Monday, December 27, 2010

பசும்பொன் நினைவுகள் - 3



காந்தி மீனா அம்மையார், தேவரைப் பற்றி நிறையச் சொன்னார். பசும்பொன்னில் இருந்து கிளம்பியபோது, மனமெங்கும் முத்துராமலிங்க தேவர் நிறைந்திருந்தார். எவ்வளவோ படித்திருந்தாலும், நிறையபேர் சொன்னதைக் கேட்கக் கேட்க அவரைப் பற்றிய அற்புதமான ஒரு பிம்பம் உள்ளே பதிந்து போயிருந்தது.

மெயின் ரோடு வரைக்கும் நடந்து போகத்தான் நான் நினைத்தேன். வழியில் வயதானவர்கள் யாராவது இருந்தால், அவர்களோடு தேவரைப் பற்றி இன்னும் கொஞ்சம் கேட்கலாமே என்று ஆசை. சரியாக ஒரு ஷேர் ஆட்டோ வந்து நின்றது. வெங்கிடு, ‘அண்ணே! ரொம்பப் பசிக்குது. இதுல போயிடலாம்’ என்று சொன்னான். என்னால் மறுக்க முடியவில்லை.

கமுதி பஸ் ஸ்டாண்டுக்கு வந்து சேர்ந்தோம். ‘ஏதாவது நல்ல ஓட்டலா சொல்லுங்க!’ என்று மாரியிடம் சொன்னேன்.

‘புரோட்டா சாப்பிடலாமா சார்?’ என்று மாரி கேட்டார். நான் அதைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அந்த ஊரில் அதுதான் நன்றாக இருக்கும் போல.

‘இல்ல, இல்ல. நீங்க வேணும்னா சாப்பிடுங்க. நான் சைவம். சாப்பாடுதான் வேணும்’ என்று சொல்லிவிட்டு, வெங்கிடைப் பார்த்தேன்.

‘அண்ணே! நானும் நான்வெஜ் சாப்பிடமாட்டேன். புரட்டாசி மாசம்ல?’ என்றான்.

பஸ் ஸ்டாண்டுக்கு எதிரே இருந்த சைவ ஓட்டலுக்கு அழைத்துப் போனார் மாரி. அதை ஓட்டல் என்று சொல்லக்கூடாது. கேண்டீன் என்றுகூடச் சொல்ல முடியுமா தெரியவில்லை.

வெளியே போர்டு மாட்டியிருந்தாலும், கூரை போட்ட சிறிய ஓட்டல். ஸ்கூல் டெஸ்க் போல நீளமாக ஒன்றை நடுவில் போட்டிருந்தார்கள். இருபுறமும் மர பெஞ்சுகள். சுவரோரத்தில் அதே போல இன்னொரு டெஸ்க், பெஞ்ச். மொத்தம் பதினைந்து பேர் ஒரே நேரத்தில் சாப்பிடலாம். நாங்கள் போனபோது ஆறு, பேர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். மதியம் அங்கே சாப்பாடு மட்டும்தானாம். டிபன் இல்லை என்றார்கள்.

மூவரும் ஒரு பெஞ்சில் அமர்ந்தோம்.

கல்லாவில் இருந்தவர், ‘அவங்களுக்கு இலை போடுங்க!’ என்று கை காட்டினார். நகர ஓட்டல்களைப் போல அளவுச் சாப்பாடெல்லாம் கிடையாது. அன்லிமிடெட். ஆனால், என்னாலும் வெங்கிடாலும் சரியாகச் சாப்பிட முடியவில்லை. கிராமத்துக்கே உரித்தான இயல்பான சமையல். வாசனாதி வகையறா கொஞ்சமும் சேர்க்காத பதார்த்தங்கள்.

புளி, உப்பு, மிளகாய்த்தூள், போன்ற அடிப்படைப் பொருட்களை மட்டுமே கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு. சம்பந்தமில்லாமல், ‘இயற்கை உணவு’ என்கிற பெயரில், காசு பிடுங்கும் சென்னை உணவகம் ஒன்று என் நினைவுக்கு வந்தது. ஆயுர்வேத சிகிச்சைக்குப் போனவர்களுக்குத் தெரியும். அவர்கள் கொடுக்கும் உணவைத்தான் நாம் சாப்பிட முடியும். உப்போ, புளிப்போ அளவோடு சேர்த்திருப்பார்கள். அது போல இருந்தது சாப்பாடு.


நானும் வெங்கிடும் எழுந்தோம். மாரி சாப்பிட்டுக்கொண்டிருந்தார். நான் கை கழுவும்போது கேட்டேன்: ‘என்னா தம்பி! புரோட்டாவே சாப்பிட்டிருக்கலாம் இல்ல?’

‘இல்லண்ணே. சாப்பாடு நல்லாத்தான் இருந்துச்சு. என்னாலதான் சாப்பிட முடியல’ என்றான். சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தோம். இதற்கு மேலும் மாரி சாரை காத்திருக்கச் சொல்வது சரியாகப்படவில்லை. அவர் நேர் எதிர்த் திசையில் இருக்கும் வேறு ஒரு கிராமத்துக்குச் செல்லவேண்டியவர். நன்றி சொல்லி அனுப்பி வைத்தோம்.

‘மதுரைக்கே போயிடலாமா தம்பி?’

‘எதுக்குண்ணே? வந்த வழியிலேயே போயிடலாம்’ எங்கேயோ பார்த்தபடி சொன்னான் வெங்கிடு.

ஒரு தனியார் பஸ் வந்து நின்றது. காத்திருந்தது போல அடித்துப் பிடித்து ஏறியது கூட்டம். இரண்டு மணி வெயில் சுட்டெரித்தது. நாங்கள் கடைசியாக ஏறினோம். பின் சீட் காலியாக இருந்தது. உட்காரப் போனபோது கண்டக்டர் தம்பி திரும்பிப் பார்த்தார். நிச்சயம் அவருக்கு வெங்கிடைவிட இரண்டு வயது குறைவாகத்தான் இருக்கும்.

‘எங்க சார் போகணும்?’

‘மானாமதுரை.’

‘பஸ் கெளம்புறப்போ ஏறுங்க.’

‘சீட்டு காலியாத்தானே இருக்கு?’ என்று கேட்டான் வெங்கிடு.

‘அங்... மதுரை வரைக்கும் லாங்கா... போறவுகளுக்கு சீட் வேணாமா. எறங்குங்க சார்.’

வெறுப்போடு இறங்கினோம். அந்த கண்டக்டர் டிக்கெட் போட்டுக்கொண்டிருந்தார். கீழே இறங்கி பஸ் ஸ்டாண்டில் இருந்த சிறிய ஓட்டல் வாசலில், புரோட்டா போடுவதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம்.

அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு வேறு பஸ் இல்லை என்பது விசாரித்ததில் தெரிந்தது. ஓரமாக நின்றிருந்த டிரைவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

‘ஏன் சார்? சீட்டு காலியாத்தானே இருக்கு. அந்த கண்டக்டர் அப்பிடி வெரட்டுறாரே?’

‘அவன் லூஸு சார். அப்பிடித்தான் பேசுவான். கெளம்பறப்போ ஏறுங்க.’ இப்படிச் சொல்லிவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டார் டிரைவர்.

வெயில். வியர்வை. கசகசப்பு. நிழலுக்கும் பஸ் கூடாரத்துக்குள் ஒதுங்க முடியவில்லை. பெண்கள், குழந்தைகள், என்று குடும்பம் குடும்பமாக கிராமத்து மனிதர்கள்.

பக்கத்து ஊர்களுக்குச் செல்லும் டவுன்பஸ் உள்ளே நுழைந்தால், அதைப் பிடிக்க ஓடினார்கள். கொஞ்சம் இடம் காலியாவது போல இருந்தாலும் இன்னொரு கும்பல் அதைப் பிடித்துக்கொண்டது.

வரிசையாக பலகாரக் கடைகள் இருந்தன. ஜிலேபியை சின்னதாகச் சுடுகிற வழக்கம் அந்தப் பக்கத்தில் இல்லை போல. நல்ல அகலமான தட்டில் பெரியதாகச் சுற்றி, இரண்டடி உயரத்துக்கு அடுக்கி வைத்திருந்தார்கள். எல்லா கடைகளிலும் அப்படித்தான் இருந்தது.

பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவரிடம் விசாரித்தேன். ‘அதுவா? இனிப்பு சேவு!’ என்று சொன்னார். பிறகு, என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு நகர்ந்து போனார்.

ஒரு கிராமத்து மனிதர் ஐந்துகிலோ காராசேவு வாங்குவதைப் பார்த்தேன். என் பார்வையைப் புரிந்துகொண்டவனாக வெங்கிடு சொன்னான். ‘அண்ணே! வியாபாரம் செய்யறதுக்கா இருக்கும்ணே. கிராமத்துல கடை வச்சிருப்பாரு.’

அதற்கு அடுத்த கடையில் ஒருவர் ‘நாலு கிலோ இனிப்பு சேவு!’ என்று சொன்னது எங்கள் காதிலும் விழுந்தது. வெங்கிடு பதில் சொல்லவில்லை. அவன் கவலையோடு மதுரை பஸ்ஸில் ஏறிக்கொண்டிருந்தவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். சீட்டுகள் நிரம்பியிருந்தன. மனிதர்கள் உள்ளே நடைபாதையில் நிற்க ஆரம்பித்திருந்தார்கள்.


நாங்கள் எதிர்பார்த்ததுதான் நடந்தது. பிதுங்கப் பிதுங்கக் கூட்டம். படிக்கட்டில் தொங்கிக்கொண்டுதான் போயாகவேண்டும். அடுத்த பஸ்சில் போகலாம் என்றால், அது எப்போது வரும் என்றும் தெரியாது. பஸ் கிளம்பியபோது தாவி ஏறினோம்.

மூச்சு விட முடியவில்லை. ‘ரூட் பஸ்’ என்று பெயர்தானே தவிர, ஒவ்வொரு ஊரிலும், ஊர் விலக்கிலும் நின்று நின்று சென்றது. நிறுத்தம் தோறும் கண்டக்டர் பின் வாசலில் இறங்கி, முன் வாசலுக்குப் போய் டிக்கெட் போடுவார். அல்லது, அங்கிருந்து இங்கு வருவார்.

ஒரு கட்டத்தில் பொறுக்க மாட்டாதவனாக கண்டக்டரிடம் கேட்டேன். ‘என்னாங்க! நிக்கிறதுக்கே இடத்தைக் காணோம். ஒவ்வொரு ஸ்டாப்லயும் ஆளுங்களை ஏத்திக்கிட்டே இருக்கீங்களே?’

அவர் முறைத்துப் பார்த்தார். ‘நீங்க என்னிக்கோ ஒரு நாளு வாறதுக்கே இப்பிடி அலுத்துக்குறீங்களே! நாங்க தெனோம் இப்பிடித்தான் போயாவணும். போலாம்... ரை!’

கமுதியில் இருந்து மானாமதுரைக்கு பயணம் நேரம், அதிகபட்சம் ஒரு மணி நேரம். நாங்கள் வந்து சேர இரண்டு மணி நேரம் ஆனது. நல்ல வேளையாக சிவகங்கைக்குப் போகிற பஸ் உடனே கிடைத்தது. சீட்டில் உட்கார்ந்ததும் வெங்கிடு எதுவும் பேசவில்லை. பேயறைந்தவன் போல இருந்தான். சார்ஜ் இல்லாத செல்போனை கையில் உருட்டிக்கொண்டிருந்தான்.

சிவகங்கையில் அரைமணி நேரம் காத்திருந்ததில், தஞ்சைக்குச் செல்வதற்கு நேரடி பஸ் கிடைத்தது. மின்னல் வீரனைப் போல் தாவி ஏறி, சீட்டைப் பிடித்தான் வெங்கிடு. மாலை ஐந்து மணிக்கு அப்படி ஒரு புழுக்கம். சட்டையைக் கழற்றி எறிந்துவிடலாமா என்று இருந்தது.

அந்த பசும்பொன் பயணத்தில் விதம்விதமான மனிதர்களைப் பார்த்த அனுபவம் கிடைத்தது. முன்னே பின்னே யார் என்று அறிமுகம் இல்லாத ஒரு பெண்ணிடம், மூச்சுவிடாமல் ‘சளசள’வென்று பேசியபடி வந்த ஒல்லி மனிதர். ஜுரம் தகிக்க, பேரக் குழந்தையை தூக்கி வந்த பாட்டி. யார் இடம் கொடுத்தாலும் பாட்டியின் தோளைவிட்டு இறங்காமல் அடம் பிடித்தது அந்தக் குழந்தை. சூழலுக்குக் கொஞ்சமும் பொருந்தாத குல்லாவும் முழங்காலைத் தாண்டும் ஜிப்பாவும் அணிந்து வந்த இஸ்லாமிய இளைஞர்கள் நான்குபேர். குசுகுசு பேச்சும், நமட்டுச் சிரிப்புமாக வந்த புதிதாகத் திருமணமான தம்பதி. ஏறி உட்கார்ந்ததில் இருந்து, இறங்குவரை பார்வையை அப்படி இப்படித் திருப்பாமல், பேப்பர் வரி விளம்பரத்தைக்கூட விடாமல் படித்த கண்ணாடிக்காரர். கண்டக்டருடன் சண்டைபோட்ட திருநங்கை... இப்படி நிறைய.

அந்த மனிதர்களை நிச்சயம் வெங்கிடுவும் மறந்திருக்கமாட்டான் என்றே தோன்றுகிறது.

திருப்பத்தூருக்கு அருகே வரும்போதே மழை பிடித்துக்கொண்டது. நாங்கள் தஞ்சாவூர் பெரிய பஸ் ஸ்டாண்டில் இறங்கி, கீழ வாசலுக்கு பஸ் பிடித்து வந்து சேர்ந்தபோது மணி பத்துக்கு மேல் இருக்கும். கடுமையான வேலை பார்த்து வந்ததுபோல அப்படி ஒரு சோர்வு. வெங்கிடுவுக்கும் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன்.

‘என்னா தம்பி! டிரிப் எப்பிடி இருந்துச்சு?’

‘நல்லா இருந்துச்சுண்ணே!’

‘லட்ச ரூவா குடுத்தாகூட இப்பிடி ஒரு அனுபவம் கிடைக்காதுல்ல?’

வெங்கிடு என்னைப் பார்த்தான். முறைக்கிறானா, சிரிக்கிறானா என்று தெரியவில்லை. இந்தக் காலத்து இளவட்டங்கள் அப்படித்தான்.

No comments: