Monday, June 29, 2009

முப்பதாயிரத்தில் ஒரு குறும்படம்


முதல் தலைமுறை


‘சாமி! புள்ளையாரப்பா! எப்பிடியாவது என்னை கணக்குலயும் இங்கிலீஷ்லயும் மட்டும் பாஸ் பண்ண வச்சுடு. அப்பிடியே கந்தசாமி வாத்தியாரை மட்டும் வேற ஸ்கூலுக்கு மாத்திடு!’ இப்படி அரசமரத்தடி பிள்ளையாரிடம் வேண்டிக் கொள்கிற கிராமத்துச் சிறுவர்களை நிச்சயம் பார்த்திருப்போம். அப்படி ஒரு சிறுவனை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் குறும்படம்தான் ‘முதல் தலைமுறை.’

இந்தப் படத்தை இயக்கியிருக்கும் விஜயன் சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் பர்மா பஜாரில், இசைக் கருவிகளை விற்கும் ஒரு கடையை நடத்தி வரும் சாதாரண தெருக்கடை வியாபாரி. வடசென்னை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாராக இருக்கிறார்.

“ஆறு மாசத்துக்கு முன்னாடி ‘பதிமூணில் ஒண்ணு’ன்னு ஒரு சிறுகதையைப் படிச்சேன். எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அந்தச் சிறுகதையை எழுதியிருந்தார். அதைப் படிச்சவுடனேயே அதை எப்பிடியாவது படமா எடுத்துடணும்னு தோணிச்சு. தோழர்களோட உதவியோட குறும்படமா எடுத்துட்டேன். மொத்தம் ஏழு நாள் ஷூட்டிங் நடந்தது. ஆவடி பக்கத்துல இருக்குற பாண்டேஸ்வரம், சென்னையிலருந்து இருபத்தஞ்சு கிலோ மீட்டர் தூரத்துல இருக்குற ஞாயிறு கிராமம்னு பல இடங்களுக்குப் போய் படமெடுத்தோம். அந்த கிராமத்துல இருக்குற மக்களுக்கு குறும்படம்ங்கறதே புதுசான ஒண்ணா இருக்குது. அது நல்ல அனுபவம்” என்கிறார் இயக்குநர் விஜயன்.

சரி. ‘முதல் தலைமுறை’ குறும்படத்தின் கதை என்ன?

நடராஜன். ஒன்பதாவது முடித்துவிட்டு பத்தாம் வகுப்புக்குப் போகும் கிராமத்துச் சிறுவன். அவனுடைய அப்பாவுக்கு ஆடு மேய்ப்பதுதான் பரம்பரைத் தொழில். ‘படித்தது போதும். ஆடு மேய்க்கப் போ!’ என்கிறார் அப்பா. அவனுடைய மாமா பட்டாளத்தில் இருந்தவர். படிப்பின் அருமை தெரிந்தவர். அவர் படிப்பு முக்கியம் என்று அவன் அப்பாவிடம் வலியுறுத்துகிறார். படிக்கப் போகிறான் நடராஜன்.

தமிழ்நாட்டு கிராமத்து மாணவர்களுக்கே உரித்தான சாபம் கணிதமும் ஆங்கிலமும். அது நடராஜனையும் விட்டுவைக்கவில்லை. குறைந்த மார்க் வாங்கியதற்காக வறுத்தெடுக்கிறார் கணக்கு வாத்தியார். கணக்கில் பாஸாகவேண்டும் என்பதற்காகவே குலசாமியான சுடலை மாடசாமியில் இருந்து மாறி, மேட்டுத் தெருப் பையன்கள் கும்பிடும் பிள்ளையாரைக் கும்பிடுகிறான் நடராஜன். பிறகு, அந்தக் கணக்கு வாத்தியாரிடமே ட்யூஷன் சேருகிறான். கணக்கில் பாஸாகிறான்.

அடுத்து ஆங்கிலத்தில் பாஸாகவேண்டும் என்பதற்காக அடுத்த ஊரில் இருக்கும் சர்ச்சுக்கு நடந்தே போய் வேண்டிக்கொள்கிறான். பிறகுதான் தெரிகிறது, இயேசுநாதருக்கே ஆங்கிலம் தெரியாது, அவருடைய தாய் மொழி ஹீப்ரு என்பது. அந்தச் சமயத்தில் அவனுடைய பள்ளிக்குப் புதிதாக வருகிறார் ஒரு ஹெட்மாஸ்டர். கருணை அடிப்படையில் இதுவரை பாஸாகிவந்த பதிமூன்று மாணவர்களின் பெற்றோர்களை அழைக்கிறார். ‘இதோ பாருங்க! நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட். இனிமே நான் இந்த ஸ்கூலுக்கு நல்ல ரிசல்ட் காண்பிக்கணும். உங்க பசங்களை வேற ஏதாவது ஸ்கூல்ல சேத்துவிட்டுடுங்க’ என்று ஒரே போடாகப் போடுகிறார். அந்தப் பதிமூன்று மாணவர்களில் நடராஜனும் ஒருவன். இந்தப் பள்ளியைவிட்டால் நடராஜன் வேறு எங்கே போவான்? அவனுடைய தலைமுறையிலேயே முதன்முதலாக படிக்கவந்தவன் அவன். எப்படியாவது அவனைத் திரும்ப பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டி, நடராஜனும் அவனுடைய மாமாவும் திரும்பத் திரும்ப ஹெட்மாஸ்டரைப் பார்க்கப் படையெடுக்கிறார்கள். அத்தோடு முடிகிறது படம்.

“இந்தப் படத்தை சென்னை புத்தகக் கண்காட்சியிலயும் சேலத்துலயும் திரையிட்டோம். சேலத்துல ஒரு தலைமையாசிரியர் ‘இது ஆசிரியர்களுக்கு எதிரா இருக்கு’ன்னு சொன்னார். ‘ஒரு படைப்புன்னா சில குறைகளை சுட்டிக்காட்டத்தான் செய்யும்’னு இதுக்கு தமிழ்ச்செல்வனே பதில் சொன்னார்”என்கிறார் விஜயன்.

நடராஜனாக நடித்திருக்கும் நிஜந்தனும் மாமாவாக நடித்திருக்கும் இசையரசனும் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். முரளிதரனின் உறுத்தாத இசையில் நா.வே. அருளின் இரண்டு பாடல்களும் இனிமை. கரிசல் காட்டு கிராமத்துக்கே நம்மை அழைத்துப் போய்விடுகிறது புதுயுகம் நடராஜனின் கேமரா.

ஒரு பக்கம், முப்பது கோடி, முந்நூறு கோடி என்று படா பட்ஜெட்டுகளில் திரைப்படங்கள் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கின்றன. எளிமையான, நல்ல சேதியைச் சொல்லும் இந்தக் குறும்படத்தின் மொத்தச் செலவு எவ்வளவு தெரியுமா? முப்பதாயிரம் ரூபாய்.

நாட்டின் ஜீவனாக இருப்பது கிராமங்களா? ஆம். நிச்சயமாக. அப்படியானால் அரசுப் பள்ளிகளில் மட்டும் கல்வித்தரம் கொஞ்சமும் உயராமல் இருப்பது ஏன்? இந்தக் கேள்வி குறும்படம் பார்த்து முடிந்ததும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

6 comments:

Seshadri said...

where can we see this movie....

Seshadri said...

where can we see the movie

தருமி said...

இப்படத்திற்குரிய தொடுப்பைக் கொடுத்தால் நலமாயிருக்குமே ...

தருமி said...

இப்படத்திற்குரிய தொடுப்பைக் கொடுத்தால் நலமாயிருக்குமே ...

பாலு சத்யா said...

இந்தப் படம் ஒரு விழாவில் பார்த்தது. அந்த இயக்குநரின் தொலைபேசி எண்கூட என்னிடம் தற்பொது இல்லை. எப்படியாவது வாங்கி, தொடுப்பைக் கொடுக்கப் பார்க்கிறேன். தங்கள் கருத்துக்கு நன்றி.

தருமி said...

முயற்சிக்கு நன்றி

comment moderation இருக்கும்போது word verification தேவையில்லையே ...