Friday, March 11, 2011

கண்ணாடி இலை

மூன்று மணிக்கு எழுந்து
மடி ஆசாரத்துக்கு மாசில்லாமல்
மாமனார் திவசத்துக்காக
உயிர் கரைய வேலை.

என்ன கோபமோ
மாமனார் காகமாக
வந்து பிண்டத்தைக்
கொத்தித் தின்ன
அதிக நேரம் எடுத்துக்கொண்டார்.

‘சமையல் பிரமாதம்!’
சம்பாவணை வாங்கிய பிராமணர்
வெற்றிலைச் சிவப்புத் தெறிக்க
வாய்நிறையச் சொன்னார்.

பிராமணாளுக்குப் பிறகு
ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் போஜனம்.
பரிமாறும்போது இடுப்பில் பிடித்துக்கொள்ள
பல்லைக் கடித்து சமாளிப்பு.

சாப்பிட்ட இடத்தை
நீர் தெளித்து மெழுகி
மதியம் மூன்றரை மணிக்கு
கடைசியாகச் சாப்பிட அமர்ந்தால்
உணவைப் பார்த்தாலே உமட்டல்.

காலையிலிருந்து காபிகூட
பல்லில் படாதது நினைவுக்கு வர
கொஞ்சமாக உணவு கொறிப்பு.

சாப்பிட்ட இலைகளை
கூடையில் போட்டு
அடுத்த தெரு
பசுமாட்டுக்குக் கொடுக்கும்போது
மாமி கேட்டாள்:
‘கோமதி! யாருக்கு திவசம்?’

‘எனக்குத்தான்.’

(இந்த வார கல்கியில் வெளியான என் கவிதை)

1 comment:

ananda said...

திவசம் கொடுக்கிறவங்களுக்குதான் எவ்வளவு கஷ்டம், நல்ல கவிதை வாழ்த்துக்கள் பாலு தேவரே