Tuesday, December 21, 2010

பசும்பொன் நினைவுகள் - 1



தேவர் வாழ்க்கை எந்த அளவுக்கு சுவாரஸ்யமோ அதில் கொஞ்சம்கூட குறையாமல் இருந்தது அவர் வாழ்ந்த பசும்பொனுக்கு நான் போய் வந்த அனுபவம்.

தமிழில் பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறுப் புத்தகங்கள் நிறைய கிடைக்கின்றன. அதோடு அவர் பேசிய உரைகள், எழுதிய கட்டுரைகள், அவர் குறித்த சர்ச்சைகள் எல்லாமே நூல் வடிவில் இருக்கின்றன, குறிப்பாக சென்னை தேவநேயப் பாவாணர் நூலகத்திலும், கன்னிமாராவிலும்.

புத்தகம் எழுதுகிற அளவுக்கு போதும், போதும் என்கிற அளவுக்குத் தகவல்கள் கிடைத்துவிட்டாலும், ஒரு முறை பசும்பொன்னுக்குப் போய்வரவேண்டும் என்கிற ஆசை உந்தித் தள்ளிக்கொண்டே இருந்தது. உறவினர் ஒருவர் வீட்டுத் திருமணத்தை முன்னிட்டு தஞ்சாவூர் போகவேண்டியிருந்தது. அப்படியே பசும்பொன்னுக்கும் ஒரு டிரிப் அடித்துவிடலாம் என்று முடிவு செய்து கிளம்பினேன்.

தஞ்சாவூரில் மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு நான் மட்டும் கமுதிக்கும் பசும்பொன்னுக்கும் போய்வருவது என்று திட்டம். ஆனால், தனியாகப் போகக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. பேச்சுத் துணைக்காவது ஒருவர் இருந்தால்தானே நன்றாக இருக்கும்?

வெங்கிடு என்கிற வெங்கடேஷ், மனைவி வழியில் சொந்தம். தஞ்சாவூரில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தான். வகையாக மாட்டினான். ‘தம்பி! காலைல கெளம்பிப் போய் சாயந்தரம் வந்துடலாம். கூட வாயேன்!’

‘கண்டிப்பா வர்றேண்ணே!’ என்று நம்பிக்கை தந்தான். தஞ்சையில் இருந்து கமுதிக்கு நேரடி பஸ் ஒன்றுதான் இருந்தது. அதுவும் ஒன்பது மணிக்கு மேல்தான் கிளம்பும் என்பதால், அது வசதிப் படாது என்று முடிவெடுத்தேன்.

மைத்துனர் நடராஜன், ‘சிவகங்கைக்கு நிறையா பஸ் இருக்கு. அங்கருந்து கமுதிக்குப் போய்விடலாம்’ என்று நம்பிக்கையாகச் சொன்னார்.

அதிகாலை நான்கரை மணிக்கு எழுந்து, ஐந்து மணிக்கு கீழ வாசல் பேருந்து நிறுத்தத்தில் நானும் வெங்கிடுவும் முதல் பஸ்ஸைப் பிடித்தோம், தஞ்சாவூர் பெரிய பஸ் ஸ்டாண்டுக்கு.

பஸ் ஸ்டாண்டில் சூடாக ஒரு டீயை அடித்துவிட்டு, உள்ளே போனோம். சிவகங்கைக்கு நேரடி பஸ் ஒன்பது மணிக்கு மேல்தான் என்றார்கள்.

‘திருப்பத்தூருக்குப் போயிடுங்க. அங்கருந்து சிவகங்கைக்கு நெறையா பஸ் இருக்கு’ என்றார் ஒரு கண்டக்டர். நான் வெங்கிடுவுடன் பேச்சுக் கொடுத்தேன். கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் என்று ரொம்ப நேரம் தயங்கிக் கொண்டிருந்தவன், கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு வரும்போது திருப்பத்தூர் வந்துவிட்டிருந்தது.

திருப்பத்தூரிலேயே காலை டிபனை முடித்துவிட்டு, அங்கிருந்து சிவஙகங்கை. இந்த இடத்தில் தெக்கத்தி சீமைக்காரர்களின் பரந்த மனசை சொல்லியே ஆகவேண்டும். கை கழுவிட்டு சாப்பிட உட்கார்ந்ததும், பெரிய சாப்பாட்டு இலையாகக் கொண்டு வந்து போடுகிறார்கள்.

‘இலைக்கும் சேத்து பில்லைப் போட்டுறப் போறாங்கண்ணே!’ என்று கிசுகிசுத்தான் வெங்கிடு.

பூரி ஆர்டர் செய்தோம். ஒரு செட் பூரிக்கு துக்கிணியூண்டு கிண்ணத்தில் உருளைக் கிழங்கைக் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். சப்ளை செய்பவர் இரண்டு பூரிகளை இலையில் போட்டுவிட்டு, வாளியில் கரண்டியைவிட்டு,(பெரிய சைஸ்) அள்ளி அள்ளி இலையில் பூரிக் கிழங்கைப் போட்டார். மேலும் இரண்டு பூரி சாப்பிடுகிற அளவுக்குக் கிழங்கு. காபி கேட்டால், மிகப் பெரிய டம்ளர் வட்டைக் கப் சகிதமாக வந்திறங்கியது. அபார ருசி. மிக மிகச் சாதாரணமான பில் தொகை.

அங்கேயும் ஒரு கண்டக்டர் சொன்னார். ‘கமுதிக்கெல்லாம் நேரடியா பஸ் இல்லைங்க. மானாமதுரை போயிடுங்க.’ வேறு வழி? அங்கிருந்து மானாமதுரை போனோம்.

மானாமதுரை பஸ் பிடித்தோம். என் அலுவலகத்தில் மார்கெட்டிங் பிரிவில் இருக்கும் பாண்டியன், தன் சகோதரர் மாரி என்பவரின் மொபைல் நம்பரைக் கொடுத்திருந்தார். அவர், கமுதியில் இருந்து எங்களை பசும்பொன்னுக்கு அழைத்துச் செல்வதாக ஏற்பாடு.

அரைமணி நேரத்துக்கு ஒரு முறை செல்போனில் அழைத்தபடி இருந்தார் மாரி.

‘எங்க இருக்கீங்க?’

‘இப்பத்தான் சிவகங்கைக்குப் போய்க்கிட்டு இருக்கோம்.’

‘எங்க வந்துக்கிட்டு இருக்கீங்க?’

‘மானாமதுரைகிட்ட வந்துட்டோம்.’

மானாமதுரை வரைக்கும்கூட அதிகம் பிரச்னை இல்லாமல் வந்து சேர்ந்துவிட்டோம். அங்கிருந்து கமுதிக்குப் போன அனுபவம் இருக்கிறதே அடடா! நான் மறந்தாலும் வெங்கிடு மறக்கமாட்டான்.

வெங்கிடு பரபரப்பான இளைஞன். தஞ்சாவூரிலேயே பைக்கில் 80 கிலோ மீட்டருக்குக் குறையாத வேகத்தில் பறப்பான் என்று கேள்வி. ஓர் இடத்தில் அவனை சும்மா உட்கார வைப்பதே பெரிய காரியம்.

செல்போனில் யார் யாருக்கோ மெசேஜ் அனுப்பியபடியும், ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடியும் வந்தான். வெளியேயும் சுவாரஸ்யமான காட்சிகள் ஒன்றும் இல்லை.

சிவகங்கையை நெருங்கும்போதே கள்ளிச்செடிகளும் கருவேல முள்செடிகளுமாகத்தான் கண்ணுக்குத் தெரிந்தன. ஆங்காங்கே இருந்த சின்னச் சின்னக் குட்டைகளில்கூட செம்மண் ஏறிய கலங்கலான தண்ணீர். மழை பெய்ததால்தான் அந்த அளவுக்காவது தண்ணீர் இருந்தது. இல்லையென்றால் வறண்ட பொட்டல்காடாகத்தான் அந்தக் குட்டைகள் காட்சியளித்திருக்கும்.

மானாமதுரையை நெருங்கும்போது வெங்கிடுவின் முகம் மாறியிருந்தது.

‘என்ன தம்பி! பதில் மெசேஜ் வரலியா?’

‘இல்லண்ணே! செல்போன்ல சார்ஜ் தீர்ந்துபோயிடுச்சு!’

-தொடரும்

2 comments:

வித்யாஷ‌ங்கர் said...

continue it ifollow u-durai@vidyasankar

பாலு சத்யா said...

நன்றி சார். நன்றாக இருக்கிறீர்களா?