Tuesday, December 7, 2010

பல்கலைக்கழகத்துக்குப் போன பழக்கடைக்காரர்




‘பஸ்ஸு வந்துரும்டா’ என்றேன் நான்.

‘பத்தே நிமிசம்டா. பஸ்ஸு வர்றதுக்குள்ள வந்துரலாம் வாடா!’ என்றபடி, என்னை இழுத்துக்கொண்டு பஸ்ஸ்டாண்டுக்கு எதிர்ப்புறம் இருந்த கற்பகம் ஓட்டலுக்குப் போனான் ரமேஷ்.

வாசலில் ஒரு தள்ளுவண்டியில் பழங்கள் பரப்பியிருக்க, அவர் ஆப்பிள் பழங்களைத் துணியால் துடைத்து, அடுக்கிக் கொண்டிருந்தார். முகத்தின் கால் வாசியை மறைத்ததுபோல சோடாபுட்டிக் கண்ணாடி. வேட்டியை மடித்துக் கட்டியிருந்தார். ரமேஷைப் பார்த்து சிரித்தார்.

‘வணக்கம் தோழர்!’ என்றான் ரமேஷ்.

‘வணக்கம். வாங்க! என்னா காலேஜுக்குப் போகலியா?’

‘கௌம்பிட்டோம். பஸ்ஸு வர்றதுக்கு டைம் இருக்கு. புதுசா ஒரு கதை எழுதினேன். அதான் படிச்சுக் காட்டலாம்னு...’

‘படிங்க. படிங்க. இது யாரு?’

‘என் ஃபிரெண்டு. பாலு...’

ரமேஷ் தன் கையில் வைத்திருந்த காலேஜ் நோட்டில் ஒரு பக்கத்தைப் பிரித்து படிக்க ஆரம்பித்தான். அவர் பழங்களை அடுக்கியபடியே கேட்டார். அவன் படித்து முடித்ததும் முதலில் மனமாரப் பாராட்டினார். பிறகு விமர்சனம் சொன்னார். எங்கேங்கே தவறு, எப்படி திருத்தினால் சரியாக இருக்கும் என்று அவன் காயப்பட்டுவிடாமல் சொன்னார். ரமேஷ் குறித்துக் கொண்டான். நாங்கள் விடைபெற்றோம். காலேஜ் பஸ்ஸில் ஏறும்போது அவர் பெயர் தேனி சீருடையான் என்று சொன்னான் ரமேஷ்.

‘எழுத்தாளரா இவர்? பழக்கடை வைத்திருக்கிறாரா?!’ எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரைப் பற்றி அவன் மேலும் சொன்னான். சிறு வயதில் அவருக்குப் பார்வை பறிபோய்விட்டது. பார்வையற்றோர் பள்ளியில் படித்தார். பிறகு கண்ணில் ஆபரேஷன் நடந்து பார்வை வந்தது. சிறுகதைத் தொகுதி, நாவல் வெளியிட்டிருக்கிறார். அவை இரண்டு பல்கலைக் கழகத்தில் பாடநூலாக இருக்கின்றன. நான் பிரமித்துப் போனேன்.

ரமேஷ் வைத்யா எழுதி, அவரிடம் வாசித்துக் காண்பித்த அந்தச் சிறுகதை, எழுத்தாளர் பொன் விஜயன் தொகுத்த ஒரு தொகுப்பில் வெளியானது. பிறகு ரமேஷோடு நானும் சேர்ந்துகொண்டேன். படைப்பாளியாக. சிறுகதை, கவிதை என்கிற பெயரில் எதை எழுதிக் கொண்டுபோனாலும் பொறுமையாகக் கேட்பார். பொறுப்பாக விமர்சனம் செய்வார். தொடர்ந்து எழுதச் சொல்லி ஊக்கப்படுத்துவார். இன்றைக்கும் தேனியில் எழுத்தாளர்கள் ம. காமுத்துரையோ, அல்லி உதயனோ, இதயகீதனோ எதை எழுதினாலும் முதலில் அவரிடம் காண்பிக்கத்தான் ஓடுகிறார்கள்.

‘நிறங்களின் உலகம்’ நாவலை விமர்சிப்பதற்கு முன்பாக, தேனி சீருடையானைப் பற்றிய ஒரு அறிமுகம் தேவை என்று தோன்றியது. அதற்காகத்தான் இந்த முன்னுரை.

0

பார்வையை இழந்த ஒரு சிறுவன், சென்னை பூந்த மல்லியில் இருக்கும் பார்வையற்றோர் பள்ளியில் பத்து ஆண்டுகள் படிக்க நேர்கிறது. இந்த ஒற்றைவரி வாழ்க்கைதான் இந்த நாவல். கண்ணிலாத ஒருவனின் உலகம் அந்தந்தக் கால மன நிலையில் விரிகிறது. தமிழில் இப்படி ஒரு நாவல் இதுவரை வந்திருக்கிறதா என்பது சந்தேகமே.

‘வெளிச்சம் நிறைந்த கும்மிருட்டில் மூழ்கியிருந்தது அறை. ஒளியின் நிறமும் இருட்டின் நிறமும் பின்னிப் பிணைந்து முகத்தில் அப்பிக் கொண்டன. சொதசொதத்த முகவெளியில் சோகக் கோடுகள் பதியமிட்டன. ரம்பம் ஒன்று கண்களைக் கீறி ரத்தம் வராத ரணத்தை ஏற்படுத்தியது. சப்தமும் சப்தமின்மையுமான எல்லைகளுக்குள் சிறைப்பட்டுக் கிடந்தேன் நான்.’

மேலே சொன்ன வர்ணனையை எந்த எழுத்தாளரும் எழுதிவிட முடியாது என்றுதான் தோன்றுகிறது. இது தேனி சீருடையான் பார்வையிழந்திருந்த காலத்தில் அனுபவித்த அவலத்தில் முகிழ்த்த வர்ணனை.

குடும்பத்தை இறுக்கிப் பிடித்திருக்கும் வறுமை, பார்வையிழந்த அக்கா, வீட்டை கவனிக்காமல் திரியும் தந்தை, அப்பாவி அம்மா என்கிற குடும்பப் பின்னணியில் பாண்டியின் கதை விரிகிறது. இடையில் பார்வை பறிபோக, அவனுடைய மாமா பாண்டியை அழைத்துப் போய் சென்னையில் உள்ள ஒரு பார்வையற்றோருக்கான பள்ளியில் சேர்த்துவிடுகிறார். அங்கிருந்து புதுப் புதுப் பாத்திரங்கள் கதையில் பாண்டியுடன் சேர்ந்து கொள்கின்றன.

பார்வையில்லை, புது இடம், புது மனிதர்கள், புதுவிதமான (பிரெய்லி முறை) கல்வி. தடுமாறிப் போகிற பாண்டி கொஞ்சம் கொஞ்சமாக அந்த வாழ்க்கைக்குப் பழகி கொஞ்சம் கொஞ்சமாக அதில் கரைந்து போகிறான். பத்மநாபன், கன்னியம்மாள், சென்னியப்பன், பொன்னுச்சாமி சார், பாண்டுரங்கன்... என நாவல் முழுக்க மறக்க முடியாத பாத்திரங்கள்.

படிப்பு முடிந்து பள்ளியை விட்டு வெளியேற வேண்டிய சூழல். நண்பன் பத்மநாபன் அழுதுகொண்டிருக்கிறான். பாண்டி அவனைத் தேற்றுகிறான். நண்பன் சொல்கிறான்: ‘என் பசியை இன்னக்கி வரக்யும் அரசாங்கம் தீத்து வச்சுச்சு; இனிமே யார் அதைச் செய்வா?’ வெகு சாதாரணமாக சொல்லப்படும் இந்த வசனம் நம்மை அதிர்ந்து போக வைத்துவிடுகிறது. உண்மையில், பார்வையற்றோர் பள்ளியில் படிக்கும் பெரும்பாலான சிறுவர்களின் முதல் பிரச்னை வறுமையாகத்தான் இருக்கிறது.

இந்த வறுமை பாண்டியின் வாழ்க்கையில் அழுத்தமாகக் காண்பிக்கப்படுகிறது. ஒரு முறை விடுமுறைக்கு வீட்டுக்குப் போகிறான். அவனுடைய பிரெய்லி புத்தகங்களையும் அவன் வாங்கியப் பதக்கத்தையும் விற்றுவிட்டிருக்கிறாள் அம்மா. அதிர்ந்துபோகிற பாண்டியிடம், ‘கோவிச்சுக்காதய்யா! அக்காவுக்கு நடு முதுகுல ராஜ பிளவை பொறப்பட்டு சாகக் கெடந்தப்போ, வைத்தியச் செலவுக்குக் காசு இல்லாம ஒம் புஸ்தகத்தையும் பதக்கத்தையும் வித்துட்டோம். கஞ்சி இல்லாட்டிக்கூட ஈரத் துணிய இறுக்கிக் கட்டிப் படுத்துக்கலாம். ரத்த உசுர். சாகக் கெடக்கறப்போ எப்படிய்யா பாத்துக்கிட்டு சும்மா இருக்க முடியும்?’ என்கிறாள் அம்மா.

கிராமத்து வாழ்க்கையும் பிரமிப்பூட்டும் சென்னை வாழ்க்கையும் பார்வையற்ற ஒருவனின் மன நிலையில் இருந்து சொல்லப்படுவது இந்நாவலின் புதிய அணுகு முறை. மிக எளிமையான உரையாடல்களும், மிரட்டாத, தெளிவான நடையும்தான் இந்த நாவலின் பலம் என்றுகூடச் சொல்லலாம்.

முழு நாவலையும் படித்து முடித்ததும் பார்வையற்றவர்களோடு கலந்து வாழ்ந்த உணர்வு ஏற்படுகிறது. அவர்களுக்கேயான இயல்பான வாழ்வியல் சிக்கல்கள், இருட்டைப் போலவே பயமுறுத்தும் எதிர்காலம் எல்லாவற்றையும் கொண்டுவந்து கண்முன் நிறுத்துகிறார் சீருடையான். ஆனாலும் நாவலின் முடிவில் கீற்றாகக் கிளம்பும் நம்பிக்கைதான் அவரை யார் என்று நமக்கு இனம் காட்டுகிறது.

‘படிப்பு வெள்ளை நிறம். முடிப்பு கருநீல நிறம்; முடித்துவிட்டேன் என்ற கருத்து வெளிர் மஞ்சள் நிறம். ஏன் இப்படி நிறங்கள் உண்டாகின்றன? மனக் கற்பனைக்குத் தகுந்தபடி நிறங்களா? நிறங்கள் கற்பனையை உண்டாக்குகின்றனவா? ஒரு வேளை பிறவிக் குருடனாய் இருந்தால் நிறங்கள் புரியாமல் போயிருக்குமோ? அப்படியும் சொல்ல முடியவில்லை. கங்காதரன் பிறவிக் குருடன். பச்சை நிறம் எப்படி இருக்கும் என்று கேட்டபோது இலை போலக் கையை விரித்துக் காட்டினான். ‘வெள்ளை நிறம்?’ ‘பகல் முடிந்த இருள் போல இருக்கும்.’

இப்படி ‘நிறங்களின் உலகம்’ நாவலில் விரிகிற தேனி சீருடையானின் உலகம் மிகப் புதியதாக இருக்கிறது. கதையின் நாயகன் பாண்டி அனுபவிக்கிற அத்தனை உணர்வுகளையும் படிக்கிற நம்மையும் தொற்றிக்கொள்ளச் செய்கிறது. வான வில்லைப் போல அழகான, அதே சமயம் யதார்த்தமான படைப்பு.

நூல்: நிறங்களின் உலகம்
ஆசிரியர்: தேனி சீருடையான்
வெளியீடு: அகரம், மனை எண். 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் - 613 007.
விலை: ரூ. 150/-.

(அம்ருதா இலக்கிய இதழில் வெளியானது)

3 comments:

TAMILSUJATHA said...

நீண்ட இடைவெளி விட்டு போஸ்ட் போட்டாலும், பிரமாதமான விஷயங்களாகப் போடறீங்க!

Prasanna Rajan said...

எங்க ஊர்காரர் சீருடையான் என்பதில் எனக்கு அதிக பெருமிதம். அவருடன் என் தந்தைக்கு 20 வருடங்களாக அறிமுகம். அவரை பற்றி பதிவு போட்டமைக்கு நன்றி...

veligalukkuappaal said...

comrade balu, eppadi irukeenga?
iqbal