Wednesday, December 22, 2010

பசும்பொன் நினைவுகள் - 2


தஞ்சாவூரில் இருந்து கமுதிக்கு நாங்கள் போன வழிதான் சிறந்தது என்று நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பது திரும்பி ஊருக்கு வந்தபோதுதான் எனக்குத் தெரிந்தது. நேராக மதுரைக்குப் போய், அங்கிருந்து கமுதிக்குப் போயிருக்கவேண்டும். பயணம் செய்யும் நேரம், டிக்கெட் கட்டணம் என்று எதை எதையோ யோசித்துத் தப்புக் கணக்குப் போட்டுவிட்டேன்.

மானாமதுரை பஸ் ஸ்டாண்டில் ஏதோ வேலை நடந்துகொண்டிருந்தது. புதிதாக சிமெண்ட் போடப்பட்ட தரை. உள்ளே மனிதர்களும் பிராணிகளும் நுழைந்துவிடாதபடிக்கு வாசலில் கற்களையும், செடிகளையும் மறித்துப் போட்டு வழியை அடைத்திருந்தார்கள். அங்கிருந்து மதுரைக்குப் போகிறவர்களும், கமுதி, ராமநாதபுரம் போகிறவர்களும் சாலையின் இருபுறமும் எதிரெதிரே கும்பலாக நின்றுகொண்டிருந்தார்கள்.

மாரி போன் செய்தார். கமுதி பஸ் ஸ்டாண்டில் இருப்பதாகச் சொன்னார்.

‘வர்ற வழியிலதான் பசும்பொன் இருக்கு. அங்கேயே இறங்கிடுறீங்களா? நான் வந்துர்றேன்’ என்றவர், என்ன நினைத்தாரோ, ‘வேணாம். கமுதிக்கே வந்துடுங்க!’ என்று சொல்லிவிட்டார்.

‘அடுத்த பஸ்ஸுல வந்துர்றோம்.’

மதுரையிலிருந்து கமுதிக்குப் போகிற பஸ் ஒன்று வந்து நின்றது. வைக்கோலைப் போட்டு அமுக்குவது போல மக்கள் தங்களை அதில் திணித்துக்கொண்டிருந்தார்கள். ஓர் ஆள்கூட இறங்குவதாகத் தெரியவில்லை. ஏறுவதற்குக் கிட்டத்தட்ட ஏழெட்டு பேர் காத்திருந்தோம்.

நான் வெங்கிடைப் பார்த்தேன். ‘ஏறிடலாம்ணே! அடுத்த பஸ் வர்றதுக்கு அரைமணி நேரம் ஆகுமாம்.’

‘நிறையா எடம் இருக்கு. உள்ள வாங்கப்பு!’ என்று குரல் கொடுத்துக்கொண்டிருந்தார் கண்டக்டர். இருவரும் ஏறினோம். கொஞ்சம் கொஞ்சமாக வழி ஏற்படுத்திக்கொண்டு, பஸ்ஸின் மத்திய பகுதிக்கு வந்து சேர்ந்தோம்.

கைக் குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு ஒரு பெண்மணி நின்றுகொண்டிருந்தார். கறுப்பாக இருந்தாலும் களையாக இருந்த அந்தக் குழந்தை கண்ணை உருட்டி, உருட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது. வெங்கிடு அதைப் பார்த்து சினேகமாக சிரிக்க, அது முகத்தைத் திருப்பிக்கொண்டது.

அது ஒரு தனியார் பஸ். அகலம் அதிகமில்லாதது. நடுவில் ஓர் ஆள் மட்டுமே நடந்து போக இருக்கிற நடைபாதையில் இரண்டு இரண்டு பேராக நெருக்கியடித்து நின்றுகொண்டிருந்தோம். நின்று பயணம் செய்வது பரவாயில்லை. முழுப் பாதத்தையும் ஊன்றக்கூட வழியில்லை. ஒரு கால், அல்லது இன்னொரு கால். அல்லது இரண்டு நுனிக் கால்கள். அதுதான் பிரச்னையாக இருந்தது. இரண்டு கையையும் மேலே தூக்கிக் கம்பியை இறுகப் பிடிக்கவேண்டியிருந்தது. பஸ், மேடும் பள்ளமுமான சாலையில் குலுங்கிக் குலுங்கி விரைந்துகொண்டிருந்தது.

பஸ் கிளம்பிய கொஞ்ச நேரத்தில், நெரிசலையும் பெரிய மனிதர்கள் விடும் மூச்சுக் காற்றையும் தாங்க மாட்டாமல் குழந்தை கதற ஆரம்பித்தது. கண்டக்டர் டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார்.

‘எங்கம்மா போகணும்?’

‘கமுதி.’

உட்கார்ந்திருப்பவர்களில் யாராவது அந்தக் குழந்தையை வாங்கி வைத்துக்கொள்ள மாட்டார்களா என்று எனக்கு இருந்தது. அவரவருக்கு அவரவர் கவலை. ஜெயம்ரவி நடித்த ஏதோ ஒரு படம் டி.வி.டி. திரையில் ஓடிக்கொண்டிருக்க, தலையை எக்கிப் பார்த்து மெய்மறந்து போயிருந்தார்கள். சிலருக்கு படம் பார்க்க முடியாமல், நின்று கொண்டிருப்பவர்களின் தலை மறைக்கிற சங்கடம்.

பார்த்திபனூர், அபிராமம் என வழியில் இருக்கும் எந்த ஊரிலும் ஜனம் இறங்கவில்லை. ஏறிக்கொண்டே இருந்தது.

நாங்கள் கமுதி வந்து சேர்ந்தபோது மணி பதினொன்றைத் தாண்டி இருந்தது. செல்போனில் தொடர்புகொண்டதும் அடையாளம் கண்டுகொண்டு கிட்டே வந்தார் மாரி. கொஞ்ச நேரம் பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொண்டு பேசிக்கொண்டிருந்தோம்.

அங்கிருந்து ஒரு ஷேர் ஆட்டோ பிடித்து பசும்பொன் கிளம்பினோம். வழியெல்லாம் மாரி தேவரைப் பற்றிப் பேசியபடி வந்தார்.

‘தேவரய்யா ஆரம்ப காலத்துல குதிரைலதான் இந்த வழியாப் போவாங்க. அதுக்கப்புறம் வில்வண்டி ஒண்ணு வச்சிருந்தாங்க. அதுல போவாங்க. இந்தா இருக்குல்ல இந்த மரம். இது மேல நின்னுக்கிட்டுத்தான் ரெண்டு மூணு பேரு தேவர் அய்யா தலை மேல கல்லைத் தூக்கிப் போடப் பாத்தாங்க. அய்யா நிமுந்து பாத்தாரு. ‘முருகா’ன்னு சொன்னாரு. அவ்வளவுதான். கல்லு அப்பிடியே அந்தரத்துல நின்னுடுச்சு...’ இப்படி நிறைய சொல்லிக்கொண்டே வந்தார் மாரி.

மெயின் ரோட்டில் இருந்து பசும்பொன்னுக்குத் திரும்புகிற இடத்தில் பிரம்மாண்டமான நுழைவு வாயில், அமர்க்களமாக வரவேற்றுக்கொண்டிருந்தது.

வாகனச் சந்தடி இல்லாமல் அமைதியாக இருந்தது கிராமம். இரண்டு ஆடுகளும், ஒரு மாடும் கடந்து போயின. ஊர்க் குளத்தில் நான்குபேர் குளித்துக்கொண்டிருந்தார்கள்.

நாங்கள் ஷேர் ஆட்டோவில் இருந்து இறங்கினோம். தேவர் உறைவிடம் பூட்டியிருந்தது.

‘பக்கவாட்ல ஒரு வழி இருக்கு’ என்று சொல்லி அழைத்துப் போனார் மாரி. வருடா வருடம் தேவர் குருபூஜைக்கு வருகிறவர் என்று மாரியைப் பற்றி பாண்டியன் சொன்னது நினைவுக்கு வந்தது.

தேவர் உறங்கும் இடத்துக்குப் பின்னால் அவர் வாழ்ந்த வீடு. அதற்கு வலது பக்கம், அவர் வாழ்ந்த காலத்தில் நடந்த முக்கிய சம்பவங்களின் படத்தொகுப்பைக் கண்காட்சியாக வைத்திருந்தார்கள். அரங்கம் பூட்டியிருந்தது. முக்கியமான தினங்களில் மட்டும்தான் அது திறக்கப்படும் என்று சொன்னார்கள். பக்கவாட்டு வழிக்கு வெளியே ஒரு நூலகம். நூலக நேரம் முடிவடைந்திருந்ததால் அதுவும் பூட்டியிருந்தது.

நினைவுச் சின்னம் அப்படியே இருக்கவேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் வீட்டைச் சிதைத்துவிடாமல், கொஞ்சம் மெருகேற்றி அப்படியே வைத்திருக்கிறார்கள். வாசல் கதவும் பல நூற்றாண்டுகளாக அப்படியே இருந்தது.

அந்த வீட்டைக் கட்டியவர் பசும்பொன் தேவரின் தாத்தா ஆதி முத்துராமலிங்க தேவர். வாசலில் ஒரு கயிற்றுக் கட்டில். அதில் ஒரு பெரியவரும் ஒரு வயதான அம்மாளும் உட்கார்ந்திருந்தார்கள். அந்த அம்மாள் பெயர் காந்தி மீனா. தேவரின் மிக நெருங்கிய உறவினர். பல பிரச்னைகளுக்கும் சிக்கல்களுக்கும் நடுவே இந்த இடத்தைப் பராமரித்து வருபவர் என்பது பேசிப் பார்த்ததில் தெரிந்தது.

நாங்கள் மெதுவாக ஒவ்வொன்றாகச் சுற்றிப் பார்த்தோம். ஒரு தேசியத் தலைவர், எவ்வளவு எளிமையாக வாழ்ந்திருக்கிறார் என்பதைப் பார்க்கப் பார்க்க பிரமிப்பாக இருந்தது.

வீடு ஒன்றும் மிக பிரம்மாண்டமானது அல்ல. காரைக்குடி பக்கத்து பழங்கால வீடுகளோடு ஒப்பிட்டால், அதில் பாதிகூட இருக்காது. நடுவே முற்றம். பக்கவாட்டில் பூஜை அறை. இன்னொரு அறை. பின்புறம் ஒரு அறை. பின்னால் போக முடியாமல் தடுப்புப் போட்டிருந்தார்கள்.

வீடு முழுக்க புகைப்படங்கள், பல்வேறு அமைப்பினர் தேவரைப் பாராட்டி எழுதிய பாராட்டுப் பத்திரங்கள்.. பிரேம் செய்து மாட்டப்பட்டிருந்தன.

நாங்கள் எதிர்ப்பட்டவர்களிடம் எல்லாம் பேசினோம். அவர்களுக்கெல்லாம் தேவர் என்பவர் தேசியத் தலைவர், மாமனிதர் என்பதையெல்லாம் தாண்டி தெய்வமாகவே இன்றைக்கும் தெரிகிறார்.

‘ஏதோ ஒரு தேர்தலு. பிரசாரத்துக்குப் போயிட்டு இங்ஙனதான் தேவர் அய்யா குதிரை மேல வந்து இறங்கினாரு. சும்மா ‘தகதக’ன்னு என்னா ஆகிருதி தெரியுமா? என் கண்ணுக்குள்ளேயே நிக்குது’ என்கிறார் ஒரு எண்பது வயதுப் பெரியவர்.

ஓர் இளைஞர் சொன்னார்: ‘தேவர் அய்யாவைப் புடிக்கிறதுக்கு போலீஸு வந்துது. வாசல்ல அய்யா நின்னுக்கிட்டிருக்காக. கிட்டப் போனா காணல. அந்தா அந்த மரத்தாண்ட சிரிச்சிக்கிட்டே நிக்காக. திடீர்னு எதுத்தாப்ல. கொஞ்ச நேரத்துல தேவர் அய்யா மாதிரியே ஏழெட்டு உருவங்க. துப்பாக்கிய தூக்கின போலீஸ்காரவுக மெரண்டு போயி ஓடிப் போயிட்டாக. இதை எங்கப்பா சொல்லிக்கிட்டே இருப்பாரு.’

பூஜை அறை பூட்டியிருந்தது. இரும்புக் கம்பிக்குப் பின்னால் இருந்து பார்த்துக்கொண்டிருந்தபோது, மாரி சொன்னார். ‘தேவர் அய்யா எப்பவும் புலித் தோல் மேல உக்காந்துக்கிட்டுதான் பூஜை செய்வாங்க. இங்க இருக்குமே!’

புலித்தோல் இல்லை. ஒருவரிடம் கேட்டபோது சாவதானமாகச் சொன்னார். ‘யாராவது எடுத்துட்டுப் போயிருப்பாங்க. இல்ல, வேற எங்கயாவது இருக்கும்.’

- தொடரும்

5 comments:

v s kathir said...

super

v s kathir said...

super

Unknown said...

anna, i'm venkat its so nice

இரா.ச.இமலாதித்தன் said...

வணக்கம்,

உங்களது வலைத்தளம் கண்டு மகிழ்ச்சி.உங்களது இந்த தளம் மேலும் பல கட்டுரைகளை தாண்டி பயணிக்க வேண்டுமாய் ஆசைகொள்கிறேன்.மேலும் உங்களது வலைதளத்தில்,Followers Gadget ஐ இணைத்தால் நன்றாக இருக்குமே.மேலும் உங்களை பற்றிய எந்த தகவலும் அறிய தரவில்லை.இருந்தாலும் பரவாயில்லை.உங்களை தொடர்பு கொள்ள அலைபேசி என்னை கொடுக்கா விட்டாலும், மின்மடல் முகவரியை தரலாமே.

மின்மடலை இங்கே தருவதன் மூலம் உங்களுக்கு எந்தவித இடைஞ்சலும் இல்லை என்றே நான் கருதுகிறேன்.

நன்றி.

பாலு சத்யா said...

திரு. ச. இமலாதித்தன். வணக்கம். நீங்கள் குறிப்பிட்டது போல இத்துடன் என் விவரங்களையும் மின்னஞ்சல் முகவரியையும் இணைத்துள்ளேன். நன்றி.