Saturday, December 18, 2010

கேர்ள்ஸ் ஹாஸ்டல்

அன்புள்ள அத்தைக்கும்
அருமை மாமாவுக்கும்
அம்சவேணி எழுதுவது.

நலம் நாடுவதும் அதுவே.

வண்ணக் கனவு தரும்
வளமான வாழ்க்கை தரும்
வருங்காலம் கருதித்தான்
என்னை
விடுதியில் விட்டீர்கள்.

வருங்காலம் கிடக்கட்டும்
வாழ்க்கை நசிந்து போகுமென்ற
நடுக்கம் வந்துவிட்டதெனக்கு.

அரசினர் விடுதி
அப்படித்தான் இருக்கும் -
என ஆயிரம் சொல்லலாம் நீங்கள்!

அந்த ஆயிரமும் தாண்டி
அநியாயம் நடப்பதைத்தான்
அங்கீகரிக்க முடியவில்லை.

மூட்டைப் பூச்சியை
நசுக்கி நசுக்கி
விரல்முனை
தேய்ந்துவிட்டது.
அது பரவாயில்லை.

முதல் நாள் இரவின்
தூக்கம் போனதில்
முதல் பீரியடிலேயே
உறக்கம் வந்துவிடுகிறது.
‘மூதேவி!’ என்று
திட்டுகிறார் ஆசிரியை.
அதுவும் பிரச்னையில்லை.

முடை நாற்றம் வீசும்
புழுத்துப் போன
புழுங்கரிசிச் சோற்றை
வாயில் வைத்தாலே
வாந்தி வருகிறது.
அதையும் நான்
குறையாகச் சொல்லவில்லை.

ஐநூறு மாணவிகளுக்கு
ஐந்து கழிப்பறைகள்
அசுத்தச் சகதி நினைத்தால்
அசூயையாக இருக்கிறது.
அதையும் நான்
சகித்துக்கொள்வேன்.
சங்கடங்கள் ஏதுமில்லை.

விடுதியில் சேர்ந்த
அடுத்த தினமே
சோப்பு சீப்பு
பவுடர் ஸ்டிக்கர் பொட்டு... என
நீங்கள் வாங்கிக் கொடுத்துப் போன
எதையும் காணவில்லை.
இதில் ரேவதி
எனக்குப் பிரியமாய்க் கொடுத்த
வண்ணத்துப்பூச்சி வடிவ ஹேர் க்ளிப்பும் அடக்கம்.
அதற்கும் நான் வருந்தவில்லை.

ஆதரவற்ற
முகம் தெரியாத
அந்தச் சகோதரி
என்னைக் கேட்டிருந்தால்
கொடுத்திருப்பேன்.

அவள் திருடவேண்டிய
நிர்ப்பந்தம் நேர்ந்திருக்காது.
அதுகூட பிரச்னையில்லை.

மிகச் சிறிய அறையில்
புழுக்களைப் போல
எட்டுப் பெண்கள்
சுருண்டு கிடக்கிறோம்.
அதுவா பிரச்னை. இல்லை.

பிரச்னை பெரியதாகயிருக்கிறது.

நேற்று ஞாயிற்றுக் கிழமை
அடுத்த அறை வளர்மதியை
வார்டன் அழைத்துப் போனார்.

மல்லிகை மலராகப் போனவள்
மரவட்டையாக சுருங்கிப் போய்த் திரும்பி வந்தாள்.

உதட்டில் காயம்
உடம்பெல்லாம் கீறல்கள்
உசுப்பிக் கேட்டாலும்
ஊமையாக நிற்கிறாள்.
உறுத்து விழிக்கிறாள்
குலுங்கி அழுகிறாள்.

புரியாத வயதா எனக்கு?
அவளும் ப்ளஸ் ஒன்
நானும் ப்ளஸ் ஒன்.

எங்கே, யாருக்கு, எதற்கு
எதுவும் தெரியாது எனக்கு.

இது ஞாயிறு தோறும்
தொடர்கிற சங்கதியாகிவிட்டது.

எதிர்த்துக் கேட்டால்
ஏச்சுப் பேச்சு.
விடுதியை விட்டு
உடனே நீக்கம்.

அடுத்த ஞாயிறை நினைத்தால்
நடுக்கமாயிருக்கிறது.

அடுத்த பலிகடான் நான்தானோ
அச்சமாயிருக்கிறது.

அன்புள்ள மாமா!
அதற்குள் வந்து
அழைத்துப் போங்கள் என்னை!

அப்பா அம்மா
இல்லாத எனக்கு
நீங்கள்தானே எல்லாம்!

அவசியம் வாங்க!

நம்பிக்கையோடு
அம்சவேணி

பி.கு. எதிர்வீட்டுப் பூனை குட்டி போட்டுடுச்சா?

No comments: