை எனக்கு சுட்டிக் காட்டினாங்க. ரொம்ப constructive வா அதை நான் எடுத்துக்கிட்டு, வளந்து வந்திருக்கேன். அதனால நான் விமர்சகர்களுக்கு எப்பவுமே ஒரு இடம் குடுத்து வச்சிருக்கேன். They play a good role. அதே சமயம், அவங்களுக்கு அந்த இசை ஞானம் இருக்கத்தான் வேணும்.

கேள்வி: சபாவுல பாடறப்போ, சில பேரைப் பாத்தாலே பாடறதுல இருக்கற ஈர்ப்பு போயிடும். ரொம்ப அலட்சியமா, எல்லாம் தெரிஞ்சது மாதிரி உக்காந்திருப்பாங்க. தப்புத் தப்பா தாளம் போடுவாங்க. அந்த மாதிரி சூழ்நிலைகள்ல நீங்க எப்படி உணர்வீங்க?

அருணா சாய்ராம்: இந்த மாதிரி விஷயங்களையும் நான் கடந்து வந்தவதான். ஆரம்பத்துல பாடறப்போ, நம்ம மனசுல ஒரு பயம் வந்து ஜிவ்வுன்னு உக்காந்துக்கும். அதையெல்லாம் தாண்டித்தான் வந்திருக்கேன். அதெல்லாம் இல்லாம வந்துடல. நம்மளை ரொம்ப எதிர்க்கறவங்க வந்து உக்காந்தா, அந்தக் கச்சேரி முழுக்கவே funk ஆயிடும். அவங்க ஒரு மூஞ்சியப் பாத்துட்டு, நமக்கு வர்றதுகூட வராமப் போயிடும். இதெல்லாம் நடந்திருக்கு. எல்லா சங்கீதக்காரங்க வாழ்க்கையிலயும் இதுமாதிரி நடந்திருக்கும். அந்த ஒரு முகம், நம்ம மனசுல இருக்கற அமைதியை முழுக்கக் கலைச்சி விட்டுடும். அப்படி எனக்கும் நடந்திருக்கு. இது ஏன்னு நான் யோசித்துப் பாத்தேன். நம்ப அதுக்கு முக்கியத்துவம் குடுக்கறதுனாலதான்னு எனக்குப் புரிஞ்சுது. குரு பிருந்தாம்மா ஒரு வார்த்தை சொல்லுவாங்க. அப்போ எனக்கு பத்துப் பதினஞ்சு வயசுதான். ‘மேடைல ஏறாத வரைக்கும் நமக்கு ஒண்ணுமே தெரியாது. கற்றது கை மண்ணளவு. அப்படிங்கறதையெல்லாம் அப்படியே மனசுல வச்சுக்கோ. மேடைல ஏறியாச்சுன்னா, நீ ஆள் வேற. அதை ஃபர்ஸ்ட் நீ புரிஞ்சுக்கோ. உனக்குத் தெரிஞ்சது ரொம்ப கம்மியா இருக்கலாம். ஒண்ணுமே தெரியாமக்கூட இருக்கலாம். மேடையில ஏறியாச்சுன்னா, நீதான் ராஜா, ராணி. உனக்குத் தெரிஞ்சதை தைரியமா நீ பாடிட்டு, கீழ இறங்கிடு. திரும்பப் பழைய படி ஆயிடு. இந்த தைரியம் இல்லன்னா, மேடையில ஏர்றதுக்கு நீ லாயக்கில்ல.’ அப்பிடின்னு சொல்லுவாங்க. அதை நான் ரொம்பக் கஷ்டப்பட்டு வரப் பண்ணிக்கிட்டேன். நான் ராஜா, ராணின்னு இல்லாட்டாகூட, மேடையில ஏறிட்டேன்னா நான் என்ன பண்ணுவேன் தெரியுமா? மானசீகமா, கதவெல்லாம் திறந்துவிட்டுக்கிட்டு, எனக்கு வேணுங்கற தெய்வங்கள், எனக்கு வேணுங்கற குருக்கள் எல்லாரையும் உள்ள கூப்பிட்டுவேன். என் மனசுலருந்து இதைச் சொல்றேன். மைக் டெஸ்ட் பண்ணிட்டுதான் நான் கச்சேரி தொடங்குவேன். மைக் டெஸ்ட் பண்றப்பவே, ‘கிருஷ்ணா! ராகவேந்திரசாமி! பாபா! எல்லாரும் வந்து உக்காந்துட்டீங்களா?’ன்னு மானசீகமா கேட்டுப்பேன். அப்புறம் எங்க அப்பா, அம்மா. அப்புறம் என் மாமனார். அவர் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணியிருக்கார். நாம நம்பிக்கை வைக்கற எல்லாருமே நமக்குக் கடவுள்தான். அதனால அவங்களை எல்லாம் கூப்டு முன்னால உக்கார வச்சுடறது. அதுக்கப்புறம் ஏறி உக்காந்துச்சுன்னா, யாரையும் நான் பாக்கறதே கிடையாது. அதைப் பத்தி நான் கவலைப்படறதும் கிடையாது. ‘இதுதான் எனக்குத் தெரியும். இவ்வளவுதான் எனக்குத் தெரியும். இதை நான் உங்களுக்குப் பாடறேன்’னு நான் தைரியமா பாடிட்டு வந்துடுவேன்.

கேள்வி: இப்போ ‘அபங்’ அதிகமாப் பாடறீங்க. எங்க கத்துக்கிட்டீங்க? எப்படி?

அருணா சாய்ராம்: அபங் அதிகமா நான் பாடலை. ஒரு கச்சேரிக்கு ஒரு அபங்தான் நான் பாடறேன். பாடறதெல்லாம் கர்நாடகக் கச்சேரி. மும்மூர்த்திகளோட கிருதிகள், ராகம் தானம் பல்லவி, பாபநாசம் சிவனோட பாடல்கள், கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்கள் இதெல்லாம் நான் பாடறேன். எல்லாம் பாடி முடிச்சுட்டு, கடைசியா 20 நிமிஷம் இருக்குல்ல? அதுல ஒரு ‘அபங்’தான் பாடறேன். ஏன் உங்களுக்கு நான் அதிகமா ‘அபங்’ பாடற மாதிரி தோணறதுன்னு நானும் யோசனை பண்ணிப் பாத்தேன். அந்த அபங் வந்து, cyclonic wave ஒண்ணு வரும்ல? வந்தா, அது மத்த எல்லா அலையையும் அடிச்சுட்டுப் போயிடும். அந்த மாதிரி, இந்த ‘அபங்’ எல்லாத்தையும் அடிச்சுட்டுப் போயிடறது. அதைப் பாடின உடனே, ஜனங்களுக்கு மத்ததெல்லாம் மறந்து போயிடறது. அது ‘அபங்’கோட passion. அவங்களுக்கு ‘அபங்’தான் மனசுல நிக்கறது. நான் அபங்தான் பாடறேன்னு நினைக்கறாங்க. நான் பம்பாய்ல குழந்தையில இருந்து வளந்தவ இல்லையா? அங்க, எங்கயோ ஒரு இடத்துல யாரோ ஒருத்தர் இந்த ‘அபங்’கைப் பாடி, மனசுல அந்த ஆவி போயிடுச்சு. அது நான் விதிச்சதில்ல. சாமி விதிச்சது. அந்த விட்டல், பாண்டுரங்கனைக் குறிச்சுப் பாடறதுதான் ‘அபங்.’ மகாராஷ்ட்ராவுல இருக்கற பகவான். அவர் விஷ்ணு சொரூபம்தான். அந்த விட்டலை நோக்கிப் பாடறது. அந்த விட்டல் மூவ்மெண்ட்டே, பாமர ஜனங்களுக்கு பக்தி வரணுங்கறதுக்காக ஆரம்பிச்ச ஒரு மூவ்மெண்ட். 12-ம் நூற்றாண்டு, 14-ம் நூற்றாண்டுல. முதல்ல வந்தவர் ஞானேஸ்வர்ங்கற ஒரு துறவி. அவர்லருந்து ஆரம்பிச்சு, ஜனாபாய், துக்காராம், நாமதேவர்னு பலப் பல இசை மேதைகள் இருந்தாங்க. இவங்கள்ல ஒருத்தர் சக்கிலியர், ஒருத்தர் விவசாயி, ஒருத்தர் குயவர். இந்த மாதிரி சமூகத்தின் தரை மட்டத்துல இருக்கறவங்கதான் பெரிய துறவிகள் ஆனாங்க. படிப்பறிவே இல்லாத மக்களுக்கு, பக்தியினால அவங்க எப்படி ஒரு மேன்மையான நிலைய அடையலாம், அப்படிங்கறதுக்காக வந்த ஒரு மூவ்மெண்ட் அது. அதனால அதனோட வார்ப்புகள் ரொம்ப சிம்பிளா இருக்கும். ‘தீர்த்த விட்டலா, ஷேத்ர விட்டலா, தேவ விட்டலா, தேவ பூஜா விட்டலா’ இப்பிடி சொன்னா பாஷையே வேண்டமே! அப்படி ஒரு எளிமை. நான் தமிழ், நீ இந்தி, நீ மராத்தி... இது எல்லாத்தையும் தாண்டி அது போயிடறது. அதுனால மக்களுக்கு அது மனசுல நிக்குது. அதுதான் உண்மை.

கேள்வி: நீங்க கர்நாடக இசையை யாருக்காவது சொல்லித் தர்றீங்களா? உங்களுக்கு ஸ்டூடண்ட்ஸ் யாராவது இருக்காங்களா?

அருணா சாய்ராம்: ஒருத்தருமே கிடையாது. ஏன்னா, என்னோட வாழ்க்கைக் கதை வேற மாதிரி. நான் ரொம்ப வருஷங்களுக்கு ஒரு ஹவுஸ் ஒயிஃபா இருந்துட்டு, ரொம்ப கம்மியா பாடிட்டு, என் குழந்தைகள் எல்லாம் வளந்த பிறகுதான், நான் நிறைய பாட ஆரம்பிச்சேன். அப்புறம்தான் சென்னைக்கு வந்தேன். இப்போ முழு மூச்சா, கடைசி அஞ்சு, ஆறு வருஷமா பாடிக்கிட்டு இருக்கேன். இருந்தது எந்த இடம், இப்போ இருக்கறது எந்த இடம்? அந்த பயணம் இருக்கில்லையா? More than full time ஒர்க் பண்ணலைன்னா இவ்வளவு குறுகிய காலத்துல எல்லாருக்கும் தெரியும்படியா ஆகியிருக்க முடியாது. பகவத் சங்கல்பம் இருந்தாத்தான் அது நடக்கும். அதோட அதுக்கு அப்படி ஒரு உழைப்பைத் தந்தாகணும். அப்படிச் செய்யும்போது, இப்போ சொல்லிக் குடுக்கறதுக்கான சூழலும், மன நிலையும் இல்லை. ஆனா, சீக்கிரமே அது வந்துடும்னுதான் நினைக்கிறேன். யாருக்கும் சொல்லிக் குடுக்காம நான் இந்த உலகத்தைவிட்டுப் போயிடமாட்டேன். நிச்சயமா அது நடக்கும். இப்போதைக்கு இந்த பெர்ஃபார்மன்ஸ் முக்கியமா இருக்கு. அவ்வளவுதான்.

கேள்வி: கர்நாடக இசைங்கறது கச்சேரிகள்லயும், சீசன் டைம்லயும்தான் அதிகமாப் பேசப்படுது. கர்நாடக இசையை அதிகமா பரவாக்க என்ன செய்யணும்? அல்லது இப்போ இருக்கற நிலைமையே போதும்னு நினைக்கிறீங்களா?

அருணா சாய்ராம்: கர்நாடக இசைங்கறது ஒரு கிளாசிக்கல் ஆர்ட் ஃபார்ம். உலகத்துல எந்த எடமா இருந்தாலும் கிளாசிக்கல், கிளாசிக்கல்தான். அதுல ரொம்ப மாஸ் ரீச் கிடைக்கறது கஷ்டம். ஏன்னா, அதோட பர்ப்பஸ், இண்டலக்ச்சுவல் பியூப்பிள்ஸ்க்குதான். அதனால, அதனோட ரீச் ரொம்ப இருக்கணும்னு நாம எதிர்பார்க்கறது தப்பு. அதே சமயத்துல இது கொஞ்ச பேருக்கு மட்டும்தான்னும் நாம நினைக்க வேண்டியதில்ல. ‘அவங்களா வந்துதான் ரசிக்கணும். இல்லன்னா, நாம அதுக்காகக் கவலைப்பட வேண்டியதில்ல.’ அப்படின்னு நினைக்கறதும் தப்பு. ஏற்கெனவே கொஞ்சமாத்தான் போய் சேந்துண்டு இருக்கு. அதனால அதையும் நாம லிமிட் பண்ணினோம்னா, அது நம்மளோட தப்பு. அதனால, என்னைப் பொறுத்தவரைக்கும் நான் இதுக்கு என்ன செஞ்சுக்கிட்டு இருக்கேன்னுதான் நான் சொல்ல முடியும். அதோட கோட்பாடுகளை மீறாம இருந்துண்டே, புது ஆடியன்ஸை இதுக்குள்ள எவ்வளவு கொண்டுவரமுடியும் என்னால அப்படின்னு நான் முயற்சிதான் பண்றேன். அந்த முயற்சியில வந்ததுதான் பலப் பல விஷயங்களை நான் பாடறது. ஆனா அதுல அழகு இல்லாம இல்ல; அதுல தொன்மை இல்லாம இல்ல. அதே சமயத்துல இப்போ contemporoary யா இருக்கறதுல... அதைப் பாடி நீங்க கேக்கறப்போ, ‘என்ன இவ்வளவு மாடர்னா இருக்கே!’ அப்பிடின்னுதான் உங்களுக்குத் தோணும். அந்தக் காலத்துலயும் அட்வான்ஸா திங்க் பண்ணி நிறைய விஷயங்கள் பண்ணியிருக்காங்க. இதை நான் இப்போ வெளியில கொண்டு வர்றேன். அது என்னோட முயற்சி. அதுக்கு நல்ல பலன் இருக்கத்தான் செய்யுது. இப்போ சின்னச் சின்ன குழந்தைகள், ஒன்றரை வயசுக் குழந்தைகள், ஆறு மாசக் குழந்தைகள் எல்லாரையும் அவங்க பெற்றோர் தூக்கிட்டு வர்றாங்க. ‘அம்மா! உங்களோட ஃபேன்மா இவ!’ன்னு அவங்க சொல்றப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஏன்னா, அந்தக் குழந்தை ஒரு ‘மாடு மேய்க்கும் கண்ணே!’, ‘ஒரு விஷமக்காரக் கண்ணா!’ ஒரு அபங் பாட்டை கேக்கறதுக்காக ரெண்டு மணி நேரம் மத்ததை எல்லாம் கேக்கறது. ஒரு ராகம் தானம் பல்லவி, ஒரு தீட்சிதர் கிருதி கேக்கறது. நாளாவட்டத்துல அந்தக் குழந்தை தேறிடும். கர்நாடக இசை அதுக்குப் பிடிச்சுப் போயிடும். இல்லையா? என்னைப் பொறுத்தவரைக்கும், we must try to extend the borders, without over stretching the limits of this music. அப்படி செஞ்சா இந்த இசை பரவலாயிடும். முன்ன இருந்ததைவிட இப்போ எவ்வளவோ முன்னேறியிருக்கு கர்நாடக இசை. நிறையா பேர் கேக்கறாங்க இந்த இசையை.

கேள்வி: அதுக்குக் காரணம் மீடியா. இல்லையா?

அருணா சாய்ராம்: நிச்சயமா. மீடியாவோட காண்ட்ரிபியூஷனை சும்மா சொல்ல முடியாது. அது ரொம்ப பெரிய பார்ட் வகிச்சிருக்கு. நாம செய்யறதைச் செய்யணும். மீடியா, அது செய்யறதை செய்யணும். சபாக்காரங்களும் அமைப்பாளர்களும் அவங்களோட வேலையைச் செய்யணும். எல்லாருமா சேர்ந்து செய்யும்போது அது பரவும்.

கேள்வி: நீங்க பாடற ராகம்,தானம், பல்லவி எல்லாமே கிருதிகளை அடிப்படையாக் கொண்டு இருக்கு. ஏன்? அதைப்பத்திக் கொஞ்சம் சொல்லுங்க.

அருணா சாய்ராம்: இந்த ராகம், தானம், பல்லவிங்கறது இன்னொரு சப்ஜெக்ட். ஒரு காலகட்டத்துல ராகம், தானம், பல்லவிங்கறது ரொம்பப் பெரிய விஷயம். அது ஒரு இண்டலக்சுவல் மியூசிக். அதோட தாளக் கட்டு எல்லாம் ரொம்பக் கஷ்டமா இருக்கும். அதாவது, தாளத்தைப் போட்டுக்கிட்டு, அந்த சங்கதியைப் பாடும்போது, அப்பிடியே கத்தி முனையில நடக்கறா மாதிரி இருக்கணும். அப்போ அந்த ஆடியன்ஸ் எல்லாம், ‘ஆஹா! இவ்வளவு கஷ்டமான வேலையில, இப்போ பாரு இவரு தப்புப் பண்ணிடுவாரு’ ன்னு வெயிட் பண்ணிட்டே இருப்பாங்க. நாம தப்பு பண்ணாம பாடி முடிச்சிட்டாலே, பெரிய வெற்றி அது. அந்த மாதிரியான காலக் கட்டங்கள் இருந்தது. அது ஒரு கஷ்டமான எக்ஸர்சைஸ். ரொம்ப இண்டலக்ச்சுவலா, ரொம்ப மேத்தமேட்டிகலாவும் இருக்கணும். சுவையாவும் இருக்கணும். இத்தனையும் அந்தப் பல்லவியில வரணும். இப்போ அந்த மாதிரியான ஆடியன்ஸ் குறைவு. ஒரு கட்டத்துல ‘ராகம் தானம் பல்லவி’யும் ஒரு டிரை எக்ஸ்பீரியன்ஸா ஆயிடுச்சு. அதனால நான் இதுல என்ன பண்ணலாம்னு யோசனை பண்ணிப் பாத்தேன். அப்போ, இந்த ராகம், தானம், பல்லவியையும் இண்டரஸ்டிங்கா பண்ணலாம்னு எனக்குத் தோணிச்சு. இந்த மாதிரி நான் மட்டும் இல்ல. நிறையபேர் பண்ணியிருக்காங்க. அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் இருக்காரே, அவர் அந்தக் காலத்துலயே, ‘சங்கராபரணனை அழைத்தோடி வாடி! கல்யாணி! தர்பாருக்கு’ அப்படின்னு ஒரு பாட்டுப் பாடியிருக்கார். பல்லவிக்குள்ளயே ‘சங்கராபரணம்’, ‘தோடி’, ‘கல்யாணி’, ‘தர்பார்’னு எல்லா ராகமும் ஒரு வாக்கியத்துக்குள்ள வந்துடும். இது ஒரு பெரிய பியூட்டி. ஜனரஞ்சகம். அதே சமயம் பாண்டித்யம். இந்த மாதிரி ஒவ்வொரு காலக் கட்டத்துல ஒவ்வொருத்தர் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. நான் ‘ராகம் தானம் பல்லவி’ல ஒரு கதை இருக்கணும்னு நினைச்சேன். இது என்னோட அப்ரோச். அதுல கதையோ, ஒரு தீமோ, ஒரு anacdote மாதிரி இருந்துச்சுன்னா, மக்களுக்கு மனசுல இருக்கும்னு நினைச்சேன். அப்பிடியே நான் பாட ஆரம்பிச்சேன். ‘பாக்யதா லஷ்மி பாரம்மா!’ அப்படின்னு ஒரு பல்லவி. மத்யமாவதி ராகத்துல அமைஞ்சது. அந்தப் பாட்டையே நான் பல்லவியா மாத்தியிருக்கேன். பல்லவியில முதல் லைன் வருது இல்லையா அதை ‘ஆசு’ன்னு சொல்லுவாங்க. இங்கிலீஷ்ல refrainனு பேரு. அதை முடிச்சுட்டு ராகமாலிகைக்கு வந்துடுவேன். அஷ்ட லஷ்மிகளைப் பத்தின பாட்டு. அதுல எட்டு ராகங்கள். ஆதி லஷ்மி, தனலஷ்மி, தான்ய லஷ்மி, சந்தான லஷ்மி இப்படி ஒவ்வொரு லஷ்மியா ராகமாலிகைல கொண்டுவருவேன். அந்தந்த லஷ்மியோட தன்மைக்குத் தகுந்தாற்போல ராகம் இருக்கணும். சந்தான லஷ்மின்னா சஹானா. தைரிய லஷ்மின்னா அடானா. இப்படி ராகமாலிகையா மாறி வரும்போது, அது ஆடியன்ஸுக்குப் பிடிச்சுப் போயிடுது. ஏன்னா, ஒரு ரவுண்ட் எல்லா லஷ்மிகளையும் பாத்துட்டு வந்த திருப்தி அவங்களுக்குக் கிடைச்சிடுது. ரொம்ப ஒர்க் பண்ணினாத்தான் இதெல்லாம் கிடைக்கும்.

அதே மாதிரி, முருகன் பேர்ல ஒரு பல்லவி கம்போஸ் பண்ணினோம். எனக்குக் கொஞ்சம்பேர் இருக்காங்க. எனக்காக ஒர்க் பண்றவங்க. ஒரு டீம் மாதிரி நாங்க ஒர்க் பண்றோம். அவங்களோட சேந்துதான் நான் நிறைய புது முயற்சிகள் பண்றேன். தனி ஒரு மனுஷனால எதையுமே சாதிக்கமுடியாதுங்கறதை நம்பறவ நான். ‘முருகனே! குகனே! உனது பாதம் துணையே!’ அப்படின்னு ஒரு பல்லவி. இதுதான் பல்லவியோட ஆசு. அதுக்கப்புறம் ராகமாலிகைன்னா, ஆறு ராகம். முருகனுக்கு ஆறுபடைவீடு. அப்போ நாம ஒவ்வொரு ஊராப் போயி, முருகனை தரிசனம் பண்ற மாதிரியான ஒரு ஃபீலிங் வேணும். அதனால, திருப்புகழ் மாதிரியான ஒரு சந்தம், நானே கம்போஸ் பண்ணினேன். அதனால, ஸ்வரங்கள் பாடிட்டு, அது முடியும்போது, திருப்புகழ் மாதிரியான ஒரு கவிதையைச் சொல்லி, அந்த ஊரோட பெருமையைச் சொல்லி அந்த ராக மாலிகையை முடிச்சேன். அந்த மாதிரி நிறைய பல்லவிகள் நான் பாடியிருக்கேன். சமீபத்துல நான் பாடினது ‘மும்மூர்த்திகள் வந்தனம்’ங்கற பல்லவி. ‘தியாகராஜாய நமஸ்தே! குரு குஹாய! ஷ்யாம கிருஷ்ணாய!’ அப்படின்னு மூணு பேரைச் சொல்லி பாட்டு. அதுல தியாகராஜரைப் பத்தி வரும்போது, ராகமாலிகல முழுக்க நாட்டை, கௌளை, வராளி, ஆரபி, ஸ்ரீராகம்... அவரோட பஞ்சரத்ன கீர்த்தனைகள் வர்ற மாதிரி பண்ணினோம். இது ஒரு solid work. அதை கன்வின்சிங்கா பண்ணணும்னா, ரொம்ப பிரிபேர் பண்ணணும். அதுல தாளங்கள் எல்லாம் கொஞ்சம் கஷ்டமா போடணும். ஏன்னா, நம்ம பாண்டியத்தைக் காண்பிக்கறதுக்காக. யூஷுவல் தாளம் போட்டோம்னா, அவ்வளவுதானான்னுடுவாங்க. அதனால என்னோட ராகம், தானம், பல்லவி இந்த மாதிரியான ஒரு அப்ரோச்சைக் கொண்டிருக்கு.

கேள்வி: கர்நாடக இசைக்கச்சேரிகள்ல நிறைய மாற்றங்கள் வந்திருக்கு. ஸ்பான்ஸர்ஸ் நிறைய வர ஆரம்பிச்சுட்டாங்க. கச்சேரியும் கிட்டத்தட்ட சினிமா மாதிரி ஒரு பொழுதுபோக்கு அம்சமா ஆயிடுச்சு. ஆர்ட்டிஸ்ட்கூட எதிர்காலத்துல ஸ்பான்ஸர்ஸை நம்ப வேண்டிய சூழலா ஆயிடும் போல இருக்கு. இது நல்ல போக்கா?

அருணா சாய்ராம்: எந்த ட்ரெண்டா இருந்தாலும் அதை யூஸ் பண்றது ஒரு விஷயம். மிஸ் யூஸ் பண்றது இன்னொரு விஷயம். அதனால அந்த விஷயத்தை நாம வந்து தப்புன்னு சொல்ல முடியாது. பயன்படுத்தறவங்களோட நோக்கம்தான் சில சமயத்துல தப்பா போயிடுது. அதுதான் பிராப்ளம். ஸ்பான்ஸர்ஸ் வந்தது ஒரு விதத்துல நல்ல விஷயம். ஏன்னா, கர்நாடக சங்கீதத்துல கச்சேரி பாடறவங்களுக்கு உரிய சன்மானமே இல்லாம எல்லாம் நடந்த காலம் உண்டு. 100 ரூபா, 150 ரூபா சன்மானத்துக்கெல்லாம் பாடின காலம் இருக்கு. The sponsors have given new life to this profession. அதை நாம இல்லன்னு சொல்ல முடியாது. நானே பாம்பேலருந்து மூன்றாம் வகுப்பு டிக்கெட் எடுத்து, சொந்த செலவுல சென்னை வந்து, பாடிட்டுப் போன காலம் உண்டு. அப்போ ஒரு டீ வாங்கி சாப்பிடறதுக்குக்கூட யோசிப்பேன். ஏன்னா, எல்லாம் நம்ம சொந்தக் காசு. இங்க ஒரு சபாவுல பாடுவேன். மொத்தமா அவங்க குடுக்கறது, அம்பதோ, எழுபத்தஞ்சு ரூபாயாவோத்தான் இருக்கும். அது நம்ம ஆட்டோ சார்ஜுக்கே சரியாப் போயிடும். அப்படியே திரும்பிப் போயிடவேண்டியதுதான். அப்படி இருந்த நிலைமை மாறிடுச்சு. இப்போ எங்களோட ஜூனியர் இருக்காங்களே, அதிர்ஷ்டவசமா அவங்களுக்கு அந்த நிலைமை இல்ல. அப்போ நம்பிக்கையே இல்லாம இருந்ததே! சங்கீதத்தை எதுக்காக நாம பாடறோங்கற ஆத்ம பரிசோதனை எல்லாம் பண்ணிட்டுதானே நாங்க பாடிக்கிட்டு இருந்தோம்? ஒரு நாளைக்கு எவ்வளவு பணத்தை நம்ம பாக்கெட்லருந்தே செலவழிக்க முடியும்? இல்லையா? அப்படி எல்லாம் இருந்த காலக் கட்டங்கள் போயி, ஸ்பான்ஸர்ஸ் வந்ததுக்கு அப்புறமா ஓரளவுக்கு அது இம்ப்ரூவ் ஆயிடுச்சு. malpractice ங்கறது எல்லா இடத்துலயும் நடக்கும். இந்தத் துறையில மட்டும் இல்ல. இது ஒரு different issue, not the issue of sponsors. அதை எல்லாரும் புரிஞ்சிக்கிட்டாங்கன்னா, ஸ்பான்ஸர்ஸ்ங்கறது நல்ல விஷயம்னு எல்லாருக்கும் புரிஞ்சிடும்.

கேள்வி: உங்களுடைய பூர்வீகம், உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க.

அருணா சாய்ராம்: என்னோட பூர்விகம் அப்பாவுக்கு திருவாரூர், அம்மாவுக்கு திருச்சி. பிறந்து வளந்தது பாம்பேயா இருந்தாலும், இங்க வந்தா திருவாரூர்ல ஒரு மாசம், திருச்சியில ஒரு மாசம்னு இருப்பேன். தாத்தா, பாட்டி வீட்டுக்கு வந்துட்டுதான் போவோம். ஒவ்வொரு திருவையாறு ஆராதனை விழாவுக்கும் எங்க அப்பா என்னை அøச்சுண்டு போவார். நிறைய பெரியவங்களை அடிக்கடி பாத்துண்டு இருந்ததால, அடிக்கடி இங்க வந்துட்டு போனதால தமிழ்க் கலாசாரம் என்கூட இருந்துக்கிட்டே இருந்தது. நான் சொன்னேன் இல்லையா, தமிழ் அறிஞர்கள் அத்தனைபேரும் எங்கவீட்டுக்கு வந்திருக்காங்க. அவ்வளவு பெரிய மனுஷங்களை எல்லாம் எனக்கு எங்க அப்பாவும் அம்மாவும் அடையாளம் காட்டிக்கிட்டே இருந்தாங்க. அதுதான் என்னோட அட்ரஸ். பெரிய பெரிய இமையமலை மாதிரியான மனிதர்களை எல்லாம் வீட்டுக்குள்ளயே கொண்டுவந்து காமிச்சிட்டாங்க, நான் குழந்தையா இருக்கறப்பவே. அந்த ஒரு வரப்பிரசாதம்தான் என்னை ஒரு நல்ல இடத்துக்குக் கொண்டு வச்சிருக்கு.

என்னோட குடும்பத்தைப் பத்திச் சொல்லணும்னா, என் வீட்ல அப்பா, அம்மா, நான், என் சகோதரர் அவ்வளவுதான். எனக்கு சீக்கிரமே கல்யாணம் ஆயிடுச்சு. என் கணவரும் அவர் வீட்டுக்கு ஒரே பையன் தான். அவருக்கு ஒரு சகோதரி. மாமியார் இருக்காங்க. மாமனார் சமீபத்துலதான் இறந்தார். ஆக, அவரோடதும் சின்ன குடும்பம்தான். எனக்கு ரெண்டு மகள்கள். ரெண்டுபேருமே வெளிநாட்லதான் இருக்காங்க. அவங்களுக்கும் இந்தக் கலையில ரொம்ப இண்டரஸ்ட் உண்டு. ஆனா, இதை புரொஃபஷனலா எடுத்துக்கல.

என் கணவர் ஒரு பெரிய நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவா இருந்தார். அவர் எனக்காகத்தான் அவரோட வேலையைவிட்டார். பாம்பேயில எல்லாத்தையும் விட்டுட்டு இங்க சென்னைக்கு வந்துட்டோம்.

கேள்வி: ஒரு கர்நாடக இசைப் பாடகர் ஏன் பாடறார்? அதற்கான நோக்கம் என்னவா இருக்கு?

அருணா சாய்ராம்: முதல்ல நம்மளை ஆன்மிக நிலைக்குக் கொண்டுபோயிட்டா, ஆட்டோமேட்டிக்கா ஆடியன்ஸும் அந்த நிலைக்கு வந்துடுவாங்க. இதுதான் அந்த நோக்கம். சங்கீதத்தைப் பாடும்போது, நாம தன்னை மறந்து, நமக்குத் தெரிஞ்சது என்னவோ, அதை நிலையான ஒரு மனசோட சரணாகதியா சுவாமிக்கு அதை அர்ப்பணம் பண்ணிட்டோம்னா, அந்த ரசிகனையும் ஒரு கடவுளோட அம்சமா நாம பாக்கலாம். ‘எனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்யா. குத்தமோ, குறையோ எனக்குத் தெரிஞ்சதை நான் தன்னை மறந்து பாடறேன், கேளு’ அப்பிடின்னு சொல்லிட்டா ரசிகர்கள் நிச்சயமா நம்மளோட வந்துடுவாங்க.

கேள்வி: கர்நாடக இசைங்கறது இலக்கணம் கொண்டது. இலக்கணம்தான் அடிப்படை. அதை மீறுவதும் நடக்குது. ரசிகர்கள்ல, சிலருக்கு குழைவு, உருக்கம் பிடிக்குது. சிலருக்குப் பிடிக்கறதில்லை. ஒவ்வொரு பாடகரும் ஒவ்வொரு பாணி வச்சிருக்காங்க. இது சரியா?

அருணா சாய்ராம்: கர்நாடக இசைக்கு இலக்கணங்கறது அத்தியாவசியமான ஒரு விஷயம். கரகாட்டம் ஆடறதுன்னாக்கூட அதுக்குன்னு சில இலக்கணங்கள் இருக்கு. அதுக்கு ஒரு ட்ரெயினிங் இருக்கு. அந்த பயிற்சி இல்லாம அவங்களால அந்தக் கரகத்தைத் தலையில தூக்க முடியாது. பாக்கறவங்களுக்கு அது எளிமையா தெரியறதால, அதை அலட்சியமா நினைச்சுட கூடாது. நாட்டுப்புறக் கலைகள்லயுமே ஒண்ணொண்ணுலயும் ஒரு டெக்னிக் இருக்கு. அதைத்தான் நாம இலக்கணம்னு சொல்றோம். அது ஒரு ரூல், அது ஒரு டிசிப்ளின். எந்தச் சின்ன விஷயமா இருந்தாலும் ஒரு டிசிப்ளினைத் தாண்டிதான் நாம வரவேண்டியிருக்கு. கர்நாடக சங்கீதம் மாதிரியான ஒரு உச்சகட்ட கலை வடிவத்துல இலக்கணம் ரொம்ப முக்கியம். ஆனா, இந்தக் கலையோட அழகு எதுல இருக்குன்னா, அந்த இலக்கணத்தைக் கத்துண்டு, அதை மறக்கணும். ஒரு ஸ்டேஜ்ல, மோகனம் சரியாப் பாடறோமா, சங்கராபரணம் சரியா வருதான்னு கவலைப்பட்டுண்டே பாடறது போயி, மோகனம் அப்படின்னா அதோட ரசம், அதோட பாவம், அதோட அழகு அதோட ஃபீல்தான் ஞாபகத்துக்கு வரணும். அது வந்து, என் உடம்புல ஊறி நான் பாடும்போதுதான் ரசிகர்களைப் போய்ச் சேரும். அதை நான் பண்ணித்தான் ஆகணும். இலக்கணத்து வழியாப் போயி, இலக்கணத்தைத் தாண்டணும். அதே சமயம் இலக்கணம் இல்லாம போனேன்னா என் இசை தப்பாயிடும். அதனால, இலக்கணம் தேவை. அதுக்கப்புறம் வர்ற கல்பனைலதான் தனித் தன்மை இருக்கும். வேற வேற பாணி வரும். மதுரை மணி ஸ்டைல் வேற. செம்மங்குடி ஸ்டைல் வேற. ஒரே ஒரு தோடி ராகத்தை எல்லாப் பாடகர்களும் வேற வேற மாதிரிப் பாடுவாங்க. அதுலதானே அழகு இருக்கு? அந்த வெரைட்டி இல்லன்னா, ‘ஓ மதுரை மணி மாதிரியே ஜி.என்.பி. பாடறார். இதை ஏன் கேக்கணும்?’னு நினைச்சிடுவாங்க. இதெல்லாமே வேற வேற எக்ஸ்பீரியன்ஸ்தானே! அது இல்லன்னா, தனித்தன்மையோ நம்மளோட ஆளுமையோ இருக்காது.

கேள்வி: அடுத்த தலைமுறைக்கு நீங்க என்ன சொல்லணும்னு நினைக்கிறீங்க?

அருணா சாய்ராம்: அடுத்த தலைமுறை ரொம்ப பிரில்லியண்ட்டா, இண்டலிஜெண்ட்டா இருக்காங்க. அவங்களுக்கே எல்லாம் தெரியறது. புதுசா எதுவும் சொல்லித் தெரியவேண்டியதில்லன்னுதான் நினைக்கிறேன்.

நேர்காணல் - பாலு சத்யா

(மே 2009 அம்ருதா மாத இதழில் வெளியான நேர்காணல்)


0

5 comments:

Boston Bala said...

Thanks!

ஓகை said...

நன்றி.

நடராஜன்.

Kasu Sobhana said...

நன்றாக உள்ளது. பாராட்டுகள்.
மேலும் பல நேர்காணல்கள் - இது போன்று வலை இடுங்கள்!

mohanasundaram said...

பேட்டி அவரது பாடல்களைப்போலவே இருந்தது. நன்றி.
ந.மோகனசுந்தரம். வேந்தன்பட்டி.

வல்லிசிம்ஹன் said...

வெகு யதார்த்தம். அருணா சாயிராம் நேர்ல பேசுகிற மாதிரி இருந்தது பேட்டி.
அவங்க பாட்டினாழம் பேட்டியிலும் இருந்தது. மிகவும் நன்றி.