Friday, September 19, 2008

பழைய காலண்டரில் இரு தினங்கள் - பாலு சத்யா

தினம் - 1

யாசகம் கேட்பதற்கு சற்றும் குறைந்ததில்லை, வேலை கேட்டு பரிந்துரைக்காக ஒருவர் முன் நிற்கிற தருணங்கள். ஒவ்வொரு கணமும், உலகின் ஏதோ ஒரு மூலையில் அப்படியான ஒரு நிகழ்வு நடந்துகொண்டே இருக்கிறது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு முன்னால் அப்படி ஏன் நிற்க வேண்டும் என்பது இன்றைக்கும் விளங்கிக்கொள்ள முடியாத சோகம்.

சென்னை சி.ஐ.டி. நகரில் இருந்தது ஜெகதீசன் சார் வீடு. அவரைப் பார்த்தால் நிச்சயம் வேலை கிடைக்கும் என்று கிருஷ்ணமூர்த்தி சொல்லியிருந்தார். காலை எட்டு மணிக்கெல்லாம் ஒரு பெரிய மனிதர் வீட்டைவிட்டுக் கிளம்பியிருக்கமாட்டார் என்கிற நம்பிக்கையில் அவர் வீட்டுக்குப் போனேன்.கேட்டில் அழைப்புமணி இல்லை. அது உட்புற வாசல் நிலைப்படியருகே இருந்தது. கேட்டுக்கும் உட்புற வாசலுக்கும் நடுவில் ஒரு நாய் படுத்துக் கிடந்தது.

நான் இரண்டு மூன்று முறை “சார்! சார்!” என்று குரல் கொடுத்துப் பார்த்தேன். பதிலில்லை.

நாய் சங்கிலியில் கட்டப்பட்டிருப்பதை மறுபடியும் ஒருமுறை உறுதி செய்துகொண்டு, கேட்டைத் திறந்து உள்ளே போனேன். அதுவரை பேசாமல் படுத்துக்கிடந்த நாய் பயங்கரமாகக் குரைத்தது. நாய் குரைக்கும் சத்தம் கேட்டு ஒரு அம்மாள் வெளியே வந்தார். நாற்பதைக் கடந்துவிட்ட வயதைக் குறைத்துக் காட்ட, மிகவும் பிரயாசைப்படுபவர் என்பது பார்த்தாலே தெரிந்தது.

“யாருப்பா?” விரோதியைப் பார்ப்பது போலப் பார்த்தார் அந்தப் பெண்மணி.

“சாரைப் பாக்கணும். நான் தாம்பரத்துலருந்து வரேன். ஒரு வேலை விஷயமா...”

“அவரு வெளியில போயிருக்காரு. திரும்பி வர்றதுக்கு ஒம்பது மணிக்கு மேல ஆவும்...”

சொல்லிவிட்டு என் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் அந்தப் பெண்மணி உள்ளே போய்விட்டார்.

நான் திகைத்துப் போனேன். இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா? அல்லது மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்களா? இப்படி நடந்துகொள்ள அந்தப் பெண்ணுக்குக் கற்றுக் கொடுத்தது யார்? ஒரு வேளை நகரம் குறித்துத் தொன்று தொட்டு இருந்து வரும் பிம்பம், மனிதர்கள் குறித்தான பயம் இப்படி வெளிப்படுகிறதா?

எவ்வளவு நேரமானாலும் ஜெகதீசன் சாரைப் பார்த்துவிடுவது என்ற முடிவோடு வெளியில் வந்து காத்திருந்தேன். பசித்தது. அவர் வருவதற்குள் ஒரு டீயாவது குடித்துவிடலாம் என்று பக்கத்திலிருந்த டீக்கடைக்குப் போனேன். ஒரு டீயும் வடையும் சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வந்தேன்.

வீடு அமைதியாக இருந்தது. நாய் பழைய இடத்தில் படுத்துக்கிடந்தது. நான் சுளீரென்று விழுந்த காலை வெயிலைப் பொருட்படுத்தாமல் காத்திருந்தேன்.

மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது. ஜெகதீசன் சார் வரவில்லை. ஒன்பதே முக்கால் வரைக்கும் வரவில்லை.

‘அவர் வந்திருப்பாரோ!' இந்த எண்ணம் தோன்றியதும் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. அதற்கும் சாத்தியம் இருந்தது. ஒருவேளை நான் டீ குடிக்கப் போயிருந்த நேரத்தில் அவர் வந்திருக்கலாம்.

கார்? அவரை இறக்கிவிட்டுவிட்டு வேறு வேலையாகப் போயிருக்கலாம். எனக்குத் தவிப்பு அதிகமானது. ஒரு முடிவோடு கேட்டைத் திறந்தேன். சங்கிலியிலிருந்து நாயை அவிழ்த்துவிட்டிருந்ததை நான் அதுவரை கவனிக்கவில்லை. என் குரல்வளையைக் கடிப்பது போல் பாய்ந்து வந்தது. குரைத்தபடி, முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கி என் மார்பு மீது வைத்தது. ‘உர்ர்...' என்று உறுமியது. என்னால் அலறக்கூட முடியவில்லை.

அந்த அம்மாள் வெளியே வந்தார்.

“ஏம்ப்பா! உனக்கு எத்தனை தடவை சொல்றது? அறிவு வேணாம்? நாய் இருக்குல்ல. இப்பிடி சடார்னு உள்ளே நுழையுறியே? போப்பா. அவரு இல்ல...”

அந்த அம்மாள் நாயைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனார். நான் தலை குனிந்தபடி வெளியே வந்தேன். அந்த அம்மாள்தான் நாயை அவிழ்த்துவிட்டிருக்கவேண்டும் என்று நினைக்கும்போதே உடம்பு நடுங்கியது.

0

தினம் - 2

சென்னை, வாழ்வின் குரூரப் பக்கங்களை எனக்குப் புரட்டிப் போட்ட வருடம் அது. ஜெகதீசன் சார் வீட்டுக்குப் போய்விட்டு வந்த பிறகு ஒடிந்து போயிருந்தேன். அடுத்து என்ன என்கிற கேள்வி சதா ஒலித்துக்கொண்டிருந்தது. என்ன செய்கிறோம் என்கிற பிரக்ஞையே இல்லாமல் திரிந்தேன். இலக்கில்லாமல் சுற்றிவிட்டு ஒரு கோயிலில் உட்கார்ந்திருந்தபோதுதான் உத்திரகுமாருக்கு ஃபோன் செய்யலாம் என்று தோன்றியது.

உத்திரா கேரளாவில் இருக்கும் அடிமாலியில் அப்போது இருந்தார். எல்லாவற்றையும் அவரிடம் கொட்டினேன். ஆறுதலாகப் பேசிவிட்டு அவர்தான் அந்த யோசனையைக் கூறினார்.

“மெட்ராஸை விட்டுட்டு வெளியில எங்கயாவது கொஞ்ச நாள் போய்ட்டு வாயேன்.”

எனக்கும் எங்கேயாவது போனால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால், எங்கே போவது? அவரே யோசனையும் சொன்னார்.

“ஒண்ணு பண்ணு. திருவண்ணாமலையில என் நண்பர்கள் சில பேரு இருக்காங்க. நாளான்னிக்கி கலை நிகழ்ச்சி மாதிரி ஒண்ணு நடத்தறாங்க. விடிய விடிய நடக்கும். போய்ட்டு வா. மனசுக்கு ஆறுதலா இருக்கும்” என்று சொல்லி, நண்பர்களின் பெயரையும் முகவரியையும் கொடுத்தார்.

நான் திருவண்ணாமலையில், பஸ்ஸிலிருந்து இறங்கியபோது இரவு இரண்டு மணி. உத்திரா சொல்லியிருந்த ‘பல்லவன் ஆர்ட்ஸ்' பூட்டிக் கிடந்தது.

‘இனி என்ன செய்வது?'

நான் திக்குத் தெரியாமல் நின்றுகொண்டிருந்தேன். பக்கத்திலிருந்த ஆட்டோ ஸ்டேண்டிலிருந்து ஒரு டிரைவர் இறங்கி வந்தார்.

“பல்லவன் ஆர்ட்ஸுக்கு வந்தீங்களா?”

“ஆமா.”

“அடடா! எல்லாரும் இப்பத்தான் போனாங்க. அட்ரஸ் தெரியுமா?”

“தெரியாது.”

“சரி. வாங்க!”

எங்கே கூப்பிடுகிறார், ஆட்டோவில் போக எவ்வளவு கேட்பார் என்று எதையும் யோசிக்காமல், அவர் பின்னால் போனேன். ஆட்டோ வளைந்து வளைந்து ஊரைத் தாண்டிப் போனது. எனக்கு பயமாக இருந்தது. இவர் எங்கே போகிறார்? வழியில் நிறுத்திக் கத்தியைக் காட்டினால் என்னிடம் கொடுப்பதற்குக்கூட ஒன்றுமில்லையே.

இருட்டைக் கிழித்துப் பார்க்க முயற்சித்து, தோற்றுப் போனது ஆட்டோவிப்ன் முன் விளக்கு வெளிச்சம். ஒரு வழியாக ஆட்டோ நின்றது. அது ஒரு சிறிய வீடு. ஆட்டோ டிரைவர் இறங்கி, அந்த வீட்டுக் கதவைத் தட்டினார்.

கன்னங்கரேலென்று இருட்டு நிறத்தில் ஒரு மனிதர் வெளியே வந்தார். அடர்த்தியான தாடி வேறு. கைலியை இறுக்கிக்கொண்டு, “யாரு?” என்று கேட்டார்.

“உங்களைப் பாக்கத்தான் வந்திருக்காரு. வரட்டா?” ஆட்டோ டிரைவர் காசுகூட வாங்காமல் திரும்ப, அந்த மனிதர் சொன்னார்.

“காலையில கொஞ்சம் வீட்டுக்கு வந்துட்டு போப்பா. வேலையிருக்கு.”

“சரி.”

ஆட்டோ கிளம்பிப் போனது.

அவர் சிரித்த முகமாக என் பக்கம் திரும்பினார்.

“சொல்லுங்க.”

“உத்திரா அனுப்பினாரு.”

அவ்வளவுதான். அதற்குப் பிறகு அவர் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. உள்ளே அழைத்துப் போனார்.

“சாப்பிட்டாச்சா?” என்று கேட்டார்.

நான் தலையசைத்தேன். ஒரு கட்டிலைக் காண்பித்தார். போர்வையும் தலையணையையும் கொண்டுவந்து கட்டிலில் போட்டார். ஒரு செம்பில் தண்ணீர் கொண்டுவந்து தலை மாட்டுக்கருகே இருந்த திண்டில் வைத்தார். டேபிள் ஃபேனின் காற்று நன்கு மேலே விழும்படி திருப்பி வைத்தார்.

“நல்லா தூங்குங்க. காலையில பேசிக்கலாம்.”

அவர் கட்டிலுக்கருகே தரையில் படுத்தார். உடனே தூங்கிப் போனார். அடுத்த நாள் காலையில்தான் அவருடைய பெயர்கூட எனக்குத் தெரியும்.

இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா? அல்லது இப்படித்தான் மனிதர்கள் இருப்பார்களா?

ஜூன் 2008ல் ஆனந்தவிகடனில் வெளியான என்னுடைய சிறுகதை.

1 comment:

ஜோதி said...

பழைய காலண்டரில் இரு தினங்கள் பாலு சத்யா தனக்கேஉரிய நடையில் பானியில் சொல்லியிருப்பது இது போன்றசம்பவங்களை எல்லோரையும் எழுததூண்டும்


வோர்டு வெறிபிகேஷெனை நீக்கவும்